Sunday, November 7, 2010

124:இந்தியாவின் தயவு வேண்டும்!,125: அன்னை பூபதியின் உண்ணாவிரதம்

124:இந்தியாவின் தயவு வேண்டும்! கிட்டு தனது பேட்டியில், விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழ் மக்களின்
      வருங்காலம் பற்றி எல்லாம் விரிவாகவே விளக்க முற்பட்டார். இந்திய அமைதிப் படை
      வெளியேற வேண்டும் என்று தாங்கள் கூறவில்லை என்பதையும் அவர்
      தெளிவுபடுத்தினார். கேள்வி: பேச்சுவார்த்தை வெற்றிபெறும்போது, விடுதலைப்
      புலிகளின் எதிர்கால நடவடிக்கைகள், நோக்குகள் யாவை? பிற போராளிக் குழுக்கள்,
      இந்திய அரசு, ராணுவம், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன பற்றியவை? கிட்டு
      பதில்: பேச்சுவார்த்தை ஒன்று வெற்றிகரமாக நிறைவேறும்போது,
      அ) யுத்த நிறுத்தம் நிரந்தரமாக்கப்படும். ஆ) எமது ஆயுதங்கள் இந்தியப்
      படையிடம் கையளிக்கப்படும். இ) இந்தியப்படைகளின் வடக்கு, கிழக்கில் எதிர்கால
      நிலைகளில் இணக்கம். ஈ) தமிழ் மக்களின் நிரந்தரப் பாதுகாப்பு, யுத்த அழிவு
      நிவாரணங்கள் போன்ற அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் விடயங்களில்
      இணக்கம். உ) செப்டம்பர் 28-ல் ஏற்பட்ட, தீட்சித்-பிரபாகரன் உடன்பாட்டின்
      எதிர்கால வடிவங்களின் இணக்கம். ஊ) தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை நிறைவு
      செய்யும் கொள்கைகளை ஒப்பந்தத்தில் திட்டவட்டமாக குறிப்பிட்டு உள்ளடக்கவும்,
      சில மாற்றங்களை இந்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளவும் இணக்கம் காணல்.
      எ) ஒப்பந்த விதிகளுக்கமைய தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வைக்கப்படும்
      அதிகூடிய அதிகாரங்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையை அமைக்க
      இலங்கை அரசு சட்டமியற்றவும், அதற்கான புதிய அரசியல் திருத்தச் சட்டத்தை
      நிறைவேற்றச் செய்யவும் இந்திய அரசுடன் இணக்கம் காணல். ஏ) இவ்வாறு
      அமையப்போகும் மாகாண சபைக்கான தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்குத்
      தேவையான அடிப்படை ஆண்டைத் தீர்மானித்தல். இவைபோன்ற விஷயங்களில் இணக்கமும்,
      தீர்வும் கண்டிருப்போம் என்பதைக் குறிப்பிடுகின்றோம். நீண்டகாலப் போரின்
      அழிவுகளால் அவதிப்பட்டிருக்கும் எம் மக்களுக்கு நிம்மதி தேவை. இந்த இடைக்கால
      அமைப்பில் மக்கள் பயன் அடைய நாம் பாடுபடுவோம். எமது எதிர்கால அரசியலைப்
      பொறுத்தமட்டில் நாம் வைத்த நான்கு அம்சக் கோரிக்கைகள் ஏற்கப்படும்வரை
      சகலவிதமான ஜனநாயக வடிவங்களிலும் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம். இந்திய
      மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் இடையில் ஒரு நட்புப் பாலத்தை அமைக்க
      முயல்வோம். இந்திய அரசு எமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவைக்க, இந்திய மக்களிடம்
      ஆதரவு திரட்டுவோம். ஆயுதங்களைக் கையளித்த நிலையில் சிங்கள ஊர்க்காவல்
      படையினரிடமிருந்தும், சிறீலங்கா ராணுவத்தினரிடமிருந்தும் எமது மக்களைக்
      காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்திய ராணுவத்திடமே ஒப்படைக்கப்படும். வடக்கு,
      கிழக்கின் எல்லைப் புறங்களிலுள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க இந்திய ராணுவம்
      செயல்பட வேண்டி ஏற்படலாம். தமிழீழ விடுதலைப் புலிகளும், ஈரோஸம் திட்டவட்டமாக
      இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. அதேசமயம் பிற இயக்கங்கள் எனப்படும் குழுக்களும்
      தமிழர் விடுதலைக்கூட்டணியும் தமது அடிப்படை அரசியற் கொள்கைகளை மண்ணில்
      புதைத்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. இவர்களை தமிழ் மக்கள்
      அரசியல் சக்திகளாகக் கணிப்பதை விட்டுவிட்டார்கள். ஒரு பேச்சுவார்த்தையின்
      வெற்றிக்குப் பிறகு அமையும் தேர்தலில் இவர்கள் மக்களைச் சந்திப்பதில் எமக்கு
      ஆட்சேபணையில்லை. இவர்களுக்குப் பதில் கொடுக்க தமிழ் மக்கள் ஆவலோடு
      காத்திருக்கிறார்கள்.
      கேள்வி: இலங்கையில் இந்திய அரசின் செயற்பாடுகளை, பிடிப்பை
      மட்டுப்படுத்திக்கொண்டு இந்திய ராணுவம் படிப்படியாக வெளியேற வேண்டியதை
      கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகள் செயற்படுவார்களா? கிட்டு: இந்திய
      ராணுவத்தை வெளியேற்றுவது-வெளியேற்ற முடிவெடுப்பது என்பது ஒரு பிரதான அரசியல்
      கோட்பாடாகும். அப்படிப்பட்ட ஓர் அரசியல் கொள்கையை இன்னமும் நாம்
      வகுக்கவில்லை. வகுக்கவும் மாட்டோம் என நம்புகின்றோம். ஆனால் வடக்கு,
      கிழக்கில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வசிக்கும் இடங்களில் இந்திய ராணுவத்தின்
      நடமாட்டமும் முகாம்களும் தேவையில்லை எனக் கருதுகின்றோம். அதே வேளை தமிழ்
      மக்கள் சிங்களக் குண்டர்களால் தாக்கப்படும் எல்லைப்புறங்களிலும், திட்டமிட்ட
      சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கும் இடங்களிலும் இந்திய ராணுவம்
      பாதுகாப்பளிக்க வேண்டிய தேவை உண்டு. கேள்வி: மக்களின் தினசரி வாழ்க்கையில்
      ராணுவம் தலையிடாமலிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
      கிட்டு: ஆம்! எந்த ஒரு நாட்டில், மக்கள், தினசரி வாழ்க்கையில் ராணுவம்
      தலையிடுவதை விரும்புவார்கள்? பாதுகாப்பு இல்லை எனக் கருதும் இடங்களில் நிலைமை
      வேறு. கேள்வி: இந்தியத் தலையீடு நிற்க வேண்டுமானால், இந்தியா இதை ஒரு கெளரவப்
      பிரச்னையாகக் கருதாமலிருக்க வேண்டுமானால் அதற்கு நீங்கள் என்ன செய்யப்
      போகின்றீர்கள்? கிட்டு: இந்தியத் தலையீடு நிற்க வேண்டுமென்று இன்னமும் நாம்
      கூறவில்லை. 40 ஆண்டு காலமாக பெளத்த சிங்கள இனவாத அரசாங்கங்களால், தமிழர்கள்
      ஏமாற்றப்பட்ட காரணத்தால், எமது உரிமைகளை வென்றிட, இந்தியாவின் தயவு எமக்கு
      வேண்டும். ஆரம்பத்தில் நடுநிலையாளனாக இருந்த இந்தியா இன்று ஒப்பந்தத்தின்
      பங்காளனாக மாறிவிட்டது. இந்து சமுத்திர வல்லாதிக்கத்தை நிலைநாட்டவும் தமது
      பாதுகாப்பைத் திடப்படுத்தவும் இந்திய ராஜதந்திரிகளின் அவசர முடிவே
      இவ்வொப்பந்தம். தமிழ் மக்களின் தேசிய விடுதலை வேட்கையின் ஆழத்தையும், அதன்
      வரலாற்றுப் பின்னணியையும் ஆழமாக உணரத் தவறிவிட்டதால் ஏற்பட்ட பிழை இந்த அவசர
      ஒப்பந்தம்! இதன் பின்னர் அமைதிப்படையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன.
      இதற்கு முன்பாக புனே வந்த ராஜீவ் காந்தி, ராணுவ மருத்துவமனையில் காயங்களுடன்
      சிகிச்சை பெற்று வந்த வீரர்களைப் பார்க்காமல் சென்றது குறித்து விமர்சனம்
      எழுந்தது. அதன்பொருட்டு ராஜீவ் காந்தி இன்னொரு நிகழ்ச்சிக்காக வந்தபொழுது
      ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களைச் சந்தித்து ஆறுதல்
      கூறினார். இலங்கை வடக்குப் பகுதியின் பிரச்னைகளைத் தீர்க்க ராணுவ நடவடிக்கை
      சரியாகாது என்று, முன்னர் தெரிவித்ததை தீபிந்தர் சிங் நினைவூட்டினார்.
      விடுதலைப்புலிகளுடன் பேசித் தீர்வு காணுவதே சரியாக இருக்குமென்றும், அப்போது
      அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
      சில வாரங்களில், தீபிந்தர் சிங், திருமணம் ஒன்றுக்காக சண்டிகர்
      செல்லவிருந்தபோது, ஏ.எஸ். கல்கத்திடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தார். பணி
      மூப்பு மற்றும் பொறுப்பு வழியாக அவர் அந்த உயர்வைப் பெற இருந்தார்.
      அதுமட்டுமன்றி அந்தப் பணியை அவர் மிகவும் விரும்பினார். தீபிந்தர் சிங்
      சண்டிகரில் இருந்தபோதுதான், சர்தேஷ் பாண்டே நியமனமும், ஹர்கிரத் சிங்
      வெளியேற்றமும் நடைபெற்றது. இதுகுறித்து பின்னொரு நாளில் ஜெனரல்
      சுந்தர்ஜியிடம் பேசிக் கொண்டிருந்தபோது இந்தப் பணிமாற்றம் சரியானதுதானா என்று
      வினவினார். அதற்கு சுந்தர்ஜி, "அவரது பணி மாற்றம் எனக்குப் பிறகு ஏப்ரலில்
      தளபதியாக வரவிருக்கும் வி.என். சர்மாவின் விருப்பம்' என்று பதிலளித்தார்.
      இந்நிலையில் தீபிந்தர் சிங் பிப்ரவரி 28-இல் பணியிலிருந்து ஓய்வு பெற
      இருந்தார். 1988-ஆம் ஆண்டு, லீப் ஆண்டு ஆனதால் பிப்ரவரி 29-இல் பணி ஓய்வு
      பெற்றார். இதனையொட்டி அவருக்குப் பல்வேறு பிரிவு உபசார நிகழ்ச்சிகள்
      நடைபெற்றன. தெற்குப் பகுதி பிரிவின் தளபதியானதால், இந்தியாவின் மிகப்பெரும்
      பகுதிக்கு அவர் பொறுப்பானவராக இருந்தார். புனேயிலிருந்து யாழ்ப்பாணம் வரை
      மிகப் பெரிய பரப்புக்கு தளபதி. எனவே பிரிவு உபசார விருந்தில் காலையில்- ஊட்டி
      வெல்லிங்டன்- மதிய விருந்து பலாலி (யாழ்ப்பாணம்)- இரவு விருந்து சென்னை.
      மறுநாள் காலை சென்னையில் காலை உணவு- மதியம் திருகோணமலை- இரவு கொழும்பு என்று
      நான்கு நாட்கள் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
      கொழும்பில் நடைபெற்ற விருந்தில் ஜெயவர்த்தனாவும் கலந்துகொண்டார். அவர்
      தீபிந்தர் சிங்கிடம், "ஓய்வு பெற்றதும் என்ன செய்யப் போவதாக' கேட்டார்.
      "பஞ்சாபை ஒட்டியுள்ள பாஞ்ச்குலாவில் தங்கப் போகிறேன்' என்று தீபிந்தர் சிங்
      தெரிவித்தார். "பஞ்சாப், இந்தியாவில் ஆபத்தான இடமாயிற்றே' என்று கருத்து
      தெரிவித்தபோது, "அது எனது ஊர்; சொந்த மண்! மேலும் கொழும்பை விட பஞ்சாப்
      பரவாயில்லை' என்றார். ஜெயவர்த்தனா பதில் பேசவில்லை. (தீபிந்தர் சிங் தனது
      நூலில்) தீபிந்தர் சிங்கைத் தொடர்ந்து ஏப்ரலில் ஜெனரல் சுந்தர்ஜியும்
      ஓய்வுபெற்றார்.
      125: அன்னை பூபதியின் உண்ணாவிரதம்        கிழக்கு மாவட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு என மாவட்டங்கள் இருந்த
      நிலையில், சிங்களக் குடியேற்றத்தினால் மேலும் ஒரு மாவட்டமாக அம்பாறை மாவட்டம்
      உருவாக்கப்பட்டு, சிங்களப் பெயர் வைத்து, "திகாடுமல்லை' என்ற நாடாளுமன்றத்
      தொகுதியாக உருப்பெற்றது. இந்த மட்டக்களப்பு மாவட்டம் தமிழீழப் பகுதியின்
      நெற்களஞ்சியமாகும். இம்மாவட்டத்தில் அமைதிப்படை 1988 ஜனவரி 2-இல் பெரியதொரு
      அளவில் தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டையில்
      புலிகள் என்று கூறி 2500 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அழைத்துப்
      போகப்பட்டார்கள். இவர்களில் 800 பேர் காங்கேயன்துறை முகாமில் அடைக்கப்பட்ட
      நிலையில் மீதமுள்ளோர் விவரம் அறியக் கிடைக்கவில்லை. இவர்களில்
      விடுதலையானவர்கள் வெகு சிலரே. பெரும்பாலோர் துப்பாக்கிக் குண்டுக்கு
      இரையானார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தேடுதல் வேட்டையில்
      இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். பாலியல்
      பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் வயது வித்தியாசமே இல்லையென்பது
      வேதனை தரும் விஷயமாகும்.
      இதன் ஆரம்பம், "மட்டக்களப்பு நகரின் வெள்ளைப்பாலத்தில் நடந்து
      போய்க்கொண்டிருந்த இரு இளம்பெண்களை விரட்டிப் பிடித்து, பாலியல்
      பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதுதான். இதுவே முதல் சம்பவம்' என்று
      பழ.நெடுமாறன் தனது நூலில் கூறியுள்ளார். இந்தப் பாலியல் பலாத்காரத்தின்
      விளைவுகள் என்னவாக இருக்கும் என்று "முறிந்தபனை' நூல் விரிவாக
      விளக்கியிருக்கிறது. அதாவது பக்.365-லிருந்து 370 வரையும், 377-லிருந்து 412
      வரையும் எழுதப்பட்டுள்ள பக்கங்களில் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என
      வயதுக்கு வராத மற்றும் பேரிளம் பெண்கள் பேட்டியளித்திருக்கிறார்கள்.
      ரத்தமும், நிணமும், கண்ணீரும், கம்பலையும், கதறலும், பைத்தியமும் பிடித்த
      நிலையுமான சம்பவங்களின் பதிவுகள் இப்பக்கங்களில் பதியப்பட்டுள்ளன. பாலியல்
      பலாத்காரத்துக்கு ஆளான பெண்களின் நிலை என்ன? "நமது சமூகத்தில் தன்னுடைய சுய
      விருப்பத்துக்கு எதிராக ஓர் இளம்பெண்ணின் கன்னித்தன்மை அழிக்கப்பட்டு
      விடுமானால், அவள் திருமணம் செய்வதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.
      அப்பெண் திருமணமானவளாக இருந்தால், அவள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதற்கான
      சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. ஆகையால், பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள்
      தங்கள் துன்பங்களையும், மனக்காயங்களையும் மெüனமாகத் தமக்குள்ளேயே
      விழுங்கிக்கொண்டு, குறித்த சம்பவங்களைப் பற்றிப் புகார் செய்ய முன்
      வருவதில்லை.
      ""பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் சமூகக் களங்கத்தையும் ராணுவ
      அச்சுறுத்தலையும் மீறி, புகார் செய்தபோது அவர்கள் போராளிகளுடன் தொடர்பு
      கொண்டவர்களாக இருந்ததால்தான் இவ்வாறு புகார் செய்வதற்கு தைரியம்
      வந்திருக்கிறது.. என்று கூறி அவர்கள் மேலும் காவலுக்குட்படுத்தப்பட்டு
      துன்புறுத்தப்படுகிறார்கள்'' - என்று "முறிந்தபனை' என்ற நூலில்
      குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக, கடுமையான வார்த்தைகள்
      சி.புஷ்பராஜாவின், "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலில்
      காணப்படுகின்றன. (நாம் மென்மையான விமர்சனத்தை மட்டும்
      எடுத்துக்கொண்டுள்ளோம்.) பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவது பெண் புலிகள் என்று
      சொல்லப்பட்டும், ஆயுதம் தேடுகிறோம் என்று பெண்களைத் தீண்டுகிற செயலும்
      நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது (பக்.459 - 460). இச்செயல்கள் மட்டக்களப்பில்
      அதிகரித்த நிலையில், தாய்மார்கள் கொதித்து எழுந்தனர். இதுகுறித்து
      பழ.நெடுமாறன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் சுருக்கம் வருமாறு:
      "திலீபன் வழியைப் பின்பற்றி அன்னையர் முன்னணி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதற்கு
      முன்னதாக "உடனடியாகப் போர் நிறுத்தம் மற்றும் புலிகளுடன் பேச்சு வார்த்தை'
      மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
      இக் கோரிக்கை பயனளிக்காது போகவே, மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயில்
      எதிரே அன்னையர் முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியது. மாவட்டம்
      முழுவதும் பெண்களும் மாணவிகளும் இதில் பெருமளவில் பங்கேற்றனர்'. அந்தக்
      கூட்டம் அதிகரிக்கவே, சிங்களக் காவல்படை, சந்தையில் திரண்டிருந்த பெண்களைச்
      சுற்றிவளைத்துத் தாக்கத் தொடங்கியது. பெண்களும் குழந்தைகளும் பலத்த
      காயத்துக்கு ஆளானார்கள். கலைந்தோடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடும்
      நடத்தப்பட்டது. அமைதிப் படையினர் இந்த அடக்குமுறையை வேடிக்கை பார்த்தார்களே
      ஒழிய கட்டுப்படுத்தவில்லை. இதன் எதிரொலியாக, அன்னையர் முன்னணி - அடையாள
      உண்ணாவிரதத்தைத் தொடர் உண்ணாவிரதமாக்கியது. இதன் எழுச்சி கண்டதும், பிரதமர்
      ராஜீவ் காந்தி "அமைதிப்படை தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடவில்லை;
      புலிகளுக்கு எதிராகவே பேராடுகிறது' என்றார்.அன்னையர் முன்னணியினரைப் பேச்சு
      வார்த்தைக்கு அமைதிப்படை அழைத்தது. பிரிகேடியர் சந்தேஷ் கலந்துகொண்டு,
      "புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் - அதன்பின்னரே பேச்சுவார்த்தை'
      என்றார். அன்னையர் முன்னணியினரோ, ""எங்கள் நகைகளைக் கொடுத்து, எங்களைக்
      காக்க, எமது பிள்ளைகள் வாங்கிய ஆயுதங்களைக் கேட்பதற்கு நீங்கள் யார்'' என்று
      கேட்டனர். பேச்சுவார்த்தை முறிந்தது; பலனில்லை. பிப்ரவரி 10-ஆம் தேதியன்று
      மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர்
      ஜே.என்.தீட்சித் நேரடியாகப் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டு, "புலிகள்
      ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்' என்று மீண்டும் வலியுறுத்தினர்.
      பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை.
      மாறாக, அந்தப் பகுதியை ராணுவம் சுற்றிவளைத்தது. ராணுவ முகாம் ஒன்றும் அங்கு
      அமைக்கப்பட்டது. பிப்ரவரி 12,13,14 நாள்களில் ஊரடங்கு உத்தரவு
      பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்கள்
      பயப்படவில்லை. எழுந்தும் செல்லவில்லை. மேலும் மேலும் கூடினர். அன்னையர்
      முன்னணியின் ஆலோசகர் கிங்ஸ்லி இராசநாயகம் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார்.
      முகாமுக்கும் கொண்டு செல்லப்பட்டார்.இந்தச் சம்பவத்தையொட்டி, அன்னையர்
      முன்னணி முன்னிலும் கடுமையான முடிவுகளை எடுத்தது. சாகும்வரை உண்ணாவிரதம்
      என்கிற முடிவுக்கு வந்தது. யார் முதலில் உண்ணாவிரதம் இருப்பது என்பது
      குறித்து கடும்போட்டி நிலவியது. இரு பிள்ளைகளை சிங்கள அடக்குமுறைக்
      கொடுமைக்கு பறிகொடுத்த அன்னை பூபதி முன்னுரிமை கோரினார். அன்னம்மா டேவிட்டும்
      உரிமை கோரினார். சீட்டுக்குலுக்கிப்போட்டதில், அன்னமா டேவிட்
      தேர்வானார்.1988-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் அன்னம்மா மாமாங்கப்
      பிள்ளையார் கோயில் முன்பாக சாகும்வரை தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
      அன்னம்மா டேவிட் இறந்தால், அமைப்பாளர்கள் மீது வழக்குப் போடப்படும் என
      அமைதிப்படை மிரட்டியது. ஆனாலும் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், அவரின்
      மகன்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் அரசியல் ஆதாயம் தேட, பலவந்தமாகத்
      தங்களது தாயாரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தி உள்ளார்கள் என்று எழுதி
      வாங்கப்பட்டது. இந்தக் கடிதத்தை ஆதாரமாகக் காட்டி அன்னம்மா டேவிட் தூக்கிச்
      செல்லப்பட்டார். இதன் பின்னர், அன்னை பூபதி களத்தில் குதித்தார். அவர்
      உண்ணாவிரதம் இருக்கும் முன்பாக, தனது சுயவிருப்பம் காரணமாக உண்ணாவிரதம்
      இருப்பதாகவும், கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும்,
      சுயநினைவு இழந்தால் என் குடும்பத்தார் என்னைக் காப்பாற்றும் முயற்சியில்
      ஈடுபடக்கூடாது என்றும், முக்கியமாகத் தூக்கிச் செல்லக்கூடாது என்றும்
      மரணசாசனம் எழுதிக்கொடுத்தார்.
      13-10-1988 அன்று உண்ணாவிரதம் தொடங்கினார். மாமாங்கத் திடல் மக்கள்
      கூட்டத்தால் நிறைந்தது. அமைதிப்படையைக் குறித்து எங்கும் முழக்கங்கள்
      எழுப்பப்பட்டன. மற்ற இயக்கங்கள் துணைகொண்டு பூபதி அம்மாளைத் தூக்கிச்செல்லும்
      முயற்சியும், துப்பாக்கியால் சுட்டும், பதற்றம் ஏற்படுத்தும் முயற்சிகள்
      தோற்கடிக்கப்பட்டன. மட்டக்களப்பை நோக்கி உலகப் பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.
      பூபதி அம்மாளின் உண்ணாவிரதத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்பட்டு,
      இலங்கைத் தமிழாசிரியர் வணசிங்கா, கிறிஸ்தவ பாதிரியார் அருட்தந்தை சந்திரா
      பெர்னாண்டோ ஆகியோருடன் ஏற்கெனவே கைதாதி விடுதலைபெற்ற கிங்ஸ்லி இராசநாயகாவும்
      கைது செய்யப்பட்டனர். அன்னை பூபதியின் கணவர் கணபதிப் பிள்ளையை அழைத்து
      மிரட்டிப் பார்த்தார்கள். அவர் பணியவில்லை. லட்சியம் ஒன்றுக்காக அவர்
      விருப்பப்பட்டு இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று பதிலளித்தார்.
      பூபதி அம்மாள் 13-10-1988 அன்று, உண்ணாவிரதத்தின் 31-ஆம் நாளில் மரணமுற்றார்.
      அவரது இறுதி ஊர்வலம் தடைசெய்யப்பட்டது. அவரது உடலை எடுத்துச்செல்ல
      அமைதிப்படை, சிங்களக் காவல்படை இரண்டும் முயன்றன. பூபதி அம்மாளின் உடல்,
      அன்னையர் முன்னணியால் மறைத்து வைக்கப்பட்டு, திடீரென ஊர்வலம் தொடங்கியது.
      நாவலடி கடற்கரை எங்கும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தது. ஒரு பக்கம் கடல்;
      மறுபக்கம் மக்கள் கடல்! "தமிழீழப் பெண்டிரின் எழுச்சியின் வடிவமாக பூபதி
      அம்மாள் என்றும் திகழ்வார்' என்று பழ.நெடுமாறன் அந்தக் கட்டுரையை
      முடித்துள்ளார்

No comments:

Post a Comment