Sunday, November 7, 2010

126:வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தல்,127:தேர்தல் குளறுபடிகள்!

 126:வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தல்
இந்திய அமைதிப் படையின் பணி குறித்து உலகப் பத்திரிகையாளர்களும், இந்தியப்
      பத்திரிகையாளர்களும் தங்கள் விமர்சனங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
      ஆசியா வீக், டைம், நியூஸ்வீக் ஆகிய சர்வதேசப் பத்திரிகைகளும், இந்தியாவின்
      இந்தியா டுடே, சண்டே இதழ்களும் வெளியிட்ட செய்திகள் பெரும்பாலும் அமைதிப்
      படையின் செயல்பாடுகளைக் கண்டித்தன என்றே சொல்லவேண்டும். நல்லூர் கந்தசாமி
      கோயிலில் 50 ஆயிரம் பேர் அடைபட்டு, உணவுக்கும், படுத்துறங்கவும், இயற்கை
      உபாதைகளைக் கழிக்கவும் மக்கள் படும் துன்பங்கள் படங்களுடன் வெளியாயிற்று.
      சண்டே இதழ் விடுதலைப் புலிகளின் நிலையை மறைமுகமாக ஆதரித்தும், இந்தியா டுடே,
      இந்திய ராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் அட்டைப்
      படத்துடன் செய்திக் கட்டுரைகளை வெளியிட்டன. லண்டனில் இருந்து வெளி வரும்
      பத்திரிகைகளோ, ராஜதந்திர ரீதியில் தங்களது விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டன.
      இவ்வாறான செய்திகளின் மூலம் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் வன்னியின் காட்டுப்
      பகுதியில் முகாம் அமைத்து கொரில்லாத் தாக்குதலைத் தொடர்கிறார்கள் என்றும்,
      பிரபாகரனின் மனைவி மதிவதனி, குழந்தைகள் உள்ளிட்டவர்கள் நல்லூர் கந்தசாமி
      கோயிலில் மக்களோடு மக்களாக அடைபட்டிருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது.
      சாவகச்சேரி சந்தையில் வீசப்பட்ட குண்டுகளால் ஏற்பட்ட நாசமும், யாழ்ப்பாணம்
      மருத்துவமனை குண்டுவீச்சு அவலமும் உலகின் கண்களுக்குத் தெரியவந்தது. டைம்
      பத்திரிகை, அகதி முகாம் மீது குண்டு வீசித் தாக்கியதை படங்களுடன்
      வெளியிட்டிருந்தது. இந்தியா டுடே, இந்தியச் சிப்பாய் உயிரிழப்பைப் பெரிதாக்கி
      தனிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இவையெல்லாமாகச் சேர்ந்து, இந்திய
      நாடாளுமன்றத்தில் பெரும் ரகளையை ஏற்படுத்தியது. இதற்கான அரசு பதிலால்
      உறுப்பினர்கள் கோபமுற்று அவையைவிட்டு வெளியேறினர்.
      இலங்கையின் கனவுக் கதாநாயகன் விஜயகுமாரதுங்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் மகள்
      சந்திரிகாவின் கணவர். வடக்கின் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண பல முயற்சிகளை
      விஜயகுமாரதுங்காமேற்கொண்டவர். அரசே எதிர்த்தும் யாழ்ப்பாணப் பயணம்
      மேற்கொண்டதன் மூலம் சிங்களக் கைதிகள் விடுவிக்கப்படவும் காரணமாக இருந்தவர்.
      அப்போது கிட்டு, யாழ் தளபதியாக இருந்து விஜயகுமாரதுங்காவையும் புத்த
      பிக்குகளையும் வரவேற்றார். விஜயகுமாரதுங்காவின் அரசியல் மற்றும்
      வடக்கு-தெற்குக்குப் பாலமாகச் செயல்படும் தன்மைகளால் வெறுப்பு கொண்ட
      ஜே.வி.பி.யினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். (பிப்ரவரி 16, 1988)
      விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ராஜீவ் காந்திக்கு அடுத்தடுத்து
      எழுதிய கடிதங்கள் மற்றும் அவ் இயக்கத்தினர் அளித்த பேட்டிகளின் அடிப்படையில்,
      இந்திய உளவுத்துறை அவர்களை மிகவும் பலவீனம் அடைந்த ஒரு குழுவாகக் கணிக்க
      முற்பட்டது. இந்தக் கணிப்பின் விளைவாக தில்லித் தலைமையும் விடுதலைப்
      புலிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியதுடன், புலிகளுக்கு எதிரான
      இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் இறங்கியது. இந்தக் கூட்டமைப்புக்கு
      ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பை தலைமை ஏற்க வைத்தனர்.
      இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்காக
      அவசரம் அவசரமாக நாடாளுமன்றத்தில் 13-வது திருத்தத்தைக் கொண்டுவர இலங்கை அரசு
      முனைப்புக் காட்டியது. இந்த நெருக்கடிக்கு மற்றொரு காரணம், இலங்கையின்
      மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டிய நிலை. மற்ற பகுதிகளுக்குத் தேர்தல் நடந்து,
      வடக்கு-கிழக்கில் தேர்தல் நடக்கவில்லையென்றால், அது ஜெயவர்த்தனாவுக்கு மிகப்
      பெரிய தலைவலி ஆகிவிடும். எனவே, வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி
      பெறுவதைவிட தேர்தலை நடத்துவது என்பது அவரது கட்சிக்கும் ஆட்சிக்கும் அவசியமான
      ஒன்றாக இருந்தது. இதன்பின்னர், வரப்போகும் அதிபர் தேர்தல் மற்றும்
      நாடாளுமன்றத் தேர்தலுக்கு இத் தேர்தல் அவசியமாயிற்று. இதேபோன்ற ஒரு நெருக்கடி
      இந்தியாவிலும் இருந்தது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இறந்தபின்னர் இலங்கை இனப்
      பிரச்னையில் தமிழக அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமும், தொடர் ஆளுநர்
      ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் தேர்தல் நடத்தவேண்டியிருந்தது. அதன்
      அடிப்படையில் அமைதிப் படை, ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரை முன்னிறுத்த
      முனைந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினருக்குப் பல வாக்குறுதிகள்
      அளிக்கப்பட்டன. தேர்தலில் நிற்க முழுமையான பாதுகாப்புக்கும், தேர்தல்
      செலவுகளுக்குப் பண உதவியும் செய்வதுடன், பாதுகாப்புக்கு என்று ஆயுதங்களும்
      வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டதாகத் தகவல்கள் உண்டு.
      எனவே, ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரும், ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினருடன்
      உடன்பாடு செய்துகொண்டு தேர்தலில் போட்டியிட முன்வந்தனர். இலங்கைத் தேர்தல்
      விதிப்படி, தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு
      செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில், ஈ.பி.ஆர்.எல்.எஃப்.,
      ஈ.என்.டி.எல்.எஃப். தங்களை உடனடியாகப் பதிவு செய்து கொண்டன. ஈரோஸ், விடுதலைப்
      புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, பிளாட், டெலோ அமைப்புகள் இதில் ஆர்வம்
      காட்டவில்லை. டெலோ பின்னாளில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். கூட்டணியுடன்
      சேர்ந்துகொண்டது. (ஆதாரம்: அசைன்மெண்ட் ஜாஃப்னா -லெப்டி.ஜெனரல் சர்தேஷ்
      பாண்டே, பக்.79) யாழ்ப்பாணவாசிகள் இந்தத் தேர்தலில் பங்கு பெறப்போவதில்லை
      என்று வெளிப்படையாகவே தெரிவித்தனர். அவர்களைச் சம்மதிக்க வைக்க இந்தியத்
      தூதர் ஜே.என்.தீட்சித் யாழ்ப்பாணத்தில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.
      கூட்டத்தில் மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றவேண்டிய அவசியம் குறித்து
      விளக்கப்பட்டது. பொதுமக்களில் சிலர் எழுந்து, ""இந்தத் தேர்தலில் பல்வேறு
      போராளிக் குழுத் தலைவர்களை அழைத்துப் பேசும்போது, விடுதலைப் புலிகளை மட்டும்
      ஏன் அழைத்துப் பேசவில்லை'' என்று கேள்வி எழுப்பினர்.
      தீட்சித் தரப்பில் பேசியவர், ""தேர்தல் என்று வரும்போது, இலங்கைத் தமிழர்கள்
      எனக் குறிப்பிடும்போது அது யாழ்ப்பாணத் தமிழர்களை மட்டும் குறிக்காது'' என்று
      விளக்கினார். ""அப்படியென்றால் இந்தக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவது
      ஏன்'' என்று கூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த
      இந்திய அதிகாரிகள், ""இந்த மேடையிலேயே விடுதலைப் புலிகளுக்கும் அழைப்பு
      விடுவதாக எடுத்துக் கொள்ளலாம். அவர்களைத் தேர்தலில் பங்கேற்குமாறு கேட்டு
      வருகிறோம். அவர்கள் சுயேச்சைகளை ஆதரித்தாலும் ஆதரிக்கலாம்'' என்றார். இந்த
      நேரத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக சிவானந்த சுந்தரம், ஈரோஸ்
      பாலகுமாரி உள்ளிட்டோர், ""இது நம்பிக்கைத் துரோகமாகவும்,
      ஏமாற்றுவித்தையாகவும் கருதப்படும்'' என்று வருத்தம் தெரிவித்தனர். (மேற்கூறிய
      நூல் பக்.79) தமிழீழப் பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான அமைதியான சூழ்நிலை
      இல்லை என்றும், தேர்தலை நடத்துவதற்குச் சாதகமான சூழ்நிலையை
      ஏற்படுத்திவிட்டுத் தேர்தலை நடத்தும்படியும் தமிழீழத்தில் உள்ள அனைத்து
      இயக்கங்களும் பொதுநல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும்
      இலங்கை-இந்திய அரசுகளுக்குக் கோரிக்கை வைத்தன.
      தேர்தலில் கடைசி நேரத்தில் நியமன பத்திரங்களைத் தாக்கல் செய்து போட்டியிட்ட
      ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்றை
      நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்றுதான் அறிக்கை வெளியிட்டது. ஆளும்
      ஜெயவர்த்தனா கட்சியின் கிழக்கு மாகாண எம்.பி.க்கள் அனைவரும் ஒருமித்த குரலில்
      தேர்தலுக்கான சூழ்நிலை இல்லை என்று ஜெயவர்த்தனாவிடம் நேரடியாகக் கூறினர்.
      ""அம்பாறை மாவட்டத்தில் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட 24,000 குடும்பங்களுக்கு
      நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. அவர்களில் 11,000 பேருக்கு மட்டும் உடனடியாக
      நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.'' (வீரகேசரி-5.11.88)
      ஒப்பந்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏராளமான சிங்களவர்கள்
      குடியேற்றப்பட்டுவிட்டார்கள். திருகோணமலை புல்மோட்டையில் ஏராளமான தமிழ்
      மக்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எல்லையில்
      உள்ள கெளளியாமடுவில் சிங்களக் குடியேற்றங்கள் பெருமளவில் நடந்துள்ளன.
      (வீரகேசரி-22.10.88). தினசரி பத்திரிகைகள் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டன.
      அது மட்டுமல்ல- ""கிழக்கு இலங்கையில் உள்ள மக்களில் கலவரங்களினால் தம்
      இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்னும்
      தமது இடங்களுக்குச் செல்ல முடியாதவாறு இருக்கின்றனர். தமிழ் மக்களுக்குத் தர
      வேண்டிய அதிகாரங்கள் வரையறுக்கப்படாது, வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை இலங்கை
      அரசியல் சட்டத்தின் கீழ் நிரந்தரமாக்காது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில்
      பொருள் இல்லையென்றும், நெருக்கடி நிலையை நீக்கி அமைதியான சூழ்நிலையை
      ஏற்படுத்த வேண்டும் என்றும், தேர்தலுக்கு முன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி,
      விடுதலைப் புலிகளை அழைத்துப் பேசவேண்டும் என்றும்,'' தமிழ்மக்கள் தரப்பில்
      கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
      127:தேர்தல் குளறுபடிகள்!      வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள்
      விடுத்த வேண்டுகோளை அடுத்து, வட மாகாணத்தில் யாரும் வேட்பு மனுவைத் தாக்கல்
      செய்யவில்லை. தேர்தல் பணிபுரிய, அதிகாரிகளாகப் பணியாற்றவும் யாரும்
      முன்வரவில்லை. கொழும்பிலிருந்து விமானத்தின் மூலம் சிங்கள அதிகாரிகள்
      வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர்,
      அமைதிப்படை பாதுகாப்புடன் கடைசி நிமிடத்தில் மனு செய்தனர் (சஞ்சீவி வார
      இதழ்-8.10.88). ஈபிஆர்எல்எஃப் குழுவினர் மனுத் தாக்கல் செய்யும் வரை (வேட்பு
      மனுத் தாக்கல் செய்ய இறுதிநாள் 10.10.1988) காத்திருந்த அமைதிப்படை, வேறு
      யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்துவிடாதபடிக்கு, அந்தப் பகுதியில் திடீரென
      ஊரடங்கு அமல்படுத்தி, அரசு அலுவலகத்தருகே நெருங்கவிடாதபடியும் செய்தது பெரும்
      புதிராக இருந்தது.
      யாழ் தவிர்த்து இதரப் பகுதிகளின் நிலை என்ன? "கடந்த ஞாயிற்றுக்கிழமை,
      திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை வவுனியா பகுதியில் உத்தியோகப்
      பற்றற்ற ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருந்தது. நகரின் உட்பிரவேசிக்கவோ,
      உள்ளிருந்து வெளியேறவோ எவரும் அனுமதிக்கப்படவில்லை, கச்சேரி (கலெக்டர்
      அலுவலகம்) மற்றும் நகரின் சுற்றுப்புறங்கள் எங்கணும் பலத்த பாதுகாப்பு
      ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன' என்று உதயன் நாளிதழ் செய்தி
      வெளியிட்டிருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினர் வவுனியா, மன்னார்
      பகுதிகளில் போட்டியிட முன்வந்த போதிலும் காலதாமதமாக வந்ததாகக் கூறி அவர்களின்
      மனுக்கள் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன. (வீரகேசரி-12.10.1988)
      வவுனியாவில் வேட்புமனுவை ஏற்பதற்கென கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகளிடம்,
      ராணுவ வாகனத்தில் வந்திருந்த ஈஎன்டிஎல்எஃப் நிர்வாகி, 7 பேருக்கான
      வேட்புமனுக்களைத் தான் ஒருவராகவே தாக்கல் செய்துவிட்டு, அதே ராணுவ வாகனத்தில்
      திரும்பிச் சென்றார். இதுவும் உதயன் பத்திரிகை செய்திதான். மனுத்தாக்கல்
      செய்யவந்தவர்கள் யாருமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படாதது மட்டுமல்ல,
      மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கவும் அனுமதி
      மறுக்கப்பட்டது. மனுத்தாக்கல் செய்த நபர் யார் என்றாவது காண்பியுங்கள் என்று
      பத்திரிகையாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நின்று கோரிக்கை
      வைத்தனர்; கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு தேர்தல் நடைமுறைகளைப் பற்றிய
      உண்மைத் தகவல்களை அறியச் செய்த காரணத்திற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து
      வெளிவந்த உதயன் நாளிதழுக்குத் தேர்தல் முடியும் நாள் வரை தடை
      விதிக்கப்பட்டது. இதே போன்று கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி
      நாளிதழுக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பகுதிகளில் தேர்தல் முடியும்வரை
      விநியோகிக்கத் தடை விதிக்கப்பட்டது. அமைதிப்படையின் தணிக்கைக்கு உட்படாத
      பத்திரிகை வீரகேசரிதான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. (வீரகேசரி
      கொழும்பில் அச்சாகி வெளிவரும் தினசரி ஆகும்). கிழக்குப் பகுதிகளில், தேர்தல்
      நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. வேட்பாளர்களுக்கான சுவரொட்டிகள்
      தமிழ்நாட்டில் அச்சடிக்கப்பட்டு, விமானம் மூலம் வடக்கு-கிழக்கு பகுதிகளுக்கு
      எடுத்துச் செல்லப்பட்டன. கொடிகள், தோரணங்களும் அப்படியே. இலங்கைத் தேர்தல்
      சட்டப்படி இதுபோன்ற நடவடிக்கைகள் குற்றமாகும். வேட்பாளர் வண்டியில் மட்டுமே
      கொடிகட்ட அனுமதியுண்டு. இந்தியாவில் உள்ள நடைமுறையின்படி அமைதிப்படை
      கடைப்பிடித்ததால் ஏற்பட்ட தவறு இது. கொழும்புப் பத்திரிகைகள் அனைத்துமே
      கண்டித்தன.
      ஈபிஆர்எல்எஃப் அணியினர் இந்திய ஹெலிகாப்டரில் பறந்து சென்று பிரசாரப் பணிகளை
      மேற்கொண்டதும் விமர்சனத்துக்குள்ளானது. கிழக்குப் பகுதி மக்கள்
      வாக்களிப்பதற்காக 576 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான
      நிலையில், இதில் தேர்தல் பணியாற்ற 5,000 அலுவலர்கள் தேவைப்படுவர் என்றும்,
      இவ்வளவு அலுவலர்களைக் கொழும்பிலிருந்து வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்குக்
      கொண்டுசெல்ல இயலாது என வாக்குச்சாவடி எண்ணிக்கைகளைத் திடீரெனக் குறைத்தனர்.
      கொழும்பிலிருந்து வந்திருந்த 600 அலுவலர்களுக்கு ஏற்ப 324 வாக்குச் சாவடிகள்
      மட்டுமே இயங்கும் எனவும் அறிவிப்பு கூறியது. 252 வாக்குச் சாவடிகள் ரத்து
      செய்யப்பட்டதால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வேண்டிய வாக்காளர்கள்
      வேறு எந்த வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பது எனத் தெரியாமல்
      குழம்பினர். மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மூலம் அடையாள அட்டை
      வாக்காளர்களுக்கு உரிய நேரத்தில் விநியோகிக்கப்பட்டிருக்கவேண்டும். மாவட்டத்
      தேர்தல் அதிகாரிகள் பணியாற்ற மறுத்துவிட்ட காரணத்தால் வாக்காளர்களுக்கு
      வாக்காளர் அட்டைகள் வழங்கப்படவில்லை. அந்த வாக்காளர் அட்டைகள் தேர்தல்
      அதிகாரிகளால் ஈபிஆர்எல்எஃப் அணியினரிடமே வழங்கப்பட்டன. அதை அவர்கள் தேர்தல்
      தினத்தன்றே விநியோகித்தனர். தேர்தல் சட்டத்தை மீறி வாக்காளர்களை வாக்குச்
      சாவடிக்கு அழைத்து வந்தனர்.
      தேர்தலுக்குச் சில தினங்கள் முன்பாகவே தேர்தல் நாள் வரை பாதுகாப்புக் காரணம்
      கூறி கிழக்கு மாகாணத்துக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உள்ளூர்
      போக்குவரத்துச் சேவையும் சீராக இயங்கவில்லை. அசம்பாவித சூழ்நிலையால்
      இருப்பிடத்தைவிட்டு இடம்பெயர்ந்து வெளியூர்களில் சென்று இருந்தவர்கள்
      வாக்களிக்கச் செல்ல முடியவில்லை. தேர்தல் நாளன்று, பெரும் எரிபொருள்
      தட்டுப்பாடு காரணமாக தனியார் வாகனங்கள் கூட இயங்கவில்லை. போக்குவரத்துச் சேவை
      முற்றாகச் சீர்குலைந்து இருந்தது. அம்பாறையில் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 100
      ரூபாய் வரையில் விற்கப்பட்டது. ஓடிய தனியார் வாகனங்களும் பயணக்கட்டணங்களைப்
      பல மடங்கு உயர்த்தின (வீரகேசரி-23.11.88).
      பாதுகாப்புக் காரணம் கருதி திருகோணமலையில் சைக்கிள், மோட்டார் சைக்கிள்
      என்பவற்றில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்,
      வாக்களிக்க விரும்பியோர், போக்குவரத்து வசதியும் இல்லாமல் எங்கு சென்று
      வாக்களிப்பது என்றும் தெரியாமல், வாக்காளர் அட்டையும் இல்லாமல் பல மைல்
      தூரத்திற்கொன்றாக இருக்கும் வாக்குச்சாவடிகளில் எந்த வாக்குச் சாவடியில் தாம்
      வாக்களிக்கவேண்டும் என்பதைத் தேடியலைந்து கண்டுபிடித்து, அங்கு தமது வாக்கு
      இருப்பதை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்து, உறுதிசெய்துகொண்டுதான்
      வாக்களிக்க வேண்டியிருந்தது. இதனால் காலை 7 மணிக்கே வாக்களிப்பு
      ஆரம்பமானபோதிலும், வாக்களிக்க விரும்பிய வாக்காளர்கள் தமக்குரிய வாக்களிப்பு
      நிலையங்களைத் தேடிக் கண்டுபிடித்து காலை 10 மணிக்கு மேல்தான் வாக்களிப்பு
      நிலையங்களைச் சென்று அடைந்தனர். இதனால் அநேகமாக எல்லா வாக்குச் சாவடிகளிலும்
      காலை 10 மணி வரை வாக்காளர்கள் ஒரு சிலர்தான் வாக்களித்தனர். அசம்பாவிதம்
      காரணமாக இடம்பெயர்ந்து இருந்த வாக்காளர்கள், தாம் தங்கியிருக்கும் பகுதிகளில்
      உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க ஜனாதிபதி தேர்தலில் அனுமதிப்பது போன்ற
      வசதிகள் எதுவும் இத் தேர்தலில் செய்யப்படவில்லை.
      ஒப்புக்கு ஒரு கண்துடைப்புத் தேர்தல் நடத்தப்படுகிறது என்பது அப்பட்டமாகத்
      தெரிந்தது. அதற்கு முன் நடைபெறாத அளவுக்குக் குளறுபடியான ஒரு தேர்தலை அமைதிப்
      படையின் உதவியுடனும், மேற்பார்வையுடனும் ஜெயவர்த்தனா அரசு நடத்த முற்பட்டது.
      வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2009 20:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

No comments:

Post a Comment