Saturday, November 6, 2010

104 அமைதிப்படையும் ஆயுதக் கையளிப்பும்,105: ஒப்பந்தம் மீது சந்தேகம்!

104 அமைதிப்படையும் ஆயுதக் கையளிப்பும்அமைதிப்படை வான் வழியாகவும், கடல் வழியாகவும் இலங்கையின் வடக்கு மற்றும்
      கிழக்குப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது. அதன் முகாம்கள் யாழ்குடாவில் பலாலி,
      வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம் பகுதிகளில் நிலைகொண்டன. மட்டக்களப்பில்
      அதிக அளவு ராணுவப்படை தேவையில்லை என்ற உத்தரவே முதலில் இடப்பட்டிருந்தது.
      ஆனாலும் அங்கும் முழு அளவில் அமைதிப்படை ஈடுபடுத்தப்பட்டது. அம்பாறை
      பட்டியலில் இல்லை; பின்னர் அதுவும் சேர்க்கப்பட்டது. ஐ.பி.கே.எஃப் - என்று
      அழைக்கப்பட்ட அமைதிப்படையின் பிரிவுகளுக்கு "ஆபரேஷன் பவான்' என்று
      பெயரிடப்பட்டிருந்தது. "பவான்' என்றால் "சுத்தமான காற்று' என்று
      அர்த்தப்படுத்தலாம். அனுமனையும் சம்பந்தப்படுத்தலாம். அனுமனுக்கு
      "பவன்புத்ரா' என்றுதான் பெயர். அதாவது வாயுபுத்ரா-காற்றின் மைந்தன் எனப்
      பொருளாகும். அமைதிப்படைக்கு இடப்பட்ட பணிகளை லெப்டினன்ட் ஜெனரல்
      தீபிந்தர்சிங் கூற்றுப்படி இவ்வாறு பிரிக்கலாம்:
      1. இலங்கை - விடுதலைப்புலிகளிடையே நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வந்து,
      போர்நிறுத்தம் ஏற்படுத்துவது-கண்காணிப்பது. 2. விடுதலைப்புலிகள் மற்றும்
      இதரப் போராளிக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவது. 3. இலங்கை
      அரசப்படைகள் 1987 மே மாதத்தில் இருந்த நிலைகளுக்குத் திரும்புவதை
      உறுதிப்படுத்துவது-வற்புறுத்துவது-கண்காணிப்பது. 4. போரினால் வெளியேறிய
      மக்களை அவர்களின் வாழ்விடங்களில், திரும்ப வந்து வசிக்கச் செய்வது.
      இதுதவிர, வடக்கு கிழக்குப் பகுதிகளில் காவல் நிலையங்கள் செயல்படாத நிலை.
      எனவே, சட்டம்-ஒழுங்குப் பணிகளையும் மேற்கொள்ள நேர்ந்தது. லெப்டினன்ட் ஜெனரல்
      தீபிந்தர்சிங், பலாலி விமானதளத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதும், அவரை
      இந்திய அமைதிப்படையின் (பொறுப்பு) மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங் (54-வது பிரிவு
      தரைப்படை), இலங்கை அரசுப்படையின் கமாண்டர், பிரிகேடியர் ஜெர்ரி.டி. சில்வா
      சந்தித்தனர். தீபிந்தர்சிங், யாழ் பகுதிகளைத் தரைவழியாகச் சென்று பார்க்க
      விரும்பினார். அதற்கு ஹர்கிரத்சிங், சாலை முழுவதும் நிலக்கண்ணி வெடிகள்
      புதைக்கப்பட்டிருப்பதாக, சாலைக்காவலில் ஈடுபட்ட அமைதிப்படை சிப்பாயிடம்,
      விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். சிப்பாய் நிலக்கண்ணி வெடிகளை
      அப்புறப்படுத்தும்படி கேட்டதும், பிரபாகரன்தான் தங்களுக்கு இதுகுறித்து
      உத்தரவிடவேண்டும் என்றும், அவர் தில்லி ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டிருக்கும்
      நிலையில், அவர் வந்தால்தான் உண்டு என்று தெரிவித்திருக்கிறார்கள்' என்றார்.
      இதுகேட்டு தீபிந்தர்சிங், இது உண்மையா இல்லையா என்கிற ஆராய்ச்சியில்
      ஈடுபடாமல், பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பவேண்டிய அவசியத்தைத் தலைமைக்கு
      வலியுறுத்தினார். பிரபாகரன் யாழ் திரும்புவதற்கு பல்வேறு வகையான
      நெருக்குதல்கள் இருந்தபோதிலும், இந்தக் காரணமும் அதில் ஒன்றாகச் சேரக்கூடும்
      என்பதும் உண்மையே. தீபிந்தர்சிங்கும், இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் சிரில்
      ரணதுங்கேயும் பலாலி விமானதளத்தில் உள்ள பார்வைக்கோபுரத்தில்
      பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, உலக அளவிலான பத்திரிகையாளர்களில்
      பெரும்பாலானோர், இலங்கையில் இந்திய அமைதிப்படை எத்தனை காலம் இருக்கும்
      என்பதைத் தெரிந்துகொள்வதில் அதிக அக்கறை காட்டினார்கள்.
      தர்மசங்கடமான இந்தக் கேள்விக்கு தீபிந்தர்சிங் "இந்தப் பணி முடியும் வரை'
      என்று பதிலளித்தார். பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பியதை அடுத்து, ஆயுதம்
      கையளிப்பது தொடர்பான ஆலோசனையை அவரிடம் செய்யவேண்டிய அவசியம்
      தீபிந்தர்சிங்குக்கு ஏற்பட்டது. இதற்கான ஏற்பாடு அவர் தங்கியிருந்த
      இடத்தினருகே உள்ள விருந்தினர் இல்லத்தில் செய்யப்பட்டிருந்தது. பிரபாகரன்,
      யோகரத்தினம் யோகியுடன் வந்தார். இது தவிர, மேலும் இரு விடுதலைப் புலிகளும்
      உடன் வந்தனர். இதுகுறித்து தீபிந்தர்சிங் தனது நூலில், ""அறைக்குள்
      நுழைவதற்கு முன்பாக பிரபாகரன் தனது காலணிகளை வாசலுக்கு வெளியே கழற்றிவிட்டு
      உள்ளே வந்தார். அவர் "புஷ்' சர்ட் அணிந்திருந்தார். உயரம் அதிகமில்லை. நல்ல
      கட்டுமஸ்தான உடம்பு. பார்க்க அழகானவராக இருந்தார். முகம் இறுகினது போல
      இருந்தது. அவரைப்பற்றிய வீரப்பிரதாபங்கள் பலவற்றைக் கேள்விப்பட்டிருந்த
      நிலையில், அதில் சில உண்மையாக இருக்கவும் வாய்ப்புண்டு-என்பது எனது கணிப்பாக
      இருந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
      அவர் நூலில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, "டீ சாப்பிட்டு முடிக்கும்
      நேரத்தில் இந்தியாவின் வற்புறுத்தலுக்கிணங்க போர்நிறுத்தம் மற்றும் ஆயுதம்
      கையளிப்புக்கு இணங்கியதாகத் தெரிவித்தபோது, இச்சூழ்நிலை இலங்கை அரசு
      யாழ்ப்பாணம் மீது ஏற்படுத்திய பொருளாதாரத்தடை மற்றும் ராணுவம் மக்கள் மீது
      தொடுத்த தாக்குதல்கள் காரணமாகவும், மக்கள் பட்ட துன்பம் காரணமாகவும் எழுந்தது
      என்று விளக்கினேன். தில்லியில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த
      பேச்சு எழவில்லை. ஆனால் அவரது பேச்சுகளில் இருந்து இந்திய வெளிவிவகாரத்துறை
      மற்றும் "ரா' அமைப்பில் உள்ளவர்களின் செயல்பாடுகளால் கோபம் ஏற்பட்டிருக்கிறது
      என்பதையும், இனி அவர்களது பேச்சை எந்தக் காலத்திலும் நம்பமாட்டார் என்பதும்
      தெரியவந்தது. இதுகுறித்தும் அவரிடம் எதுவும் விவாதிக்கவில்லை. ஆயுதம்
      கையளிப்பது தொடர்பாகத் தனது தளபதிகளிடம் விவாதித்து முடிவு செய்யப்படும்
      என்று கூறியது தொடர்பாக, ஞாபகப்படுத்திக் கேட்டபோது அடுத்தடுத்த நாளில்
      நடைபெறும் என்றார். இலங்கை அரசு ஆயுதம் கையளிப்பதை விரிவான அளவில் விளம்பரம்
      செய்வதாக இருந்ததை அவர் விரும்பவில்லை. மேலும் எந்த ஓர் ஆயுதத்தையும் இலங்கை
      அரசிடம் நேரடியாகக் கையளிப்பதையும் அவர் விரும்பவில்லை என்பதும் தெரியவந்தது'
      என்கிறார் தீபிந்தர்சிங்.
      அடுத்தநாள் தீபிந்தர்சிங் யாழ்ப்பாணப் பல்கலைத் திடலில் ஹெலிகாப்டரில் வந்து
      இறங்கவும், அவரை மாத்தையா வரவேற்று, பிரபாகரன் இருக்குமிடத்துக்கு அழைத்துச்
      சென்றார். ஆயுதம் கையளிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இலங்கை
      அரசிடம் ஆயுதம் கையளிப்பது நடக்காது என்றே பிரபாகரன் தெரிவித்தார். ஆயுதம்
      கையளிப்பது இல்லை என்றால், போராளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது என்பது
      தடைபடும். எனவே, ஆயுதம் கையளிப்பது என்பதை அவரின் பிரதிநிதியாக ஒருவர் ஆயுதம்
      வழங்க, இந்தியப் பிரதிநிதி முன்னிலையில் ஆயுதத்தை அளித்தால் போதும் என்று
      தீபிந்தர்சிங் யோசனை கூறினார். அதன்படி, பலாலி ராணுவ முகாமில் ஆயுதக்
      கையளிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரு மேசை போடப்பட்டு, அதன்
      எதிர்ப்புறத்தில் மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர்
      சேபால அட்டியகாலேவும் நிற்க, இந்தப் பக்கத்தில் நின்ற யோகரத்தினம் யோகி, ஒரு
      துப்பாக்கியைக் கையளிப்புக்கு அடையாளமாக மேசையில் வைத்தார்.
      இந்தக் காட்சியை இலங்கை, இந்தியப் பத்திரிகையாளர்கள் தவிர, உலகநாடுகளின்
      பத்திரிகையாளர்களுமாக 200பேர் பதிவு செய்தனர். இதே நேரத்தில், ஜெயவர்த்தனா
      போராளிகளுக்கு வழங்கிய பொதுமன்னிப்பை அட்டியகாலே வாசித்தபின், அக்கடிதத்தை
      யோகியிடம் வழங்கினார். ஆயுதக் கையளிப்பு நிகழ்ச்சி முடிவுற்றது.
    
 105: ஒப்பந்தம் மீது சந்தேகம்!      ஆயுதக் கையளிப்பு நிகழ்ச்சிகள் வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ந்து நடைபெற்றன.
      இந்தக் கையளிப்பில் விடுதலைப் புலிகள் தவிர, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்.,
      ஈ.என்.டி.எல்.எஃப்., ப்ளாட், டெலோ இயக்கங்களும் பங்குபெற்றன. (முறிந்த பனை
      பக்-164) இந்த நிகழ்ச்சிகள் ஒரு விழாவினைப்போன்று ஏற்பாடு செய்யப்பட்டு,
      விரிவான அளவில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாக்கப்பட்டன.
      இந்தியா, இலங்கை ஆகிய இருநாடுகளின் ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்கு இந்த
      விளம்பரம் தேவையாக இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் சில
      வாகனங்கள் நிறைய ஆயுதங்களைக் கொண்டுவந்து பலாலியில் இறக்கியது. அதில்
      சிலிண்டர் வடிவ ஆயுதங்களும் இருந்தன. தீபிந்தர்சிங், இந்த சிலிண்டர் வடிவில்
      இருப்பது என்னவென்று வினவியபோது குண்டுவீசப் பயன்படும் 175எம்.எம்.
      மோர்ட்டார் என்று தெரிவித்தனர். இவை உள்ளூர் தயாரிப்பு என்றதும் அவர்
      வியந்தார்.
      ஆயுதக் கையளிப்பு நிகழ்ச்சிகளில் கையளிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகக்குறைவு என்று
      ஜெயவர்த்தனா அபிப்பிராயப்பட, கைதிகள் விடுதலையிலும் சுணக்கம் தென்ப்பட்டது.
      அதேபோன்று, மக்களும் போராளிகளும் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவே அமைதிப்படை
      என்று முதலில் நினைத்தனர். ஆனால், நாளடைவில் கனரக ஆயுதங்களும் பீரங்கிகளும்
      வந்து இறங்கவும், அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அமைதியை நிலைநாட்ட வந்த
      படைக்கு, இந்த கனரக ஆயுதங்கள் எதற்கு என்பது புரியாத புதிராக இருந்தது.
      முதலில் மக்களது கோரிக்கைகளை கவனிப்பது போன்று செயல்பட்ட அமைதிப்படையின்
      போக்கு நாளடைவில் மாறத் தொடங்கியது. அப்படைக்கு, இந்திய-இலங்கை நலன்களே
      "குறி' என்பதும் வெளிப்டையானது.
      இது குறித்து புஷ்பராஜா தனது நூலில், "இந்திய ராணுவம் இலங்கையில் தன்னைச்
      சமாதானப்படையாக எண்ணாமல் ஒரு கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் இருக்கும் ராணுவம்
      போல வலம் வரத்தொடங்கியது. இதற்கு இந்திய ராணுவ அதிகாரிகளின் கற்பனையும்
      இந்திய ராஜதந்திரிகளின் தவறான கணிப்பீடும் காரணங்கள் எனச் சொல்லலாம்...
      நாங்கள் சொல்வதற்கு மட்டுமே கட்டுப்படுங்கள் என்ற வாத்தியார்த்தனம்
      இந்தியாவிடம் இருந்தது. முக்கியமாக இந்திய உளவுப்பிரிவான "ரா' இலங்கைப்
      பிரச்னையில் தவறான கணிப்பீடுகளைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல்,
      ராஜதந்திரிகளையும் தவறான கணிப்பீடு கொள்ளவைத்தது' என்று குறிப்பிடுகிறார்.
      அதுவே நாளடைவில் அமைதிப்படையின் செயல்பாடுகளிலும் காணப்பட்டது. ஆயுதங்களைப்
      பறித்தெடுப்பதில் காட்டப்பட்ட அக்கறை, இடைக்கால அரசு அமைப்பதில்
      காட்டப்படவில்லை. ஆயுதங்களைக் கையளிக்க 5 நாள்கள் அவகாசமும், இறுதி முடிவு
      எடுக்கப்படாத விஷயங்களை இந்தியாவும்-இலங்கையும் பேசி முடிவெடுக்க ஆறுவாரம்
      கெடுவும் அளிக்கப்பட்டது -ஒரு விநோதமான செயல்பாடு ஆகும். இந்தக்
      குறிப்புப்படி எந்தவிதமானப் பேச்சும் இரு அரசுகளுக்கிடையே நடைபெறவில்லை.
      மாறாக 13-வது திருத்தமாக ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக
      நிறைவேறியது. இந்தச் செயலை அப்போதைய வெளியுறவுச் செயலாளரான
      ஏ.பி.வெங்கடேஸ்வரன், "அதிகாரப் பகிர்வு செய்யாமல் ஒப்பந்தத்தில்
      கையெழுத்திட்டது குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டிய செயல்' (இந்து
      நாளிதழ்-13 ஆகஸ்டு 1987) என்று விமர்சித்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில்
      1.14-இன் ஷரத்துப்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின்
      வரலாற்றுக் குடியிருப்புப் பிரதேசங்கள் என்று குறிப்பிட்ட நிலையில், தமிழர்
      தாயகம் என்பதை மறுப்பதும் விநோதமான ஒன்றே. ஜூலை 26 1987-இல் யு.என்.பி.யின்
      பொதுக்குழுக் கூட்டத்தில் "இணைப்பு என்பதும், வாக்கெடுப்பு என்பதும்
      நாடகம்தான் என்றும், தமிழர்களின் குழுக்களே இதனை முறியடித்துவிடுவர்' என்றும்
      ஜெயவர்த்தனா பேசியதின் மூலம் இந்த ஏமாற்று நாடகம் அம்பலத்துக்கு வந்தது.
      அதுமட்டுமல்ல, ""இவ்வொப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயம் என்னவென்றால்,
      பயங்கரவாத இயக்கத்துக்கு அது ஒரு முடிவைக் காணும்'' என்றும் ஜெயவர்த்தனா
      குறிப்பிட்டாரே தவிர, இடைக்கால அரசு பற்றி குறிப்பிடவில்லை. ஆனால்,
      இதுபற்றியும் இந்தியா எந்தக் கருத்தும் சொல்லவே இல்லை என்பதுதான் உண்மை.
      தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் என்பது, அந்தப் பகுதி தமிழரின்
      தாயகம் என்பதைத் தவிர்ப்பதற்காகவும், தமிழர்கள் ஒன்றுபட்டு ஆட்சி
      அதிகாரத்தைக் கைப்பற்றிவிடக்கூடாது என்பதற்காகவும் சொல்லப்பட்ட சதி என்பது
      சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சுதந்திரத்துக்கு முன்பே தரிசு நிலம் மற்றும்
      உவர்நில மேம்பாட்டுத் திட்டத்தின்பேரில் நிலத்தைக் கையகப்படுத்தி அவை
      பிரித்தளிக்கப்பட்டது. அதில் தமிழர்களைவிடவும், சிங்களவர்கள் அதிக அளவில்
      குடியேற்றப்பட்டார்கள் என்பதும், நாளடைவில் கிழக்குப் பகுதியின்
      நெற்களஞ்சியப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை வன்முறை மூலமும், அரசு
      திட்டங்கள் மூலமும் வெளியேற்றி, அந்தப் பகுதிகளில் சிங்களவர்களைக்
      குடியமர்த்தினார்கள் என்பதும் முந்தைய பகுதிகளில் குறிப்பிட்டிருந்தோம்.
      இந்தக் குடியேற்றங்களை முதன்முதலில் சுதந்திர இலங்கையில் ஆரம்பித்துவைத்தவர்
      சேனநாயக்கா. அவர், அப்போது தன்னை முதலாம் பராக்கிரமபாகு என்று அழைப்பதைப்
      பெருமையாகக் கருதினார். முதலாம் பராக்கிரமபாகு தமிழர்களை வீழ்த்தி, சிங்கள
      ராஜ்ஜியத்தை உருவாக்கி, அங்கே பெüத்தத்தை விதைத்தவன் ஆவான். சேனநாயக்காவும்
      வெள்ளைச் சால்வை அணிந்து, பெüத்த சின்னங்கள் முன்பு தரையில் விழுந்து
      வணங்கியதோடு, அச்சின்னங்கள் அடங்கிய பெட்டியை சுமந்துசென்று சிங்கள-பெüத்த
      மேலாண்மைக்கு வித்திட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கான தொலைநோக்கில் அவர் தமிழர்
      பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தினார். இதன் காரணமாக, கோல்புரூக்
      காலத்தில் (1833) மூன்று சிங்கள மாகாணங்கள் என்றிருந்த நிலையில், ஏழு
      மாகாணங்கள் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தமிழர் பிரதேசமாக இரு மாகாணங்களாக,
      கரையோரமுள்ள பகுதிகளாக மட்டுமே அமைந்தன. ஒட்டுமொத்த இலங்கையில் அமைந்துள்ள
      ஒன்பது மாகாணங்களில் சிங்கள மாகாணங்கள் போக, மீதமுள்ள இரண்டு தமிழ்
      மாகாணங்களையும் சிதைக்கும் நோக்கத்துடன் சிங்களக் குடியேற்றம் அவ்வப்போது
      நடைபெற்றது.
      தமிழ் மாகாணங்களில் விவசாய-குடிநீர்ப்பாசனத் திட்டங்களை அறிமுகப்படுத்தி
      அங்கே அதிக அளவில் சிங்களவரைக் குடியேற்றினார்கள். விவசாய நிலப்பகுதி
      தவிர்த்து வடக்கில் அமைந்துள்ள காட்டுப்பகுதியும், கிழக்கில் உள்ள வேடர்
      பிரதேசங்களையும் குடியேற்றம் விட்டுவைக்கவில்லை. 1950-களில் அல்லை, காந்தளாய்
      மற்றும் கல் ஓயா குடியேற்றங்களில் இன விகிதாச்சாரம்
      நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. திருகோணமலையில் யான் ஓயா, மட்டக்களப்பு
      மாவட்டத்தில் மதுரு ஓயா, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலி ஓயா ஆகியவற்றிலும்
      இதே பாகுபாடுதான். சிங்களவர்களுக்கு மட்டும் ஒரு குடும்பத்தில் ஏற்படும்
      இயற்கை அதிகரிப்பு கணக்கிடப்பட்டு ஒரு குடும்பத்துக்கு மூன்று நான்கு என
      காணித்துண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்படும்
      குடியேற்றத் திட்டங்களில் அந்த ஊரின் தமிழ்ப்பெயர்கள் சிங்களப் பெயர்களாக
      மாற்றப்பட்டுவிட்டன. (உ-ம்) நொச்சிகுளம்-நொச்சியாகம, அம்பாறை-திகாமடுல்ல,
      அம்பலாங்கொடை-அம்பலாங்கொடம்ல, மணல் ஆறுத்திட்டம்-வெளி ஓயா,
      கோமரங்கடவை-கோமரங்கடவல, முதலிகுளம்-மொரவெவ.
      கெண்ட் பண்ணை-டாலர் பண்ணை முதலியவற்றில் தமிழர்களே பெரும்பான்மை. அவர்களை
      வெளியேற்றிவிட்டு அங்கே சிங்களவர்களைக் குடியமர்த்திவிட்டார்கள்.
      இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின்
      கிழக்கு மாகாணம் முன்பு திருகோணமலை, மட்டக்களப்பு என இரு மாவட்டங்களை
      உள்ளடக்கியதாகும். அதிரடியாக மட்டக்களப்பில் சிங்களவரை அதிக அளவில்
      குடியேற்றி அம்மாவட்டத்தைப் பிரித்து, அம்பாறை மாவட்டம் எனப் புதிதாக,
      உருவாக்கி சிங்களப் பெயராகவும் அறிவித்துவிட்டார்கள். இவையெல்லாம்
      இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்பாக நடந்த குடியேற்றங்களில் பத்து
      சதவிகிதக் குறிப்புகள் மட்டுமே. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட 2.4
      ஷரத்துப்படி, வன்முறையால் வெளியேறிய அல்லது வேறு காரணங்களுக்காக
      இடம்பெயர்ந்தவர்களைக் குடியமர்த்தத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கவேண்டும்
      என்பதாகும். ஆனால் கிழக்கு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த தமிழர்களை அங்கே
      குடியமர்த்த முயற்சி எடுக்காது, சிங்களவர்களைக் குடியமர்த்துவதில் அரசு
      தீவிரம் காட்டியது. அம்பாறை மாவட்டத்திலும் இதே நிலைமைதான். குடியேற்ற
      விஷயத்தில் அரசு திட்டமிட்டுத் தமிழர்களுக்குத் துரோகம் செய்தது. இதனால்
      தமிழர்கள் மத்தியில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மீது சந்தேகம் எழுந்தது.

No comments:

Post a Comment