Saturday, November 6, 2010

100 - ராஜீவ் காந்தி தாக்கப்பட்டார்!,101: பகடைக்காயாக எம்.ஜி.ஆர்?

100 - ராஜீவ் காந்தி தாக்கப்பட்டார்!
1987 ஜூலை 29 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர்
      ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் இணைப்பாக சில அம்சங்கள்
      சேர்க்கப்பட்டிருந்தன.
      1. இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் உடன்பாட்டின் இரண்டாவது பத்தி மற்றும்
      அதன் துணை பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை கவனிக்க, இந்தியத்
      தேர்தல் கமிஷனின் பிரதிநிதி ஒருவரை மேதகு இலங்கை அதிபர் அழைப்பார் என்பதை
      ஏற்றுக்கொள்கின்றனர். 2. அதேபோன்று இருநாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தத்தின்
      பத்தி 2.8-இல் குறிப்பிட்டுள்ள மாகாணசபைத் தேர்தல்களின்போது அதனை
      மேற்பார்வையிட இந்திய அரசின் பிரதிநிதி ஒருவரை இலங்கை அதிபர் அழைக்கவும்
      ஏற்றுக்கொண்டனர். 3. மாகாணசபைத் தேர்தல் நடைபெற உகந்த நிலையை உருவாக்க,
      கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் இருந்து ஊர்க்காவல் படையினரும் துணை
      ராணுவப்படையினரும் திருப்பி அழைக்கப்படுவர். இதனைச் செய்ய ஜனாதிபதி
      உடன்படுகிறார். இன வன்முறையின்போது கொண்டு நிறுத்தப்பட்ட துணை ராணுவத்
      துருப்புகளை இலங்கையின் நிரந்தரப் பாதுகாப்புப் படையாக ஏற்றுக்கொள்வது
      அதிபரின் அதிகாரத்திற்கு உரியது. 4. தமிழ்ப் போராளிகள் தங்கள் வசமுள்ள
      ஆயுதங்களை ஒப்படைப்பார்கள் என்பதை இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும்
      ஏற்றுக் கொள்கின்றனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச்
      சங்கம் ஆகிய இரு அமைப்புகளின் மூத்த பிரதிநிதி ஒருவரின் முன் இந்த ஆயுத
      ஒப்படைப்பு நடைபெறும். 5. இந்திய அரசு மற்றும் இலங்கை அரசைச் சேர்ந்த தகுதி
      வாய்ந்த பிரதிநிதிகள் அடங்கிய இந்திய - இலங்கை கூட்டு கண்காணிப்புக் குழு
      ஒன்று அமைப்பதையும், 1987 ஜூலை மாதம் 31-ஆம் தேதி முதல் ஏற்படும்
      போர்நிறுத்தத்தைக் கண்காணிக்கவும் இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும்
      ஏற்கின்றனர். 6. ஒப்பந்தத்தில் பத்தி எண் 2.14, 2.16 (இ)யில்
      குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி போர் நிறுத்தம் நடவடிக்கையை
      உறுதிப்படுத்த, இந்திய அமைதி காக்கும் படை ஒன்றை, தேவைப்பட்டால் இலங்கை
      அதிபர் அழைக்கக்கூடும். ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இலங்கை அதிபர்
      ஜெயவர்த்தனாவுக்கு ராஜீவ் காந்தி ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில்
      அவர் வெளிப்படுத்தியிருந்த சில கவலைகளும், உணர்வுகளும் இன்றைக்கும் கூடப்
      பொருத்தமானதாகவே இருப்பது மட்டுமல்லாமல், இலங்கை அரசு இந்தியாவைப் பல
      விஷயங்களில் வஞ்சித்து வருகிறது என்பதை உறுதியும் படுத்துகிறது.
      ராஜீவ் எழுதிய கடிதத்தில் காணப்பட்ட முக்கியமான அம்சங்கள் வருமாறு: 1.
      மிகுந்த அக்கறையுடன் இரு நாடுகளுக்குமிடையே நூற்றாண்டுகளாய் பேணி
      பாதுகாக்கப்பட்டுத் தொடர்ந்து வரும் நம் நட்புறவு... இந்த வேளையில் அது
      இன்னும் வலுப்பெற்று அதை மீண்டும் இருநாடுகளும் நிரூபிக்கும் வகையில் நம் இரு
      நாடுகளின் அதன் எல்லைப் பகுதிக்குள் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்புக்கு
      எதிராக, சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் சக்திகளை ஒருபோதும்
      அனுமதிக்கக்கூடாது.
      2. இதே உத்வேகமும் எண்ணமும் கொண்டுள்ளதை நம் பேச்சுவார்த்தையில்
      வெளிப்படுத்திய நீங்கள்... இந்தியாவின் சில எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி
      செய்யவேண்டும். அ.) நீங்களும் நானும் முன்பு பேசி ஒத்துக்கொண்டது போல
      இலங்கைக்காக மற்ற நாடுகளின் ராணுவத்தினரையோ அல்லது வல்லுநர்களையோ இந்தியாவைப்
      அனுமதித்ததுபோன்று, அனுமதிக்காமலிருப்பதே இந்திய இலங்கை உறவுக்குப்
      பாலமாகும். இ.) திருகோணமலை அல்லது ஏனைய மற்ற பகுதிகளில், மற்ற நாடுகளின்
      ராணுவ பயன்பாட்டிற்கு அனுமதிக்காமலிருப்பது இந்தியாவின் எண்ணத்திற்கு
      ஒத்துப்போவதாகும். உ.) மீண்டும் திருகோணமலை ஆயில் நிறுவனக் கிடங்குப் பணி
      இருநாட்டு கூட்டு முயற்சியுடன் தொடரும். இலங்கை அரசு வெளிநாட்டு தகவல்
      மற்றும் ஒலிபரப்பு நிறுவனங்களை அனுமதித்து, அவர்கள் அங்கு செயல்பட்டு வருவதை
      மறுபரிசீலனை செய்து இந்தத் தகவல் ஒலிபரப்பு பொதுவான துறையாக மட்டும்
      செயல்படவேண்டும். ராணுவ மற்றும் வல்லுநர் தன்மைக்காகப் பயன்படுத்தக்கூடாது.
      3. அதே உத்வேகத்துடன் இந்தியாவும் செயல்படும். அ.) தீவிரவாதச் செயல்கள், தனி
      நாடுவேண்டி போராடுபவர்கள், குழுக்களைச் சேர்ப்பவர்கள் இந்த மாதிரி செயல்களைச்
      செய்பவர்கள் என கண்டுபிடிக்கப்படும் இலங்கைப் பிரஜைகள் நாடு கடத்தப்படுவர்.
      இ.) இலங்கைக்குத் தேவையான ராணுவ உதவி மற்றும் ராணுவப் பயிற்சிகள்
      வழங்கப்படும்.
      4. இந்தியாவும் இலங்கையும் தொடர்ந்து பொதுவான விஷயங்களில் உள்ள இடர்பாடுகளைக்
      கருத்தில்கொண்டு இருவரும் கலந்துபேசி இருதரப்பைப் பலப்படுத்தியும் மேலும்
      இந்தக் கடிதத்தில் கண்டுள்ள மற்ற விஷயங்களைப் பற்றியும் கவனிக்கவேண்டும்.
      5. நம் இருவருக்குமிடையே உருவான ஒப்பந்தப்படி மேலே குறிப்பிட்டவைகள்
      சரியானபடி இருப்பதாக தயவுகூர்ந்து பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். எனது
      மிக, மிக உயர்வான சலுகைகளின்படியான வாக்குறுதிகளை மனதில் கொண்டு தயவு செய்து
      ஏற்றுக்கொள்ளுங்கள். (ஒப்பந்த நகல் உதவி : ஏன் எரிகிறது ஈழம்-கே.கே.ரமேஷ்)
      இந்தியா திரும்ப இருந்த ராஜீவ் காந்திக்கு கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை
      வழங்கப்பட இருந்தது. பல்வேறு ஒத்திகைக்குப் பின்னர் அந்த நேரமும் வந்தது.
      ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரிகள் அணிவகுப்பு குறித்து ஆய்வு செய்து
      ஒப்புதலும் அளித்தனர். அவர்கள் ஆய்வு செய்த முக்கிய விஷயம் என்னவென்றால்,
      அணிவகுப்பு மரியாதையில் வீரர்கள் பிடித்திருக்கும் துப்பாக்கிகளில் குண்டுகள்
      உள்ளதா என்பதைக் கண்டறிவதுதான்! இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டிய அவசியம்
      எகிப்து அதிபர் அன்வர் சதாத் சுட்டுக்கொல்லப்பட்டதையொட்டி நடைமுறைக்கு
வந்தது.
      1978-இல் எகிப்து அதிபர் அன்வர் சதாத் இஸ்ரேலியப் பிரதமர் பெனகம் பெகினுடன்,
      அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் முன்னிலையில் ஓர் ஒப்பந்தத்தில்
      கையெழுத்திட்டார். "காம்ப் டேவிட் ஒப்பந்தம்' என்று அழைக்கப்பட்ட அந்த
      ஒப்பந்தத்தை அரபுநாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதன் காரணமாக எகிப்திலும் கடும்
      எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், 1981-ஆம் ஆண்டில் எகிப்து அதிபர் அன்வர்
      சதாத், தனது நாட்டின் அணிவகுப்பில், தனது வீரனாலேயே துப்பாக்கியால்
      சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பின் உலகநாடுகள் அணிவகுப்பு துப்பாக்கிகளில்
      குண்டு நிரப்புவதைத் தடைசெய்தனர். இதே நடைமுறைப்படிதான் ராஜீவ் காந்தியின்
      பாதுகாப்புப் பிரிவினரும் சோதனை மேற்கொண்டனர் என்பதைக் கவனத்தில் கொள்ள
      வேண்டும். இந்த அணிவகுப்பு மரியாதைக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டவர்
      ஜெயவர்த்தனாவின் மகன் ரவி ஜெயவர்த்தனா.
      அவர் ராணுவத்தினருக்கு அணிவகுப்பில் பயன்படுத்தும் துப்பாக்கிகளில் குண்டுகளை
      அப்புறப்படுத்த உத்தரவிட்டபோது சிங்கள ராணுவத் தலைமை இதற்கு எதிர்ப்பு
      தெரிவித்தது. ராணுவ வீரர்களின்மீது அவநம்பிக்கை கொண்டதாக இச்செயல் அமையும் என
      வாதிட்டனர். ஆனால், ராஜீவ் காந்தி அணிவகுப்பில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால்
      நிலைமை மோசமாகிவிடும் என்று ரவி ஜெயவர்த்தனா, குண்டுகளை அகற்றும்படி
      உத்தரவிட்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில், ராஜீவ் காந்தி அணிவகுப்பை
      ஏற்றுக்கொண்டு வருகையில், கடற்படையைச் சேர்ந்த விஜயமுனி விஜிதா ரோகண டி
      சில்வா என்கிற சிப்பாய் தான் பிடித்திருந்த துப்பாக்கியின் அடிக்கட்டையால்,
      ராஜீவ் காந்தியின் பின்தலையில் வேகமாகத் தாக்க முயன்றார். பின்தலையில்
      தாக்கினால் ஒரு மனிதன் செயலிழப்பான் என்பது ராணுவப் பயிற்சியில்
      சொல்லிக்கொடுக்கப்படும் சூத்திரங்களில் ஒன்று. இவ்வாறு சிங்களச் சிப்பாய்
      தாக்குவதை உணர்ந்த ராஜீவ் காந்தி தலையைக் குனிந்துகொண்டு அப்பால் நகர்ந்தார்.
      துப்பாக்கியின் அடிக்கட்டை அவரது தோளில் பட்டது.
      ராணுவ உயர் அதிகாரிகள், ஜெயவர்த்தனாவின் சகாக்கள் முன்னிலையில்தான்
      இச்சம்பவம் நடைபெற்றது. ஆனால் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரிதான் ஓடோடிச்சென்று
      அந்தச் சிங்களச் சிப்பாயை இயங்கவிடாமல் பிடித்து அமுக்கினார். சிங்களப்
      படையினர் எத்தகைய கொடூரமான மனநிலையினர் என்பதையும் கொலைவெறி மிகுந்தவர்கள்
      என்பதையும் இச்சம்பவம் உலகத்திற்கு அடையாளம் காட்டியது. இந்நிலையில், இந்த
      சம்பவங்களின் பின்குறிப்பாக கீழ்க்கண்டவை கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை
      ஆகும்: இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகும் சமயத்தில், இதில்
      கலந்துகொள்ளவிரும்பாத அந்நாட்டின் பிரதமர் பிரேமதாச தாய்லாந்து
      சென்றுவிடுகிறார். ஒரு நாட்டின் பிரதமர், தனது நாட்டுக்கு வேறொரு நாட்டின்
      பிரதமர் வரும்போது, வெளிநாட்டுக்குச் செல்வது என்பது, உலகில் வேறெங்கும்
      நடைபெறாத சம்பவமாகும்.
      அதுமட்டுமன்றி அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி மற்றும்
      முக்கிய அமைச்சர்களும் இந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததும்
      புதுமையானதுதான். இச்செயல் அனைத்தும் இந்தியாவை அவமானப்படுத்தவேண்டும் என்பதே
      ஆகும். ராஜீவ் காந்தியை அணிவகுப்பின்போது தாக்கிய விஜயமுனி பிரேமதாசவின்
      ஆதரவாளர் என்றும் அப்போது பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அவரது
      தூண்டுதலின்பேரிலேயே மேற்கண்ட தாக்குதல் சம்பவம் நடைபெற்றது என்றும்
      விமர்சித்தவர்களும் உண்டு. அதை மெய்ப்பிப்பது போன்றே, பிற்காலத்தில்
      பிரேமதாசா அந்நாட்டின் அதிபராக வந்ததும் ராஜீவ் காந்தியைத் தாக்கிய
      விஜயமுனியை நிபந்தனை ஏதுமின்று விடுதலை செய்த நிகழ்ச்சி அமைந்தது. "ராணுவ
      அணிவகுப்பில் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று பாதுகாப்பு
      அமைச்சர் லலித் அதுலத் முதலி, பதவி விலக வேண்டும்' என்றார் இலங்கை
      நிதியமைச்சர் ரோனி டிமெல். ரோனி டிமெல்லின் கருத்துக்கு அதலத் முதலி சூடாகப்
      பதிலளித்தார். "இலங்கைக் கடற்படை, அதிபர் ஜெயவர்த்தனாவின் நேரடிக்
      கட்டுப்பாட்டில் இருக்கிறது. ரோனி டிமெல் இப்படியெல்லாம் கோரிக்கை வைத்து
      அதிபரைச் சிறுமைப்படுத்துகிறார்.'
      ஆனால் அதுலத் முதலியின் பாதுகாப்பு இலாகா பறிக்கப்படவும் இல்லை, இந்தியாவும்
      அந்த சம்பவத்தைப் பெரிது படுத்தவில்லை. ராணுவ அணிவகுப்பில் ராஜீவ் காந்தி
      தாக்கப்பட்டு அதனால் மரணமடைந்திருந்தால்! இந்த விஷயத்தில் இந்திய அரசின்
      மௌனமும், ஜெயவர்த்தனா அரசின் கண்டும் காணாமலும் இருந்த போக்கும் விடையில்லாத
      புதிர்களாக இன்றுவரை தொடர்கின்றன...
   
 101: பகடைக்காயாக எம்.ஜி.ஆர்?     
போராளிகள் இந்தியாவின் ஆதரவை ஆரம்பக் காலத்திலிருந்தே, அதாவது 1983-ஆம்
      ஆண்டிலிருந்தே விரும்பினார்கள். அதன்படியே இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில்
      பயிற்சியும், தொடர்ந்து ஆயுத உதவிகளையும் அவர்கள் பெற்றனர். தமிழகத்தில் உள்ள
      சில கட்சிகள் இலங்கை மீது இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று
      வற்புறுத்தியபோதுகூட விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் தங்களுக்கு ஆயுத
      உதவி செய்தால் போதும் என்றுதான் கூறி வந்தார்கள். இந்தச் சமயத்தில் தமிழக
      முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 27.10.1983-ஆம் நாளன்று சட்டமன்றப் பேரவையில்
      கூறியதை இங்கே குறிப்பிடலாம்:
      ""விடுதலைப் புலிகள் கூட இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று
      கேட்கவில்லை. மாறாக, எங்களுக்கு உதவி செய்யுங்கள்; முடிந்தால் ஆயுதம்
      கொடுங்கள் என்றுதான் கேட்டு வருகிறார்கள். தாங்களே அந்த இயக்கத்தை
      நடத்தத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
      தனி ஈழம் வேண்டும் என்று முடிவு செய்வதோ, கேட்பதோ அங்கு வாழும் தமிழ் மக்களே
      தவிர நாம் அதை முடிவு செய்துவிட முடியாது. ஈழத் தமிழர்களோ விடுதலைப் புலிகளோ
      மற்ற இலங்கைத் தமிழர் தலைவர்களோ படை அனுப்புங்கள் என்று கேட்கவில்லை (தினமணி
      28.10.1983). அப்போது, இலங்கை மீது இந்தியா ராணுவ நடவடிக்கை
      எடுக்கவேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கூறியதையொட்டி எம்.ஜி.ஆர். அளித்த
      விளக்கம் இது:
      இந்நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமானது
      இலங்கைத் தமிழர்கள் மீதும், போராளி அமைப்புகள் மீதும் திணிக்கப்பட்டது என்று
      சொல்லப்பட்டாலும், பின் நாளில் இதனைத் தமிழ் மக்களும் - அமைப்புகளும் ஏற்கிற
      சூழ்நிலையே உருவாயிற்று. இந்நிலைக்கு மாறாக, இலங்கையின் தென் பகுதியில்
      இந்திய எதிர்ப்பு என்பது மிக வேகமாகத் தலைதூக்கிற்று. இலங்கையின் உள்
      விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் தொடங்கிய
      போராட்டம் பின்னர் வன்முறையில் முடிந்தது. சிங்களத் தீவிரவாத கட்சியான
      ஜே.வி.பி. வெகு உக்கிரமாக இயங்கியது. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளில்
      தங்காலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.வி.பி.யால் கொல்லப்பட்டார். கலவரங்களை
      அடக்க வடக்கில் இருந்து ராணுவத்தினரை தெற்குப் பகுதிக்கு அனுப்பிய அதே
      நேரத்தில், இந்தியாவில் இருந்து "அமைதிப் படை' பலாலி விமான நிலையத்தில் வந்து
      (ஜூலை 30, 1987) இறங்கியது.
      சிங்கள ராணுவத்தினரின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்ற நிலையில் இருந்த யாழ்
      மக்கள், இந்திய ராணுவத்துக்கு மாலை சூட்டி, பூர்ணகும்பம் எடுத்து வரவேற்றனர்.
      இந்திய ராணுவ வருகை என்பது அவர்களின் "மீட்பர்' போன்று கருதப்பட்டது, உண்மை.
      அவர்களுக்கு இந்நிகழ்வு மகிழ்ச்சியை அளித்த அதேநேரத்தில், பிரபாகரனை, தில்லி
      அசோகா ஹோட்டலிலேயே அடைத்து வைத்திருப்பது சங்கடத்தையும் அளித்தது. பலாலியில்
      இந்திய ராணுவம் தங்கியிருந்த பகுதிகளை நோக்கிச் செல்லும் சாலையில் மக்கள்
      அமர்ந்து, தடையை ஏற்படுத்தி, பிரபாகரனை உடனே விடுவித்து இலங்கைக்கு
      அனுப்பும்படி குரல் கொடுத்தனர். இதற்கு என்ன பதில் சொல்வது என்ற உத்தரவை
      ராணுவத்தினர் மேலிடத்திலிருந்து பெறவில்லை. எனவே சாலைகளில் அமர்ந்திருந்த
      மக்களைப் பார்த்தார்கள். அவர்களது நோக்கம் என்னவென்று கேட்டுச் சென்றார்கள்.
      அமைதிப் படையாக இலங்கைக்கு வந்த ராணுவம், போராளி இயக்கங்களிடமிருந்து
      ஆயுதங்களைப் பறிப்பதில் இறங்கியது. விடுதலைப் புலிகள் அமைப்போ ஒப்பந்தப்படி
      ஆயுதம் கையளிக்க வேண்டுமானால் பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பியாக வேண்டும்
      என்றும் அவரது அனுமதி இல்லாமல் ஆயுதங்களைத் திருப்பிக் கொடுப்பதில்லை என்றும்
      தீர்மானமாக மறுத்துவிட்டன.
      1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி இன்னொரு முக்கிய நாளாகும். அன்றைய தினம்
      இந்திய-இலங்கை ஒப்பந்தப் பிரதிகளை மதுரையில் பழ.நெடுமாறனும், சென்னையில்
      கி.வீரமணியும் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தி பெருவாரியான தொண்டர்களுடன்
      கைதானார்கள். அன்றைய தினமே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஒப்பந்தம்
      நிறைவேற்றிய ராஜீவ் காந்திக்குப் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
      சென்னை கடற்கரையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ராஜீவ் விருப்பப்படியே
      அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பாராட்டு விழா
      கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரும் கலந்துகொள்ள வேண்டும் என்று
      ராஜீவ் விரும்பினார். ஆனால் அவர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி தவிர்த்து
      விட்டார்.
      அந்த நாளில் அவர் அமெரிக்காவில் இருக்கும்படியாகத் திட்டமிருந்தபடியால், ஜூலை
      31-இல் அவர் பயணப்பட்டு, அமைச்சர்களும் அவரது இல்லத்துக்கு வழியனுப்ப
      வந்துவிட்டார்கள். தொண்டர்களோ சென்னை விமான நிலையத்தில் கூடியிருக்க, விமானம்
      புறப்பட வேண்டிய நேரம் கடந்தும் எம்.ஜி.ஆர். வராததால் தொண்டர்கள் குழப்பம்
      அடைந்தனர். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் அமெரிக்கப் பயணம் ரத்தானதாக
      அங்கிருந்து ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. பாராட்டு விழாவுக்கு
      முன்தினம் எம்.ஜி.ஆர். புறப்பட்டுச் சென்றால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில்
      அவருக்கு விருப்பமில்லை என்று தற்போது நிலவிவரும் தகவல் உண்மையாகிவிடும்.
      எனவே, அவரின் அமெரிக்கப் பயணத்தை ஒத்திவைத்து, ஒருநாள் தள்ளிப் போகச் செய்ய
      வேண்டும் என்று புலனாய்வு அதிகாரிகள் ராஜீவ் காந்தியை வற்புறுத்தி, அவரைச்
      செயல்பட வைத்தார்கள் என்ற தகவல் கூடவே வெளியாயிற்று. இதுகுறித்து 1999-இல்
      பதிப்பிக்கப்பட்ட "எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்' என்கிற நூலில் புலவர்
      புலமைப்பித்தன் கூறியதாகத் தகவல் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப்
      பதிவில், புலமைப்பித்தன் கூறுவதாவது,
      ""தமிழீழம் விடுதலை பெற்று விடும் என்கிற ஒரு முழுமையான நம்பிக்கை உருவாகிற
      சூழ்நிலையில், தமிழீழம் விடுதலை பெறுவது, தங்களுக்கு மிகவும் கெடுதலான
      காரியமாக அமைந்துவிடும் என்று நம்பினார்கள், இந்திய அரசுத் தரப்பினர்.
      ""இலங்கை அமைச்சரவையில் ஜெயவர்த்தனாவிடத்தில் அதுலத் முதலி உள்ளிட்டோர்
      ஆரம்பத்தில் தமிழர் பிரச்னைக்கு முடிவு கட்டும்படி வற்புறுத்தியபோது
      கேட்டனர். ஜெயவர்த்தனா சொன்ன பதில் என்ன தெரியுமா? "என்னை பிரபாகரன் காலில்
      விழச் சொல்கிறீர்களா?' என்றார். அப்படியென்றால் என்ன பொருள் என்றால், இந்திய
      அமைதிப் படை வராமல் இருந்தால் பிரபாகரன் காலில் விழ வேண்டிய நிலை
      ஜெயவர்த்தனாவுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதாகும். ஜெயவர்த்தனா அமைச்சரவையில்
      நிதியமைச்சராக இருந்தவர் ரோனி டி மெல். என்பவரும், அதே அமைச்சரவைக்
      கூட்டத்திலேயே சொன்னார். ""இலங்கை-இந்திய ஒப்பந்தம் மட்டும் கையெழுத்து
      ஆகாமல் இருந்திருக்குமானால் ஆறு மாதத்தில் தமிழீழம் விடுதலை பெற்று
      போயிருக்கும். இந்தியாவுடனான ஒப்பந்தம் நாட்டைப் பாதுகாப்பதற்கான ராஜதந்திர
      முயற்சி. அதைக் குறை சொல்லக்கூடாது.
      ""எம்.ஜி.ஆரின் ஆதரவுடன் தமிழீழம் மிகப்பெரிய அளவில் முன்னேறி வந்துவிடும்''
      என்கிற காரணத்தினாலேயேதான் இந்தியத் துணை கண்டத்திலிருந்து அந்த
      ஒப்பந்தத்தைப் போட்டார்கள். அப்போது அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர்.
      ஆதரிக்கவில்லை. மைய அமைச்சராக இருந்த நட்வர்சிங் ஒருமுறை ராமாவரம்
      தோட்டத்திற்கு இந்த ஒப்பந்தச் செய்தியைப் பற்றிப் பேச வந்தபோது, இதை
      என்னிடத்தில் பேசவே கூடாது எனக் கடுமையாகவும், கோபமாகவும் சொல்லி அனுப்பி
      வைத்துவிட்டார். ""இந்தத் தவறான ஒப்பந்தத்திற்கு நானும் உடந்தையாக
      இருந்துவிடக் கூடாது'' என்கிற எச்சரிக்கை உணர்வில், சென்னை கடற்கரையில்
      ""ராஜீவ் காந்தி பாராட்டு விழாவில் பங்கேற்கக் கூடாது என்றும், விடுதலைப்
      புலிகள் கையெழுத்திடாத ஒப்பந்தத்திற்கு நடக்கும் பாராட்டு விழா இங்கு
      நடக்கிறது. இதில் நான் கலந்து கொள்ளக் கூடாது'' என்றும் எம்.ஜி.ஆர்.
      நினைத்தார்.
      ""31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அமெரிக்கா புறப்படத் தயாரானபோது, தில்லியிலே
      இருந்து ஹாட்லைனிலே எம்.ஜி.ஆருடன் தொடர்பு கொண்ட ராஜீவ் காந்தி, "நீங்கப்
      போகக் கூடாது' என்றார். அவர் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படவில்லை.
      எம்.ஜி.ஆரையும் ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான்
      அவர்கள் விரும்பினார்கள்'' ""அதோடு அந்த விழாவில் ராஜீவ் காந்தி, அண்ணன்
      எம்.ஜி.ஆர். அவர்களின் கையை வலுக்கட்டாயமாகத் தூக்குகிறார்- அந்தப் படம்
      தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஏடுகளில் வந்திருக்கிறது. அப்போது
      எம்.ஜி.ஆர். அவர்களின் முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். ஒப்பந்த
      உடன்பாட்டை அவர் ஏற்கவில்லை என்பதை (பக்.133-136) என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
      இதே கருத்தையே பழ.நெடுமாறனும் தனது நூலொன்றில் பதிவு செய்கையில், "வேண்டா
      வெறுப்பாகவும் வேறு வழியில்லாமலும் எம்.ஜி.ஆர். இந்தக் கூட்டத்தில் கலந்து
      கொண்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment