Sunday, November 7, 2010

128: வரலாறு காணாத தில்லுமுல்லு,129: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு!

128: வரலாறு காணாத தில்லுமுல்லு கிராமப்புறங்களில் 35 சதவீத வாக்குகள்தான் போடப்பட்டுள்ளன என்று செய்தி
      வெளியாயிற்று. ஆனால், வரலாறு காணாத அளவுக்கு மக்கள் பெருவாரியாகச் சென்று
      வாக்களித்தனர் என்றும், மட்டக்களப்பில் 80 சதவீதம், திருகோணமலையில் 53
      சதவீதம், அம்பாறையில் 55 சதவீதம் மக்கள் வாக்களித்தனர் என்றும் வாக்குப்பதிவு
      அறிவிக்கப்பட்டது. ""தேர்தலில் பெருவாரியாக மக்கள் வாக்களித்ததன் மூலம்
      ஈழத்தமிழ் மக்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
      விடுதலைப் புலிகளின் வன்முறைப் பாதையை முற்றாக நிராகரித்துவிட்டார்கள்''
      என்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்திய அமைதிப்படை
      பிரசாரம் செய்ய ஆரம்பித்தது. மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் முடிவுகளின்படி
      1,72,536 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 77
      வாக்குச் சாவடிகள்தான் அமைக்கப்பட்டிருந்தன. இதன்படி ஒரு வாக்குச் சாவடியில்
      சராசரி 2,240 வாக்குகள் போடப்பட்டிருக்க வேண்டும்.
      தேர்தல் வாக்களிப்பு காலை 7 மணியிலிருந் து மாலை 4 மணி வரை (ஒன்பது மணி
      நேரம்) நடைபெற்றது. பெரும்பாலான வாக்காளர்கள் காலை 10 மணிக்கு மேல்தான் தாம்
      வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடி எது என்பதை அறிந்து அங்கு செல்ல
      முடிந்தது. 2,240 பேர் வாக்களிப்பதற்கு 7 மணியிலிருந்து இடைவிடாது
      வாக்களிப்பு நடைபெற்று, நிமிடத்துக்கு 4 வாக்காளர்களுக்கு மேல்
      வாக்களித்திருக்க வேண்டும். எந்த வகையிலும் இது சாத்தியமானதல்ல. மட்டக்களப்பு
      மாவட்டத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு மூன்று கட்சிகளின் சின்னங்களையும்
      நாற்பத்திரண்டு வேட்பாளர்களின் பெயர்களையும் கொண்டிருந்தது. சுமார் ஒன்றரை
      அடி நீளமானது. அந்த வாக்குச்சீட்டில், வாக்காளர்கள், முதலில் தாம் விரும்பிய
      கட்சிக்கு, கட்சியின் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதன் பின்னர் 42
      பெயர்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலிலிருந்து தாம் விரும்பும் வேட்பாளர்
      ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும்.
      பிறகு, இரண்டாவதாக விரும்பும் மாற்று வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க
      வேண்டும். அதன்பின் ஒன்றரை அடி நீளமான அந்த வாக்குச்சீட்டைக் குறைந்த பட்சம்
      நான்காக மடித்து வாக்குப் பெட்டிக்குள் போடவேண்டும். இவற்றுக்கு மட்டும்
      குறைந்தபட்சம் 30 வினாடிகளாவது தேவைப்படும். அது தவிர, வாக்காளர்களுக்கு
      முன்கூட்டியே வாக்காளர் அட்டைகள் வழங்கப்படாததால் வாக்குச் சாவடிகளுக்குச்
      சென்று அங்குள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று சரிபார்த்துப்
      பின்னர் வாக்குச் சீட்டை வாங்கிக்கொண்டு, கை விரலுக்கு மை பூசிக்கொண்டு
      வாக்களிக்கத் தயாராகக் குறைந்தபட்சம் 45 வினாடிகளாவது தேவை. வாக்காளர் அட்டை
      கிடைக்காத ஒருவர் தன்னுடைய வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று, தன்
      பெயரையும் வசிப்பிடத்தையும் கூறினால் வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்
      சீட்டை வழங்குபவர் தாம் வைத்திருக்கும் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர்
      இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடித்து உறுதி செய்ததன் பின்புதான் வாக்குச்
      சீட்டை வழங்குவார். சராசரி 2,000 பேர் கொண்ட வாக்காளர் பட்டியலிலிருந்து
      வாக்காளர் பெயரைக் கண்டுபிடிக்கப் பல நிமிடங்கள் ஆகும்.
      ""வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கையில் கிடைக்காததால் எந்த வாக்குச்
      சாவடியில் வாக்களிப்பது என்று தெரியாமல் ஒவ்வொரு வாக்குச் சாவடியாகச் சென்று
      பார்த்து, அங்குள்ள வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இருக்கிறதா என்று
      அவர்கள் பார்க்க வேண்டியிருந்தது'' என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர்
      ரீட்டா செபஸ்தியான் தெரிவித்துள்ளார். (20.11.88-இந்தியன் எக்ஸ்பிரஸ்)
      எப்படிப் பார்த்தாலும், இயந்திரகதியில் இயங்கினாலும் கூட ஆக, குறைந்தபட்சம்
      ஒரு வாக்கைப் போடுவதற்கு ஒரு நிமிடத்துக்கும் அதிகமாகத் தேவை. அப்படி
      இயந்திரகதியில் வாக்களித்தாலும் கூட மட்டக்களப்பில் உள்ள 77வாக்குச்
      சாவடிகளிலும் அதிகபட்சம் 41,580 வாக்குகள்தான் போடப்பட்டிருக்க முடியும்
      என்பது விடுதலைப் புலிகளின் வாதமாக இருந்தது. விடுதலைப் புலிகளின்
      வெளியீட்டில் மேலும் கூறுவதாவது: கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவுகள் தரும்
      புள்ளி விவரங்களின்படி 15 வினாடிக்கு ஒரு வாக்கு போடப்பட்டிருக்க வேண்டும்.
      ஒரு வாக்குச் சாவடிக்கு 2,240 வாக்காளர் என்பது சராசரிதான். வாக்குச்
      சாவடிகள் அனைத்திலும் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரே அளவினதாக இல்லை. சில
      வாக்குச் சாவடிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளும் சில வாக்குச்
      சாவடிகளில் 3,000-க்கும் அதிகமான வாக்குகளும் இருந்திருக்கின்றன.
      எனவே, வாக்காளர்கள் எண்ணிக்கை சராசரிக்கு அதிகமாகவுள்ள வாக்குச் சாவடிகளில்,
      வாக்களிப்பு வேகம் 1 வாக்குக்கு 10 வினாடிகளாவது இருந்திருக்க வேண்டும். கை
      விரலுக்கு மை பூசாமல், வாக்காளர் பட்டியலைப் பார்த்து வாக்குச் சீட்டுகளைப்
      பெற்றுக்கொள்ளாமல் வாக்குச் சீட்டுகளை டேபிளில் மொத்தமாக அடுக்கி
      வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்து ஒரு ஆள் வேகம் வேகமாக வாக்குச் சீட்டை
      அடையாளமிட்டு மடித்துப் பெட்டியில் போடுவதானாலும் 10 வினாடிக்கு மேல் தேவை.
      தேர்தலைப் பார்வையிட இந்திய அரசு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டு
      ஏற்கெனவே "செட்டப்' செய்யப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் வாக்கு போடப்பட்ட
      விகிதத்தையும் வேகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாலும் அங்குகூட நிமிடத்துக்கு
      2 வாக்குகள்கூட போடப்படவில்லை. இந்திய அரசு அதிகாரிகளினால் வாக்களிப்பைப்
      பார்வையிட கொழும்பிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ்
      நிருபர் ரீட்டா செபஸ்தியான் கூற்றுப்படி, திருகோணமலை, ஜமாலியா முஸ்லிம்
      பாடசாலை வாக்களிப்பு நிலையத்தில் காலை 7 மணி முதல் 11.20 வரை 500
      வாக்குகள்தான் போடப்பட்டிருந்தன. அதாவது, ஒரு நிமிடத்துக்கு 2 (260
      நிமிடத்துக்கு 500) வாக்குகள்கூடப் போடப்படவில்லை. ஒரு வாக்களிக்க
      (260/500-.52 நிமிடம்) 30.3 வினாடிகள் எடுத்திருக்கிறது. மட்டக்களப்பில்
      கொண்டாவில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சில் மாலை 3.10 மணி வரை 1,100 வாக்குகள்
      போடப்பட்டிருந்தன. அதாவது 490 நிமிடங்களில் 1,100 வாக்குகள்
      போடப்பட்டிருந்தன. ஒரு வாக்களிக்க (490/1, 100-.45 நிமிடங்கள்) 27 வினாடிகள்
      ஆகியிருக்கின்றது. இந்தியத் தூதரக அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்ட
      வீரகேசரி பத்திரிகை நிருபர் எஸ்.என்.பிள்ளை எழுதியிருப்பதன்படி, மட்டக்களப்பு
      உப்போடை வாக்குச் சாவடியில் மாலை 2.30 மணி வரை 860 வாக்குகள்
      போடப்பட்டிருந்தன. அதாவது 450 நிமிடங்களில் 860 வாக்குகள் போடப்பட்டிருந்தன.
      ஒரு வாக்களிக்க (450/860-.52 நிமிடங்கள்) 31.2 வினாடிகள் ஆகியிருக்கின்றது.
      மட்டக்களப்பு, புத்தூர், விக்னேஸ்வரா வித்யாலய வாக்களிப்பு நிலையத்தில் பகல்
      12 மணி வரை 205 வாக்குகள் மட்டும்தான் போடப்பட்டிருந்தன. ஒரு வாக்களிக்க
      (300/205-1.46 நிமிடங்கள்) 87 வினாடிகள் எடுத்திருக்கின்றது. மக்கள் ஆர்வமாக
      பெருவாரியாக வந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக இந்திய
      அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று
      காட்டப்பட்ட வாக்குச் சாவடிகளிலேயே ஒரு வாக்களிக்க 87 வினாடி, 31 வினாடி, 30
      வினாடி என ஆகியிருக்கிறது என்றுதான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 10 முதல்
      15 வினாடிக்குள் ஒவ்வொரு வாக்கும் இடைவிடாது போடப்பட்டிருந்தால்தான் தேர்தல்
      முடிவுகளில் அறிவிக்கப்பட்ட 1,72,536 வாக்குகள் மட்டக்களப்பு மாவட்டத்தில்
      போடப்பட்டிருக்க முடியும். எந்த விதத்திலும் அது சாத்தியமில்லை. மேற்படி
      தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய மக்கள் அளித்துள்ள வாக்குகள் பற்றிய
      முடிவுகளின்படி- மட்டக்களப்பு மாவட்டத்தில்.... வெற்றி பெற்ற
      ஈபிஆர்எல்எஃப்-க்கு கிடைத்த மொத்த வாக்குகள் 2,78,179 (99.7%) வெற்றி பெற்ற
      ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 639 (.22%)
      73.58 சதவீதம் வாக்குகளைப் பெற்ற ஈபிஆர்எல்எஃப் கட்சியின் சார்பில் வெற்றி
      பெற்ற உறுப்பினர்களுக்குக் கிடைத்த வாக்குகள் வீதம் -99.7% 24.4 சதவீதம்
      வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற
      உறுப்பினர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் வீதம் -22%.
      மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில்
      73.58 சதவீதம் வாக்குகளைப் பெற்ற ஈபிஆர்எல்எஃப்-க்கு வேட்பாளர்களுக்காக
      அளிக்கப்பட்ட வாக்குகளில் 99.7 சதவீதம் கிடைத்திருக்கும். அதே நேரம், 24.4
      சதவீத வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக
      (0.22) கால் சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.
      ஈபிஆர்எல்எஃப் வேட்பாளர்களின் வாக்குகள் முழுக்க முழுக்க
      போடப்பட்டிருக்கிறது. அதே வேளை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் வாக்குகள்
      போடப்படவில்லை
      129: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு!      நடந்து முடிந்த தேர்தல் குறித்து, விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் அறிக்கையை
      வெளியிட்டது. அவ்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ""இத் தேர்தல் பற்றி
      இலங்கையின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும், கிழக்கு மாகாணத்தைச்
      சேர்ந்தவருமான கே.டபிள்யு. தேவநாயகம் விடுத்திருந்த அறிக்கையில், * கிழக்கு
      மாகாணத்தில் கொலை, பயமுறுத்தல் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் மேலோங்கி
      இருந்தபடியால் தேர்தல் பிரசாரத்தில் எம்மால் ஈடுபட முடியவில்லை. இத்தகையதொரு
      சந்தர்ப்பத்தில் நடந்து முடிந்துள்ள மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை வைத்து
      ஜனநாயகம் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது கவலை தரக்கூடியதாக இருக்கிறது. *
      கிழக்கின் இன்றைய சூழ்நிலை குறித்து அரசு மேலிடத்தின் கவனத்திற்கு விரிவாக
      எடுத்துரைப்போம். வேட்பு மனு பெறப்பட்ட முறை பற்றியும், அரசாங்க அதிபர்
      (மாவட்ட கலெக்டர்) அம் மனுக்களைப் பெறக்கூடிய நிலையில் இல்லை என்பது
      பற்றியும் மேலிடத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.
      * ஆனால், இத்தனைக்கும் மத்தியில் தேர்தல் நடத்தப்பட்டது. இத் தேர்தல்
      முடிவுகளை வைத்தும் கிழக்கின் அரசியல் மற்றும் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்து
      கொள்ளாமலும் மக்கள் ஜனநாயகத்தை விரும்புகின்றனர் என்று கருத்து வெளியிடுவது
      பொருத்தமானது அல்ல'' என்று கூறியிருக்கிறார். அதேநேரம், கிழக்கு மாகாணத்தில்
      தேர்தலில் போட்டியிட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். போன்றே 17 இடங்களைக் கைப்பற்றிய
      ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஜனாப் எம்.எச்.எம். அஷ்ரப் தேர்தல்
      பற்றி விடுத்த அறிக்கையில் ""முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை இந்திய-இலங்கை
      ஒப்பந்தம் உள்ளடக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டுமானால் கிழக்கு
      மாகாணத்திலிருந்து ஐக்கிய தேசியக்கட்சியை (ஜெயவர்த்தனா கட்சி) தோற்கடிக்க
      வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
      விடுத்துள்ள மற்றுமொரு அறிக்கையில்,
      ""கிழக்கில் குறிப்பிட்ட அமைப்பொன்று தனித்துவமாகப் போட்டியின்றித்
      தெரிவாகும் நிலையைத் தவிர்க்கவே நாம் தேர்தலில் பங்கு கொள்வதென்று
      தீர்மானித்தோம். இதன் மூலம் புலிகளின் குரலும் ஒலிக்கும். அதேநேரம்,
      முஸ்லிம்களின் உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது
      நிலைப்பாடாகும்'' என்றும் கூறப்பட்டுள்ளது. (18.10.88 வீரகேசரி).
      அதுமட்டுமல்ல, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களின் அபிலாஷைகளைச்
      சேர்த்துக் கொள்ளாமல் அவர்களைக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக்கிய
      அரசின் திட்டங்களை முறியடிக்கக் கூடிய எமக்குள்ள ஒரே வழி தேர்தலில்
      போட்டியிடுவதாகும். இந்த நிலைமைகளிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தைக்
      காப்பாற்றவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
      இந்தியாவின் சொல்லுக்கு தலையாட்டக் கூடிய ஓர் ஆட்சியில் முஸ்லிம்களின் குரல்
      ஒலித்திருக்க முடியாது. தமிழர் சமூகத்தின் போராட்டங்களை முன்னெடுத்துச்
      செல்லும் விடுதலைப் புலிகளின் நியாயங்களும் கொச்சைப் படுத்தப்பட்டிருக்கும்.
      நாம் போட்டியிடாவிட்டால் வடக்கு கிழக்கு மாகாண சபை ஓரங்க
      நாடகமாகியிருக்கும்'' என்றும் இன்னொரு அறிக்கையை வெளியிட்டதன் மூலமாகத் தனது
      நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்திருக்கிறது. (25.10.88
      உதயன் நாளிதழ்). மேற்கண்ட அறிக்கைகளிலிருந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
      இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் முஸ்லிம்கள் மீது
      திணிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அது கடுமையாக எதிர்க்கிறது என்றும், இந்திய
      இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் முஸ்லிம்களை அடிமையாக்கும் இந்தத் திட்டங்களை
      முறியடிக்கவே வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட்டது என்பதும்
      தெளிவாகிறது.
      எனவே, கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப்.க்கு நிகராக
      17 இடங்களைக் கைப்பற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸýக்கு கிடைத்த அத்தனை
      வாக்குகளும் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானவை என்பதும், புலிகளின்
      நடவடிக்கைகளை மதிப்பவை, வரவேற்பவை என்பதும் தெளிவாகின்றது'' என விடுதலைப்
      புலிகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில், வடக்கு மாகாணத்தில்
      புலிகளின் வேண்டுகோளை ஏற்று எவரும் தேர்தலில் போட்டியிட முன் வரவில்லை. அங்கு
      தேர்தலை நடத்தவும் இந்திய அரசுக்கு துணிவு இருக்கவில்லை. எனவேதான், வடக்கு
      மாகாணத்தில் தாங்கள் தயார் செய்து வைத்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
      குழுவினரைத் தவிர வேறு யாரையும் தேர்தலுக்கு நியமனப் பத்திரம் தாக்கல்
      செய்யாதவாறு இந்திய அமைதிப் படை பார்த்துக்கொண்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
      குழுவினரிடம் மட்டும் நியமனப் பத்திரங்களை ஏற்றுக் கொண்டு தேர்தல் நியமனப்
      பத்திரங்களைத் தாக்கல் செய்ய குறிப்பிட்ட கால எல்லை வரை நியமனப் பத்திரங்களை
      தாக்கல் செய்யும் தேர்தல் அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் உத்தியோகபூர்வமற்ற
      ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேர்தல் அலுவலகத்துக்கு அருகே எவரையும்
      செல்லவும் இந்தியப் படை அனுமதிக்கவில்லை.
      தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் ஈபிஆர்எல்எஃப்
      இயக்கத்தினர், ஒட்டுமொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 44 வேட்பாளர்களை
      நிறுத்தினர். அங்கு 34 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கையில், அவர்களுக்கு 4.5
      சதவீத இடத்தைதான் ஒதுக்கினர். அதாவது, 24 சதவீத மக்களைக்கொண்ட மட்டக்களப்பு
      மாவட்டத்தில் 14 வேட்பாளர்களை நிறுத்திய ஈபிஆர்எல்எஃப் அமைப்பு ஒரேயொரு
      முஸ்லிம் வேட்பாளரையே நிறுத்தினர். 29 சதவீத மக்களைக் கொண்ட
      முஸ்லிம்களுக்குத் திருகோணமலையில் 13 வேட்பாளர்கள் ஈபிஆர்எல்எஃப் சார்பில்
      நிறுத்தப்பட்டனர். அங்கு முஸ்லிம் வேட்பாளரே நிறுத்தப்படவில்லை. அதேசமயம் 42
      சதவீதமுள்ள முஸ்லிம்கள் உள்ள அம்பாறையில் ஒரு முஸ்லிம் வேட்பாளர்
      நிறுத்தப்பட்டார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினர் தேர்தலுக்கு முன்னர்
      வெளியிட்ட பிரசுரமொன்றில் ""வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணத்தில் வாழும்
      முஸ்லிம் மக்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியை ஆதரிப்பதன் மூலம் விகிதாசார
      முறையிலான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்'' என்று
      கூறியிருக்கின்றனர். இவர்களது வேண்டுகோளை ஏற்று முஸ்லிம் மக்கள்
      ஈ.பி.ஆர்.எல்.எஃப்.இனருக்கே வாக்களித்திருந்தால் இரண்டே இரண்டு முஸ்லிம்
      பிரதிநிதிகள்தான் மாகாண சபைப் பிரதிநிதிகளாகி இருப்பர். ஆனால் தற்போது
      அவர்களுக்குக் கிடைத்துள்ள 17 இடங்கள் கிடைத்திருக்காது. கிழக்கு மாகாணத்தில்
      சிங்களக் குடியேற்றம் தடுக்கப்படவேண்டும் என்பது தமிழர்களின் உயிர்மூச்சான
      கொள்கையாகும். அதற்கு மாறாக 1976-ல் கிழக்கு மாகாணத்தில் சிங்களர்களுக்கென
      (குடியேற்றவாசிகளுக்கு) ஒரு தொகுதியை உருவாக்கத் தமிழர் விடுதலைக் கூட்டணி
      கோரிக்கை வைத்தது. இன்று, தேர்தல் வெற்றி வாய்ப்பையும், பதவியையும் பெற்ற
      ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினர் சிங்கள வேட்பாளர்களை தமது கட்சியில் வேட்பாளராக
      நிறுத்தியதுடன் சிங்களவர்க்கு, தமிழ்ப் பகுதியில் அமைச்சர் பதவியையும்
      கொடுத்து மக்களிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது'' என்றும்
      கூறப்பட்டுள்ளது.
      இங்கு குறிப்பிடவேண்டிய முக்கியமான முரண்பாடு என்னவென்றால், வடக்கு-கிழக்குப்
      பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு முன்பாக, இலங்கையின் இதரப் பகுதிகளில் 1988
      ஏப்ரலில் தொடங்கி ஜூன் 28-க்குள் முடிவு பெற்றது என்பதாகும். ஒரு
      கட்டாயத்தின் பேரிலேயே வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தல் என்பது நடைபெற்றது
      என்பதை அறிவது இங்கு அவசியமாகும். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி
      இத்தேர்தலில் பங்குபெறும் என்றே இந்திய அமைதிப்படை எதிர்பார்த்தது. ஆனால்
      அவ்விருப்பம் வெற்றிபெறாத போதிலும், அமைதிப்படையினரின் வற்புறுத்தலின்
      பேரில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் விடுத்த
      அறிக்கையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகத் தமிழ் பேசுகிற மக்கள்
      பெற்றுக்கொண்ட நன்மைகளைத் திடப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒரு வழியாக
      வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஜனநாயகச் செயல்முறையைத் தூண்டுவற்கான
      முயற்சிகளுக்குத் தமது ஆதரவை அளிக்கும்படி மக்களை வேண்டியது. (ஆதாரம்: இலங்கை
      தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும் -கலாநிதி ஆ.சு.மனோகரன்,
      தமிழ் டைம்ஸ் 15 நவம்பர் 1988- மேற்கோள் காட்டி)

No comments:

Post a Comment