Sunday, November 7, 2010

106 கேள்விக்குறியான புலிகளின் பாதுகாப்பு!, 107: போராளி இயக்கங்களிடையே மோதல்!

 106 கேள்விக்குறியான புலிகளின் பாதுகாப்பு! ஒப்பந்தத்தில் இல்லாவிட்டாலும் சட்டம் ஒழுங்கு இந்திய அமைதிப்படையின்
      பொறுப்பில் விடப்பட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் குறிப்பிட்டுள்ள
      நிலையில், கிழக்கில் புதிதாக காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
      யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து
      மட்டக்களப்புக்கும் ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று
      அறிவிக்கப்பட்டது. ரயில்வே பாதையை ஆய்வு செய்ய ஒரு குழு வந்தது. சிலிப்பர்
      கட்டைகள் நீக்கப்பட்டிருந்த நிலையில் புதிய சிலிப்பர் கட்டைகள்
      பொருத்தப்பட்டன. குறிப்பிட்ட தூரம் ரயில் ஓட்டியும் காட்டப்பட்டது.
      25.10.09.அதேபோன்று வான்சேவை துவங்கிற்று. சென்னையிலிருந்து கொழும்புக்கும்,
      யாழ்ப்பாணத்துக்கும் விமானப் போக்குவரத்தை நடத்த இந்திய அமைதிப்படை
      நிர்வாகம், ஏற்பாடு செய்திருந்தது. சென்னையில் வசித்த யாழ்ப்பாணம் மற்றும்
      திருகோணமலைவாழ் தமிழர்கள் தங்களது இல்லம் திரும்பவே இந்த வசதி
      செய்யப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகள் இயக்கம், ஆயுதங்களைக் கையளித்த
      நிலையில், அரசியலுக்குத் திரும்ப முடிவு செய்திருந்தது. தங்களது போராளிக்
      குழுவினருக்கு கவிஞர் காசி ஆனந்தன் அரசியல் வகுப்பு நடத்தப்
      பணிக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழமுரசு, உதயன்
      பத்திரிகைகளில் காரசாரமான மரபு சார்ந்த விமர்சனங்கள் இடம்பெற்றன.
      அப்பத்திரிகைகளின் விமர்சன இலக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி செயல்பாடுகள்
      குறித்தே அதிக அளவில் இடம்பெற்றன. வன்னிப் பகுதிகளில் "த்ரீ ஸ்டார்' என்று
      அழைக்கப்பட்ட ஈஎன்டிஎல்எஃப், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., டெலோ இயக்கத் தவர்கள்
      விடுதலைப் புலிகள் மீது தாக்குதலைத் தொடுக்கத் தூண்டப்பட்டார்கள்.
      அத்தகையவர்களுள் பிரபலமானவர்கள் பிளாட் இயக்க உறுப்பினரான சங்கிலி
      (கந்தசாமி)யும், ஈஎன்டிஎல்எஃப் ராஜனும் ஆவார்கள்... (ஆதாரம்: முறிந்தபனை :
      பக் 168) விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதம் கையளித்த சூழ்நிலையில், மற்ற
      இயக்கங்களும் ஆயுதங்களை அமைதிப்படையிடம் ஒப்படைத்துவிட்டதாகச் சொன்ன
      நிலையில், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில்
      ஆயுதக் குழுக்களிடையே தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும்
      தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் அடுத்தடுத்து வந்தன. இந்நிலையில் பிரபாகரன்,
      லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கை 15-8-1987அன்று சந்தித்தபோது, சில
      புகார்களைத் தெரிவித்தார். அதுகுறித்து தனது நூலில் தீபிந்தர் சிங்
      குறிப்பிடுவதாவது:
      ""எங்களை ஆயுதங்களைக் கையளிக்கச் சொல்லிவிட்டு, அது நடந்த பின்னர், "ரா'
      அமைப்பு, பிற ஆயுதக்குழுக்களான டெலோ, ஈபிஆர்எல்எஃப் மற்றும் ஈஎன்டிஎல்எஃப்
      இணைந்த "த்ரீ ஸ்டார்' என்கிற அமைப்பை எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு
      மோதல்களை நடத்தி வருகிறது'' என்று தெரிவித்தார். இந்தப் புகார்கள்
      கடுமையானவை. இதுகுறித்து ராணுவத் தலைமையகத்துக்குத் தெரியப்படுத்தினேன்.
      அங்கிருந்து வந்த தகவல்கள் புகாரை உறுதிப்படுத்துவதாக இல்லை. எனவே,
      பிரபாகரனிடம் இந்தப் புகார் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று
      தெரிவித்தபோது, அவரோ புகாரில் உறுதியாக இருந்தார். பிற இயக்கங்களிடையே "ரா'
      அமைப்புக்கு உறுதியான தொடர்புகள் இருக்கின்றன என்றார். மேலும் தகவல்கள்
      கிடைக்கும்வரை காத்திருக்கும் நேரத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள
      போராளிகளைக் காவல் பணியில் ஈடுபடுத்தலாமா என்று யோசித்ததாகவும் அவர்
      குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் அந்த சமயத்தில் யாழ்ப் பகுதிகளில் காவல்
      நிலையங்கள் மூடப்பட்டு அந்தப் பணி உள்ளிட்ட சிவில் நிர்வாகத்தை விடுதலைப்
      புலிகளே செய்து வந்தனர். தற்சமயம் இந்தப் பணியையும் அமைதிப்படையே
      செய்யவேண்டும் என்றபோது, உள்ளூர்வாசிகளை அதில் ஈடுபடுத்துவது சரியானதாக
      இருக்க முடியும் என்பதையும்விட, விடுதலைப் புலிகளுக்கு மாற்று வேலை
      வழங்கினதாகவும் ஆகும் என்று தீபிந்தர்சிங் நினைத்தார். ஆனால், ராணுவத் தலைமை
      அவரது முதல் பணி ஆயுதங்களைப் பறிப்பதுதான் என்று நாகரிகமாக மறுத்துவிட்டது.
      பிற போராளி அமைப்புகளுக்கு "ரா' அமைப்பு திரும்பவும் ஆயுதங்கள் அளித்ததை
      தீபிந்தர்சிங் நிராகரித்த நிலையில், இதற்கான ஆதாரத்தை மேஜர் ஜெனரல் ஹர்கிரத்
      சிங்கிடம் விடுதலைப் புலிகள் அளித்ததாக அப்போது செய்திகள் வெளியாயின. இந்தச்
      சம்பவம் குறித்து ஹர்கிரத் சிங் தான் எழுதிய நூலில், ""விடுதலைப் புலிகள்
      ஆயுதக்கையளிப்பை ஆகஸ்டு 21-ம் தேதி முடித்தார்கள். இந்த நேரத்தில் பிரதமர்
      அலுவலக உத்தரவின் பேரில், "ரா' அமைப்பு பிற போராளி அமைப்புகளுக்கு ஆயுதம்
      வழங்குகிறது என்கிற புகாரையடுத்து, தலைமை அலுவலகத்துக்கும், இலங்கையில் உள்ள
      இந்தியத் தூதர் மற்றும் அவரது ராணுவ ஆலோசகருக்கும் அறியப்படுத்தப்பட்டது.
      விடுதலைப் புலிகள் அளித்த வீடியோ ஆதாரத்தை இந்தியத் தூதருக்குப் போட்டுக்
      காட்டினேன். அந்த வீடியோ காட்சிகளில் "ரா' அதிகாரிகள் வழங்கியதாகச்
      சொல்லப்படும் ஆயுதங்களில் இந்தியக் குறியீடுகள் இருந்தன.
      இவ்வாறு விடுதலைப் புலிகள் தவிர்த்து, மற்ற குழுக்களுக்கு ஆயுதம்
      வழங்கப்பட்டதானது, குழுக்களுக்கிடையே மோதல் போக்கை உருவாக்கியது. யாழ்ப்பாணம்
      அமைதிப்படை முகாமுக்கு விடுதலைப் புலிகள் வந்து, "இவ்வாறு பிற குழுக்களுக்கு
      ஆயுதம் அளிப்பதால் எங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது.
      ஈ.என்.டி.எல்.எஃப். அமைப்பைச் சேர்ந்த 150 பேருக்கு கிளிநொச்சியில் பயிற்சி
      அளிக்கும் பொறுப்பையும் "ரா' ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் எங்களது
      போராளிகளுக்கு ஆபத்து அதிகரித்துள்ளது' என்று மீண்டும் புகார் தெரிவித்தனர்.
      "இந்திய அரசு இதுபோன்ற சூழ்நிலையை ஏன் உருவாக்கவேண்டும் "ரா' அமைப்பு பிரதமர்
      ராஜீவ் காந்தியின் அறிவுறுத்தல் பேரில் நடந்துகொள்வதாகச் சொல்லப்படுவதை
      உண்மையில் பிரதமர் அறிவாரா? பிரதமர் ராஜீவ் காந்தியின் குரலாகச் செயல்படும்
      இலங்கையின் இந்தியத்தூதர் இதைத் தடுக்க ஏன் முன்வரவில்லை? இதன் விளைவுகள்
      என்னவாகும் என்பது அவர் அறியாததா?' என்றும் ஹர்கிரத் சிங் அடுக்கடுக்காக பல
      கேள்விகளை தனது நூலில் எழுப்பியுள்ளார்.
      107: போராளி இயக்கங்களிடையே மோதல்!      இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு எதிராக மறைமுகமாக ஆயுதங்கள் வழங்குவது அவர்களை
      அடக்கியொடுக்கத்தான் என்று குற்றச்சாட்டு எழுந்தது. பிற இயக்கங்களுக்கு
      விடுதலைப் புலிகள் குறித்தும் அமைதிப்படை குறித்தும் ஐயப்பாடுகள் இருந்தன
      என்பது பல்வேறு செய்திகளில் இருந்து தெரிய வருகிறது. "முறிந்த பனை' நூலில்
      இந்த சந்தேகங்களும், அதன் செயல்பாடுகளுமான பதிவில் கூறப்பட்டிருக்கிறது.
      "விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பிரத்தியேகமாக இந்தியர்கள் பேச்சுவார்த்தை
      நடத்திக்கொண்டிருந்தமையானது, விடுதலைப் புலிகளைக் கணக்கில் எடுத்தாக வேண்டிய
      வலிமை வாய்ந்த சக்தியாகத் தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதையும், அவர்களைத்
      தவிர்ப்பது என்பது வீண்வம்பை விலைக்கு வாங்கும் முயற்சியே என்றும்
      இந்தியர்கள் கருதிக்கொண்டதற்கான அறிகுறியாகும். பின்னர் இடம்பெற்ற
      நிகழ்ச்சிகளும் இதனை உறுதிப்படுத்துவனவாகவே இருந்தன' என்று
      கூறப்பட்டிருப்பதில் இருந்து விடுதலைப் புலிகளின் வலிமை வெளிப்படுகிறது.
      மேலும் அதே "முறிந்த பனை' நூலில், பிற போராளி இயக்கங்கள் குறித்து கருத்துத்
      தெரிவிக்கையில், "தாங்களின் விரக்தியில் அவர்கள் தமிழ்ப்பொதுமக்கள் மீது,
      குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வருபவர்கள்மீது விடுதலைப் புலிகளுக்கு
      ஆதரவானவர்கள் என்ற நினைப்பில் பெருங்கசப்பு கொண்டிருந்தனர்' என்று
      குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கசப்பு நிலையே பல்வேறு மோதல்களுக்குக் காரணமாக
      இருந்தது. பயணிகளுக்கும் அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை
      உருவாயிற்று. திடீர்க் கொலைகளும் ஆங்காங்கே நடந்தன. "இந்தியர்களின்
      அக்கறையில் பொதுமக்கள் உண்மையாகவே மிகக் கீழான இடத்திலேயே
      வைக்கப்பட்டிருந்தனர்' என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது. மன்னாரில்
      விடுதலைப் புலிகள் மூவர் கொல்லப்பட்டதும் அதன் எதிரொலியாக நடைபெற்ற மோதல்கள்
      குறித்தும் அமைதிப் படைக்குப் புகார் வந்தபோது, சட்டம் ஒழுங்குப் பிரச்னை
      மன்னாரைப் பொறுத்து அமைதிப் படையைச் சார்ந்ததல்ல-அங்கு இலங்கை அரசின் காவல்
      நிலையங்கள் இயங்குகின்றன. அந்த நிலையங்கள் அந்த வேலையைப் பார்த்துக்கொள்ளும்
      என்று காரணம் கூறிவிட்டது. ஆனால், அடுத்த நாளே அமைதிப்படை தலைமையிடமிருந்து
      மன்னாரிலும் சட்டம்-ஒழுங்கை அமைதிப்படை பராமரிக்கவேண்டும் என்று உத்தரவு
      வந்தது. அப்படியென்றால், சி.ஆர்.பி.எஃப். படைப்பிரிவினரையும், கலவரம்
      நேர்ந்தால் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் உள்ளிட்ட சாதனங்களையும்
      அனுப்பவேண்டும் என்று அமைதிப்படை கூறியதும், அக்கோரிக்கை உடனடியாக
      நிறைவேற்றப்பட்டது.
      மதச் சிறுபான்மையினர் கடத்தல் மற்றும் கொலைகள் நடத்தப்படுவதாகப் புகார்கள்
      வந்தன. போராளி இயக்கங்களுக்கிடையே இது குறித்துப் புகாரும், எதிர்ப்புகளும்
      எழுப்பப்பட்ட நிலையில், தமிழ்ப் பகுதிகளில் மரபு ரீதியான வேலை நிறுத்தங்களும்
      நடைபெற்றன. இந்த வேலை நிறுத்தங்கள் அடுத்தடுத்த நாளில்கூட நடைபெற்றன.
      அமைதிப்படை வருகையையொட்டி எல்லாமும் நல்லதாக நடக்கும் என்பதை மெய்ப்பிக்க,
      சிங்கள ராணுவம் மற்றும் சிங்கள இனவாத அரசுகளால் செயலிழந்தவற்றை,
      செயல்படவைக்க, பெரியதொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வங்கிகள் இயங்கின.
      இதற்கென ராணுவ வாகனங்களில் கொழும்பிலிருந்து ரூபாய் நோட்டுகள்
      வரவழைக்கப்பட்டன. வங்கி ஊழியர்களை அவர்களது இல்லத்திலிருந்தே அழைத்து வந்து
      வங்கிகளில் அமர வைத்தனர். வங்கிகள் திறக்கப்பட்டன. பணம் இருந்தது. ஆனால்
      வாடிக்கையாளர்கள் வருகை என்பதுதான் இல்லாதிருந்தது. அதேபோன்று நீதிமன்றம்
      செயல்படவும், முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிங்கள அரசு நிர்வாக
      அமைப்பில் உள்ள நீதிமன்றத்தை மக்கள் புறக்கணித்தார்கள். காரணம், விடுதலைப்
      புலிகளால் நிர்வகிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தில்தான் புகார்கள்
      எடுத்துக்கொள்ளப்பட்ட சூழ்நிலை அப்போது யாழ்ப்பாணத்தில் நிலவி வந்தது.
      அதுமட்டுமல்ல, நிலவரி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாற்று ஏற்பாடு
      செய்யப்பட்டிருந்ததைப் பார்த்ததாக லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.சி.சந்தோஷ் பாண்டே
      தனது நூலில் குறிப்பிடுகிறார். இடைக்கால நிர்வாக சபை அமைப்பது இந்திய-இலங்கை
      ஒப்பந்தத்தில் ஓர் அம்சம். எட்டு பேரைக்கொண்ட நிர்வாக சபையில் விடுதலைப்
      புலிகள் அமைப்புக்கு 3 இடங்கள், தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணிக்கு 2
      இடங்கள், இன்னொரு ஆயுதப் போராட்டக்குழுவுக்கு ஓர் இடம், மீதமுள்ள 2
      இடங்களுக்கு அரசுப் பிரதிநிதிகளுக்கென ஒரு திட்டம் முன்வைத்துப் பேசப்பட்டது.
      இந்த இடைக்கால சபையின் பணி, இலங்கை அரசினதும் அமைதிப்படையினதுமான
      உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு, வடக்கு-கிழக்கு நிர்வாகப் பணிகளை
      மேற்கொள்வது, மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் காலம் வரை செயல்படுவது என்று
      தீர்மானிக்கப்பட்டது. இந்த மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று
      கேள்வி எழுப்பப்பட்டபோது உறுதியான தகவல் இல்லை. ஆறு மாதத்திலும் நடக்கலாம்;
      அல்லது ஓராண்டு இடைவெளியிலும்கூட நடக்கலாம் என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டது.
      இந்தத் திட்டத்தில் இடம்பெற விடுதலைப் புலிகள் அமைப்பு விருப்பம்
      காட்டவில்லை. இடைக்கால நிர்வாக சபையில் 3 இடங்களைப் பெற்று, சாதிக்கப்போவது
      ஒன்றுமில்லை. இலங்கை அரசின் வழிகாட்டுதலில், அமைதிப்படையின் உத்தரவின் கீழ்,
      நிர்வாகத்தில் எந்த முடிவினையும்கூட எட்ட முடியாத சூழ்நிலையே உருவாகும்
      என்பது அவர்களது வாதமாக இருந்தது. இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்திலேயே இருக்க,
      இந்திய அமைதிப்படையின் முகாம்கள் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டன.
      பாதுகாப்புக் கோரிய போராளிக்குழுக்களுக்கு, பாதுகாப்பு அளிக்கவும்
      போராளிக்குழுக்களிடையே ஏற்படும் மோதலைத் தடுக்கவும் புதிய முகாம்கள்
      அமைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும் விடுதலைப் புலிகளுடனான சுமுக
      நிலையை அமைதிப்படை குறைத்துக்கொள்ளவேண்டும் என்று மேலிடத்திலிருந்து
      அறிவுறுத்தப்பட்டது.
      பிற போராளி இயக்கங்களுக்கு ஆயுதம் அளிப்பது குறித்து விடுதலைப் புலிகள்
      எழுப்பிய புகாருக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கொழும்பில்,
      அமைதிப்படைத் தளபதி ஹர்கிரத் சிங் உள்ளிட்டோருடன் இந்தியத் தூதுவர்
      ஜே.என்.தீட்சித் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஈ.என்.டி.எல்.எஃப்., பிளாட்,
      டெலோ அமைப்புகளை அமைதிப்படை ஆதரிக்கிறது என்ற செய்தியைப் பரப்பவேண்டும் என்று
      தூதுவர் கூறவும், அது தேவையில்லை... யாழ் மக்கள் இதை எப்போதோ பேச
      ஆரம்பித்துவிட்டார்கள் என்று தளபதி தெரிவித்தார். பிற இயக்கங்களுக்கு ஆயுதம்
      அளிப்பது பற்றி விவாதம் வந்தபோது, ஆயுதம் அளிப்பது மட்டுமல்ல,
      ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தைச் சேர்ந்த 150 பேருக்கு, கிளிநொச்சியில்
      பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவது குறித்தும் பிரபாகரன் புகார்
      தெரிவித்திருக்கிறார் என்று தளபதி குறிப்பிட்டார். யாழ் மக்கள் ஆதரவைப் பெறாத
      அமைப்புகளுக்கு ஆயுதம் அளித்தும், பயிற்சி கொடுத்தும் வருவதால்
      அமைதிப்படையின் பணி சிக்கலைச் சந்திக்கும். விடுதலைப் புலிகள் மீது விமர்சனம்
      இருந்தபோதிலும், அம்மக்கள் தங்களின் "பாதுகாவலன்' என்ற நிலையில் புலிகளையே
      நம்புகிறார்கள் என்றும் தளபதி கருத்துத் தெரிவித்தார்.
      இக்கருத்தை மாற்றும் பணியை அமைதிப்படை மேற்கொள்ளவேண்டும் என்றும் இதற்கான
      பிரசாரத்தை முடுக்கிவிடவேண்டும் என்றும் இந்தியத் தூதவர் அறிவுரை வழங்கினார்.
      அமைதிப்படைத் தளபதியோ, இந்தப் பிரசாரத்தை மக்கள் நம்பமாட்டார்கள் என்றும்,
      அவர்கள் விடுதலைப் புலிகளோடு இருக்கிறார்கள் என்றும், அமைதிப்படை
      தங்கியிருக்கும் காலம் குறித்தும் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியாத நிலையில்
      இப் பிரசாரம் சாத்தியமில்லை என்றும் கருத்துத் தெரிவித்தார். ஆனால் அவரின்
      கருத்து ஏற்கப்படவில்லை. மாறாக, இலங்கை கடற்படையினருடன் சேர்ந்து, இந்தியக்
      கடற்படையினரும் இரவில் ரோந்துக்குப் போக இருக்கிறார்கள் என்றும், சமீப
      காலத்தில் இலங்கையின் கடற்பகுதியில் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை
      அதிகரித்திருப்பதால், அவர்கள் மீன்பிடிதொழிலில் ஈடுபடுகிறவர்களாக இருக்க
      முடியாது என இலங்கை அரசாங்கம் கருதுவதாகவும் சொல்லப்பட்டது. போராளி
      இயக்கங்களிடையே மோதல் ஏற்பட இந்திய அரசுதான் காரணம் என்கிற சந்தேகம் பரவலாக
      எழுந்தவண்ணம் இருந்தது .

No comments:

Post a Comment