Saturday, November 6, 2010

64 :14-அம்சத் திட்ட வரைவு!

   1983, டிசம்பர் 1-ஆம் தேதிய ஜனாதிபதியின் கூற்றின் ஆறாம் பத்தியின்
      நியதிகளின்படி கொழும்பு, புதுதில்லி கலந்துரையாடல்களின் முடிவாலெழுந்த
      பின்வரும் பிரேரணைகள் அனைத்துக் கட்சிகள் மாநாட்டிற்கு கருத்தில் எடுத்துக்
      கொள்வதற்குப் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. இப்பிரேரணைகள் இலங்கையின்
      ஐக்கியம், முழுமை தொடர்பானவையாகும்; அத்துடன் அனைத்துக் கட்சிகள் மாநாட்டின்
      நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக அமைவனவாகும்.
      1. மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் தீர்மானங்களால் அவை உடன்பட்டு, அந்த
      மாவட்டத்தினுள்ளே நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பினால் (மக்கள்
      தீர்ப்பினால்) அங்கீகரிக்கப்படின், ஒரு மாகாணத்திலுள்ள மாவட்ட அபிவிருத்திச்
      சபைகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு அதிகமான பிரதேச சபைகளாக இணைவதற்கு
      அனுமதிக்கப்படுதல். 2. முறையே வடக்கு மாகாணத்தினதும் கிழக்கு மாகாணத்தினதும்
      மாவட்ட சபைகளைப் பொறுத்தவரை, பெரும்பான்மை உறுப்பினர்கள் ராஜினாமா செய்தமை
      காரணமாக, அவை இயங்காதிருப்பதனால் அந்த ஒவ்வொரு மாகாணத்தினுள்ளும் அவைகளின்
      இணைப்பை ஏற்றுக் கொள்ளல்.
      3. தீர்மானிக்கப்படுமிடத்து, ஒவ்வொரு பிரதேசமும் ஒவ்வொரு பிரதேச சபையைக்
      கொண்டிருக்கும். ஒரு பிரதேச சபையில், பெரும்பான்மை வகிக்கும் கட்சியின்
      தலைவர் அந்தப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக ஜனாதிபதியால் முறைமையாக
      நியமிக்கப்படும் மரபு நிலை நிறுத்தப்படும். பிரதேசத்திற்கான ஓர் அமைச்சர்
      குழுவை முதல் அமைச்சர் அமைப்பார்.
      4. ஜனாதிபதியும் பாராளுமன்றமும் பிரதேசங்களுக்குக் கை மாற்றம் செய்யப்படாத
      எல்லா விஷயங்களுக்கும், அத்துடன், பொதுவாக முழுக் குடியரசினதும் இறைமை,
      முழுமை, ஐக்கியம், பாதுகாப்பு, வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியவற்றைப்
      பாதுகாத்தல் தொடர்பான மற்றெல்லா விஷயங்களுக்கும் முழு மொத்தமான பொறுப்பைத்
      தொடர்ந்து வகிப்பர்.
      5. பிரதேசத்தின் சட்ட அதிகாரம் பிரதேச சபைகளுக்கு உரிமையாக்கப்படும். அவை
      பிரதேசத்தின் உள்ளகச் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுதல், நீதி நிர்வாகம்,
      சமூக, பொருளாதார அபிவிருத்தி கலாசார விஷயங்கள், காணிக் கொள்கை ஆகியன உள்பட,
      சில விதித் துரைத்த நிரற்படுத்தப்பட்ட விஷயங்கள் தொடர்பாகச் சட்டங்களை
      ஆக்கவும் நிறைவேற்றி அதிகாரங்களைச் செயற்படுத்தவும் அதிகாரத்தைக்
      கொண்டிருக்கும். பிரதேசங்களுக்குக் குறித்தொதுக்கப்பட வேண்டிய விஷயங்களின்
      நிரல் விவரமாகத் தயாரிக்கப்படும்.
      6. வரிகள், தீர்வைகள் அல்லது கட்டணங்கள் ஆகியவற்றை அளவிடுவதற்கும் பிரதேச
      சபைகள் அதிகாரம் பெற்றிருக்கும். அத்துடன், கடன்கள் வாயிலாக வளங்களைத்
      திரட்டுவதற்கும், அந்த வரும்படிகள் குடியரசால் கொடுக்கப்படும் மானியங்கள்,
      ஒதுக்கீடுகள், உதவித் தொகைகள் ஆகியன கொண்ட அந்தக் குறிப்பிட்ட
      பிரதேசத்திற்கெனத் தாபிக்கப்படும் திரட்டிய நிதியமொன்றில் வரவு வைக்கப்படும்.
      காலத்துக்குக் காலம் நியமிக்கப்படும் பிரதிநிதித்துவ நிதி ஆணைக்குழுவின்
      விதப் புரைகளின் பேரில் நிதி வளங்கள் பிரதேசங்களுக்குப் பங்கீடு
செய்யப்படும்.
      7. ஒவ்வொரு பிரதேசத்திலும் மேல் நீதி மன்றங்களின் அமைப்புக்கு ஏற்பாடு
      செய்யப்படும். இலங்கையின் உயர் நீதிமன்றம், முன் முறையீடுகளை ஏற்று
      ஆராய்தலையும், அரசியல் யாப்புச் சார்ந்த சட்ட அதிகாரத்தையும் செயற்படுத்தும்.
      8. (அ) பிரதேசத்தின் அலுவலர்களையும் ஏனைய பகிரங்க ஊழியர்களையும் (ஆ)
      பிரதேசத்துக்குத் துறைமாற்றுக்காளாத்தக்க அத்தகைய ஏனைய அலுவலர்களையும்
      பகிரங்க ஊழியர்களையும் உள்ளடக்கியதாக ஒவ்வொரு பிரதேசமும் பிரதேச சேவை
      ஒன்றினைக் கொண்டிருக்கும், ஆட்சேர்ப்புக்கும், பிரதேச சேவையின் உறுப்பினர்
      தொடர்பான ஒழுக்காற்று அதிகாரிகளைச் செயற்படுத்துவதற்கும் பிரதேச பகிரங்க சேவை
      ஆணைக்குழு ஒன்றை ஒவ்வொரு பிரதேசமும் கொண்டிருக்கும்.
      9. இலங்கையின் ஆயுதப்படைகள் தேசிய இனத்தின் நிலையைப் போதுமானளவு
      பிரதிபலிப்பனவாக இருக்கும். வடக்கு, கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ளகப்
      பாதுகாப்புக்கான போலீஸ் சேவைகள் அந்தப் பிரதேசங்களின் இனத்தின் அமைப்பைப்
      பிரதிபலிப்பனவாகவும் இருக்கும்.
      10. திருகோணமலைத் துறையையும், துறைமுகத்தையும் நிர்வகிப்பதற்கு மத்திய அரசின்
      கீழ் துறைமுக அதிகாரி சபை ஒன்று நிறுவப்படும். துறைமுக அதிகார சபையின்
      நிர்வாகத்தின் கீழ் வருவதற்கான விஷயங்களும் சபைக்குக் குறித்தொதுக்கப்படும்
      அதிகாரங்களும் மேலும் ஆராயப்படும்.
      11. காணி நிர்ணயம் பற்றிய ஒரு தேசியக் கொள்கை, காணிக் குடியேற்றத்தை எந்த
      அடிப்படையில் அரசு மேற்கொள்ளல் ஆகியன ஆய்ந்து நிறைவேற்றப்பட வேண்டியனவாகும்.
      பெரிய செயற்றிட்டங்கள் மேல் உடன்பாடு ஏற்படுதற்கு உட்பட்டுக் குடிநிலைச் சம
      நிலையை மாற்றாதவாறு இனவிகித சமத்தை அடிப்படையாகக் கொண்டு குடியேற்றத்
      திட்டங்கள் யாவும் அமைதல் வேண்டும்.
      12. அரச கரும மொழியான சிங்களம், தேசிய மொழியான தமிழ் ஆகியவை தொடர்பான அரசியல்
      யாப்பையும் ஏனைய சட்டங்களையும் அத்துடன், தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவை
      தொடர்பான அதே போன்ற சட்டங்களையும் ஏற்றுக் கொள்ளப்படுதலும்
      நடைமுறைப்படுத்தலும் அவசியம்.
      13. தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவைப்படக்கூடிய அரசியலமைப்பு
      மாற்றங்களையும் சட்ட மாற்றங்களையும் தயாரிப்பதற்கு மாநாடு ஒரு குழுவை
      நியமித்தல் வேண்டும். அரசாங்கம் தனது செயலகத்தையும் அவசியமான சட்ட
      அலுவலகங்களையும் வழங்கும்.
      14. சட்டவாக்க நடவடிக்கைக்காகப் பாராளுமன்றத்துக்குச் சமர்பிக்கப்படுதற்கு
      முன்னர், அனைத்துக் கட்சிகள் மாநாட்டுக் கருத்து இணைக்கங்களே ஐக்கிய தேசியக்
      கட்சியின் நிறைவேற்றுக் குழுவினாலும் அநேகமாக ஏனைய கட்சிகளது நிறைவேற்றுச்
      சபைகளினாலும் கருத்துக் கெடுத்துக் கொள்ளப்படும்.
      இந்தப் 14-அம்சத் திட்ட வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டு முறையாக
      நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், இலங்கையில் இத்தனை ரத்தம்
      சிந்தப்பட்டிருக்காது. ஒரு தேசம் என்கிற கட்டுக்குள் சிங்களரும் தமிழரும்
      ஒற்றுமையாக சம உரிமைகளுடன் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அதுவல்லவே சிங்கள
      இனவாத அரசின் நோக்கம். தில்லியில் இந்திரா காந்தி அம்மையாரிடம் நல்ல
      பிள்ளைகளாகத் தலையை ஆட்டிவிட்டு வந்தவர்கள், கொழும்பு திரும்பியபோது தங்கள்
      சுய உருவத்தைக் காட்டத் தொடங்கி விட்டனர்!

No comments:

Post a Comment