Sunday, November 7, 2010

108 பிரபாகரனைக் கைது செய்யுங்கள்!, 109: திலீபன் உண்ணாவிரதம்!

108 பிரபாகரனைக் கைது செய்யுங்கள்!இந்தியாவுக்கு, விடுதலைப் புலிகளின் வெளித் தொடர்புகள் குறித்து ஐயம்
      எழுந்தது. பிரபாகரனுக்கு இலங்கைப் பிரதமர் பிரேமதாசா, ""இந்தியா இனி உதவாது;
      அவர்களை நம்புவதைவிடத் தன்னை நம்பலாம்'' என்று செய்தி அனுப்பியுள்ளதாகவும்
      இந்திய உளவுப் பிரிவு நம்பியது. அதுமட்டுமல்ல, சென்னையில் இருந்த விடுதலைப்
      புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து
      நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார் என்றும் நம்பியது. இவர்கள் இவ்வாறு
      தொடர்பு கொள்கிற விஷயம் இந்தியாவுக்குத் தெரியும் என்றும், இதனால் விடுதலைப்
      புலிகளுக்கு விளையும் நன்மைகளைவிட, தீமைகளே அதிகமாகச் சம்பவிக்கும் என்றும்,
      இத் தொடர்புகள் ஒப்பந்தத்தைப் பாதித்தால் அது நன்றாக இருக்காது என்றும்
      பிரபாகரனிடம் தெரிவிக்குமாறு இந்தியத் தூதுவர், தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிரத்
      சிங்குக்கு அறிவுறுத்தியதாகத் தகவல்கள் உண்டு. (ஆதாரம்: "இன்டர்வென்ஷன் இன்
      ஸ்ரீலங்கா' - மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்) இந் நிலையில், பொதுமன்னிப்பு
      வழங்கப்பட்டும் எந்தவித வழக்குமின்றி இலங்கைச் சிறைகளில் சுமார் 1,300 பேர்
      அடைபட்டிருப்பது குறித்து விடுதலைப் புலிகள் அமைப்பு கேள்வி எழுப்பியது.
      இந்தத் தகவலை தீட்சித் கவனத்துக்குக் கொண்டு வந்ததும், அதில் புலிகள் எத்தனை
      பேர் என்று பட்டியல் கொடுத்தால் உடனடியாக விடுதலை செய்துவிடலாம் என்று
      ஜெயவர்த்தனா கூறுவதாகத் தெரிவித்தார். ஆனால் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்ல
      விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. அப்படிப் பெயர் கொடுக்கப்பட்டால் அதுவே
      அவர்களுக்கு மரணவோலை ஆகிவிடும்; அவர்கள் மீது வீணான வழக்குகள் புனையப்படலாம்;
      வெளியே விட்டுசுடப்படலாம்; மோதலை ஏற்படுத்தி சாகடிக்கவும் செய்ய வாய்ப்புண்டு
      - என்று பல வகைகளிலும் யோசித்து பெயர் கொடுக்கும் யோசனை புலிகளால்
      நிராகரிக்கப்பட்டது. எனவே அனைவரையும் விடுவிக்கவேண்டும் என்று பொதுவில்
      கோரிக்கை வைத்தனர்.
      உடனே தீட்சித் சொன்னார், ""விடுதலைப் புலிகள் 8 சிங்கள வீரர்களைக் கைதுசெய்து
      வைத்திருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யும்படி அரசு கேட்கிறது; அவர்கள்
      விடுவிக்கப்பட்டால் 1,300 பேரை விடுவிப்பது குறித்துப் பேசலாம்'' என்றார். 8
      சிங்களக் கைதிகளின் விடுதலையும் நடைபெறவில்லை; 1,300 பேர் விடுதலையும்
      நடைபெறவில்லை. ""பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் பகுதியில்
      அரசுக்குள் ஓர் அரசு என்ற நிலையில் அந்தப் பகுதியை நிர்வகித்து
      வந்தார்களாதலால் அவர்களது குரலே எடுபட்டது. மக்கள் தொடர்புத்துறை அவர்களிடம்
      வலுவாக இருந்தது. அவர்களிடம் குறைந்தது மூன்று தினசரிகள் அச்சக வசதியுடன்
      இருந்தது என்றே மதிப்பிடுகிறேன். சொந்த வானொலி நிலையம் மற்றும் சொந்தமாகத்
      தொலைக்காட்சி நிலையம் ("நிதர்சனம்' என்கிற பெயரில்) ஆகியவற்றை இயக்கி
      வந்தனர். இதன் வீச்சை யாழ்ப்பாணப் பகுதியின் குக்கிராமங்களிலும்
காணமுடிந்தது.
      இது தவிர, யாழ்ப்பாணத்தின் முன்னாள் தளபதியாக இருந்த கிருஷ்ணகுமார் என்கிற
      கிட்டு, ஒரு காலை இழந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது தலைமையில்
      சென்னையில் தொலைத் தொடர்பு வசதி கொண்ட அமைப்பு இயங்கியது. இதன்மூலம்
      மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாடுகளுக்கு உடனுக்குடன் செய்தி
      பரிமாறிக்கொள்ள அவர்களால் முடிந்தது. தினமும் செய்தி வெளியீடுகளை
      வெளியிட்டுக்கொண்டே இருந்ததால், உடனுக்குடன் அவர்களது செய்தி உலகம் முழுவதும்
      வெளியாகிக்கொண்டிருந்தது. ஒரே நாளில் பல செய்தி வெளியீடுகளை
      வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக அமைதிப்படையின் செயல்பாடுகளும்,
      அதன் ராஜதந்திர நடவடிக்கைகளும் உடனுக்குடன் உலகுக்குத் தெரிந்துவிடுகின்றன''
      என்று தீபிந்தர் சிங் தனது நூலில் (பக்.91) குறிப்பிட்டுள்ளார்.
      ஒரு நாள் இரவு (செப்டம்பர் 14/15-1987) தூதுவர் தீட்சித், ஹர்கிரத் சிங்கை
      போனில் அழைத்து, "நாளை பேச்சுவார்த்தைக்கு வரும் பிரபாகரனைக் கைது
      செய்யவேண்டும் அல்லது சுட்டுக்கொன்றுவிட வேண்டும்' என்று சொன்னதும்,
      அதிர்ந்துபோன தளபதி ஹர்கிரத் சிங், அமைதிப் படைத்தலைவர் தீபிந்தர் சிங்கிடம்
      இதைத் தெரிவித்துவிட்டு, இதற்கான பதிலைப் பின்னர் சொல்வதாகக் கூறிவிட்டு போனை
      வைத்துவிட்டார். மறுநாள் தீட்சித்திடம், ஹர்கிரத் சிங் போனில் தொடர்பு
      கொண்டு, "இந்திய ராணுவம் பாரம்பரியப் பெருமை கொண்ட அமைப்பு. இப்படிப்பட்ட
      ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரன், முதுகில் சுடமாட்டான். அதுவும்
      வெள்ளைக்கொடியுடன் சமாதானப் பேச்சுக்கு வரும் நிலையில் கொல்வது அழகல்ல என்று
      தளபதி சொல்லச் சொன்னார். எனவே, உங்களது வழிகாட்டுதலின்படி என்னால் நடக்க
      இயலாது' என்றார்.
      மேலும் ஹர்கிரத் சிங் கூறுகையில், "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை
      நாம்தான் பேச்சுவார்த்தைக்கு -அதாவது ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த என்று
      அழைத்திருக்கிறோம்' என்றும் நினைவுபடுத்தினார். உடனே தீட்சித், "அவர்தான்
      (ராஜீவ் காந்தி) இந்த உத்தரவுகளை எனக்குப் போடுகிறார். ராணுவம் அவரது காலை
      வாரிவிடக்கூடாது. நீங்கள் அமைதிப்படையின் தளபதி. நீங்களே இதற்குப் பொறுப்பு
      ஏற்கவேண்டும்' என்று கடுமையான குரலில் உத்தரவிட்டார்.
      அடுத்த நாள் இந்திய ராணுவத்தின் (பொது) இயக்குநராக இருக்கும் லெப்டினன்ட்
      ஜெனரல் பி.சி.ஜோஷி போனில் தொடர்புகொண்டு, எனது நிலைக்குப் பாராட்டு
      தெரிவித்தார். ஆனால், அதே நேரம் எனது செயல்பாட்டுக்காக ராணுவத் தளபதி
      சுந்தர்ஜி கடுமையாகக் கோபித்துக்கொண்டார்.' (இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா -
      மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங். பக்.57) இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பதே
      கேள்விக்குறியான நிலைமை என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன
      109: திலீபன் உண்ணாவிரதம்!      தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைக் காப்பாற்றும் வகையில்,
      இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில்,
      ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தைத்
      (15.09.1987) தொடங்கினார். அவரது ஐந்து கோரிக்கைகள்தான் என்ன?
      1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது
      சிறையில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
      2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களவர்
      குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
      3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு' என்று அழைக்கப்படும் சகல
      வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
      4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் போலீஸ் நிலையங்கள் திறப்பதை உடனே
      நிறுத்தவேண்டும்.
      5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என
      அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற்று, தமிழ்க்
      கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ்
      நிலையங்கள் மூடப்படவேண்டும்.
      ஆகிய கோரிக்கைகளை உண்ணாவிரத மேடையில் பிரசாத் படிக்க, இதே கோரிக்கைகளை
      13-08-1987 அன்று இந்தியத் தூதர் அலுவலகத்திற்கு அனுப்பி 24 மணிநேரம் ஆன
      நிலையில், தகுந்த தீர்வு கிடைக்காத காரணத்தால், சாகும்வரை உண்ணாவிரதம்
      மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்த விடுதலைப் புலிகள் பிரதேசப்
      பொறுப்பாளர்கள் கூட்டத்தில் (13-08-1987) தீர்மானிக்கப்பட்டது. பிரபாகரனும்
      நிலைமையை விளக்கி தீட்சித்துக்குக் கடிதம் எழுதினார். ஆனால், அவர் அதைப்
      பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.
      யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயிலையொட்டி உண்ணாவிரத மேடை
      அமைக்கப்பட்டிருந்தது. தாயற்ற திலீபனுக்கு நடுங்கும் கரத்துடன் வந்த ஒரு
      தாய், திருநீற்றைப் பூசினார். மாத்தையா திலீபனை உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச்
      சென்று அமர வைத்தார். அவர் அருகே மு.வ.யோ.வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறீ
      ஆகியோர் அமர்ந்தனர். திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்திபன் ஆகும். யாழ்
      மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் பனைமரங்கள் நிறைந்த கிராமத்தில், ஆசிரியர்
      இராசையா தம்பதியினருக்கு நாலாவது கடைக்குட்டி மகனாகப் பிறந்தார். மருத்துவ
      மாணவனாக இருக்கையில் பிரபாகரனைத் தலைவராக ஏற்று இயக்கத்தில் சேர்ந்தார்.
      இவரது பணியில் திருப்தியுற்ற தளபதி கிட்டு பல்வேறு உயர்வுகளை அளித்தார்.
      தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக, கிட்டுவின்
      பரிந்துரையின்படி பிரபாகரன் நியமித்தார். திலீபனின் முயற்சியால் விடுதலைப்
      புலிகளின் இயக்கத்தின் துணை அமைப்புகளாக (1) தமிழீழ விடுதலைப் புலிகளின்
      மாணவர் இயக்கம் (SOLT) , (2) தமிழீழ மகளிர் அமைப்பு, (3) சுதந்திரப் பறவைகள்
      அமைப்பு. (4) தமிழீழ தேசபக்தர் அமைப்பு, (5) தமிழீழ விழிப்புக் குழுக்கள்,
      (6) தமிழீழக் கிராமிய நீதிமன்றங்கள், (7) சுதேச உற்பத்திக் குழுக்கள், (8)
      தமிழீழ ஒலி-ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை, (9) தமிழர் கலாசார சபை மற்றும்
      தொழிற்சங்கங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு பெரும் பாராட்டைப் பெற்றன.
      அண்ணல் காந்தி, ஐரிஷ் நாட்டுப் போராட்ட வீரன் பாபி சாண்ட்ஸ், பொட்டி
      ஸ்ரீராமலு போன்றோர் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரதம் இருந்ததாகப்
      படித்திருக்கிறோம். ஆனால் திலீபன் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தை
      மேற்கொண்டார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், தகவல் தொடர்பு
      சாதனங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோது
      ஒரு சொட்டு நீர்கூட அருந்தாத உண்ணாவிரதத்தையே மேற்கொண்டார். அவர் வழியில்
      திலீபன். பக்கத்தில் இருந்த மேடையில் பிரசாத் தலைமை ஏற்க, உண்ணாவிரதத்துக்கான
      காரணங்களை நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் விளக்கினார்கள்.
      மேடையில் ஓர் இளைஞன், "திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல -
      தமிழ்மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை இது. தமிழீழம் தாருங்கள் என்றுகூடக்
      கேட்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி ஐந்து கோரிக்கைகளை
      நிறைவேற்றுங்கள் என்றுதான் அவர் கேட்கிறார்' என்று பேசினார். அன்று இரவு
      பதினோரு மணியளவில் பிரபாகரன், திலீபனைப் பார்ப்பதற்காக வந்தார். அவருடன்,
      சொர்ணம், இம்ரான், அஜீத், சங்கர், மாத்தையா, ஜானி என்று பலரும்
வந்திருந்தனர்.
      முதல் நாள்: இரவு நாடித் துடிப்பு 88, சுவாசத் துடிப்பு 20. இரண்டாம் நாள்:
      முகம் கழுவிக்கொண்டார்; தலைவாரிக் கொண்டார்; சிறுநீர் கழித்தார்; மலம்
      போகவில்லை.
      மேடையில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்ததைக் கேட்ட திலீபன், "பேசவேண்டும்
      போலிருக்கிறது. மைக் தாருங்கள்' என்றார். இரண்டு நிமிடத்துக்கு மேல்
      பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு மைக் வழங்கப்பட்டது. ""அன்பார்ந்த
      மக்களே! என்னால் அதிகம் பேசமுடியாது. ஆனாலும் உங்களுடன் பேசவேண்டும் போல்
      இருக்கிறது. உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் தரும் ஆதரவைப் பார்க்கும்போது
      மகிழ்ச்சியடைகிறேன். எனது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேறும் மட்டும் ஒரு சொட்டு
      நீர்கூட அருந்த மாட்டேன். இது உறுதி. இதையே தலைவர் பிரபாகரனிடமும்
      வலியுறுத்திக் கூறிவிட்டேன். இறக்க நேரிட்டால், அதை மகிழ்ச்சியுடன்
      ஏற்றுக்கொள்வேன். நான் இறந்ததும் விண்ணில் இருந்து அங்கேயுள்ள என்
      நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்தநாளை எதிர்பார்த்துக்கொண்டே
      இருப்பேன். என்னால் அதிகம் பேசமுடியவில்லை. என் உண்ணாவிரதப் போராட்டத்தில்
      ஆர்வமுடன் கலந்துகொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள். வணக்கம்''
      அவரது பேச்சைக் கேட்ட மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்று இரவும் பிரபாகரன்
      வந்தார். மூன்றாம் நாள்: "மலம் போகவேணும் போலதான் இருக்கு' என்றார் திலீபன்.
      "இறங்கி வாருங்கள்' - உதவுகிறார் டாக்டர் வாஞ்சிநாதன். "வேண்டாம் விடுங்க...
      நானே வருகிறேன்.'
      சிறுநீர் கழியவில்லை...சிரமப்படுகிறார். "தண்ணீர்-குளுக்கோஸ் ஏதும்
      குடித்தால்தான் சிறுநீர் வரும்' என்கிறார் டாக்டர். "என்ன பகிடியா பண்ணுறீங்க
      - சொட்டுத் தண்ணீர்கூட குடிக்கமாட்டேன்' என்றார் திலீபன் உறுதியோடு.
      ஒலிபெருக்கியில் காசி ஆனந்தன் கவிதைகள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தது.
      3-ஆம் நாள் நாடித்துடிப்பு 110. சுவாசத் துடிப்பு 24.
      நான்காம் நாள்: நாடித்துடிப்பு 120. சுவாசத் துடிப்பு 24. நாடித்துடிப்பு
      சாதாரணமாக 72-80-ம், சுவாசத் துடிப்பு 16-22-ம் இருக்கவேண்டும். அதே நாள்
      இரவில் நாடித்துடிப்பு 114. சுவாசத்துடிப்பு 25.
      1986-இல் நடைபெற்ற ஒரு மோதலில் எதிரியின் குண்டை வயிற்றில் தாங்கியதால்
      திலீபனின் 14 அங்குலக் குடலை அகற்றிவிட்டார்கள். அப்போது மூன்று மாதம்
      மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அந்தக் காரணமும் இப்போது சேர்ந்து
      அவருக்கு வயிற்றில் வலி எழுந்தது.
      ஐந்தாம் நாள் - ஆறாம் நாள்: கொழும்பிலிருந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்தில்
      இருந்து முக்கிய நபர் வரப்போவதாகச் செய்தி கசிந்தது. கிட்டுவின் தாயார்
      ராஜலட்சுமி அம்மாள் உண்ணாவிரத மேடைக்கு வந்து, திலீபனை அணைத்து வாழ்த்தும்
      வேளையில், அவரது அழுகை நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அன்று மாலை யாழ்க்கோட்டை
      ராணுவ முகாம் பொறுப்பாளர் ஜெனரல் பாரா, திலீபனைப் பார்க்க வந்தார்.
      பிரிகேடியர் ஃபெர்னான்டோ உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து சிங்களக் கைதிகளை
      விடுவிக்குமாறு வலியுறுத்தினார்.
      ஆறாம் நாள்: தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜானி
      ஆகியோர் வந்து திலீபனின் தலையை வருடி கண்கலங்கிச் சென்றனர்.
      "கிட்டு அண்ணனைப் பார்க்கவேண்டும்' திலீபன் கோரிக்கை வைத்தார். அவர் அப்போது
      சென்னையில் இருந்தார். மாலை, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ
      நாணயக்காராவும் அவரது கட்சியினரும் வந்து பார்த்தனர். யாழ்ப்பாணம் வந்த
      இந்திய உதவித் தூதுவர் நிருபம் சென், முகாமில் புலிகளின் பிரதிநிதிகளிடம்,
      "உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப்பந்திக்க முடியாது' என்று
      எச்சரித்துவிட்டுச் சென்றார்.
      ஏழாம் நாள்: சென்னையிலிருந்து இந்தியா டுடே பத்திரிகையாளர் மற்றும் சென்னைத்
      தொலைக்காட்சிக் குழுவினர் வந்தனர்; படம் பிடித்தனர்.
      எட்டாம் நாள்: கூட்டம் லட்சக்கணக்கில் சேர்ந்துவிட்டதால் வெயிலைத்
      தாக்குப்பிடிக்க கொட்டகை போடும் வேலை நடந்தது. வடக்கு-கிழக்குப் பகுதிகளில்
      பல இடங்களில் திலீபனின் உண்ணாவிரதத்தை ஆதரித்து, அடையாள உண்ணாவிரதங்கள்
      மேற்கொள்ளப்பட்டன.
      ரத்த அழுத்தம் 80/50. நாடித் துடிப்பு 140. சுவாசம் 24. இந்திய
      அமைதிப்படையினர் விடுதலைப் புலிகளைச் சந்தித்தனர். இவர்கள் சிங்களப்
      போலீசாருக்குப் பதில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையைக் கொண்டு வருவது
      குறித்து பேசிச் சென்றார்கள். உண்ணாவிரதம் குறித்து எதுவும் பேசவில்லை.
      ஒன்பதாம் நாள்: இந்திய அமைதிப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்
      சிங் ஹெலிகாப்டரில் யாழ் பல்கலை மைதானம் வந்தார். பிரபாகரனைச் சந்தித்தார்.
      இருவரும் தனித்தனி வாகனங்களில் புறப்பட்டு யாழ்கோட்டை ராணுவ முகாம் சென்றனர்.
      பேச்சுவார்த்தையில் பலன் எதுவுமில்லை.
      தொடர்ந்து அதே நாளில் பிற்பகல் 1.30 மணிக்கு, இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித்
      பிரபாகரன் சந்திப்பு நடந்தது. பேச்சுவார்த்தையில் தீபிந்தர் சிங், ஹர்கிரத்
      சிங், பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ், கேப்டன் குப்தா மற்றும் புலிகள் தரப்பில்
      மாத்தையா, செ.கோடீஸ்வரன் (வழக்கறிஞர்), அன்டன் பாலசிங்கம், சிவானந்த சுந்தரம்
      ஆகியோர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் தூதர் உறுதிமொழி மட்டுமே
      அளித்தார். உண்ணாவிரதம் நிறுத்தப்படுவது குறித்து ஏதும் பேசவில்லை.
      பத்தாம் நாள்: திலீபனின் கை, கால்கள் அசைவின்றி சோர்ந்து கிடந்தன.
      நாடித்துடிப்பு 52. ரத்த அழுத்தம் 80/50. சராசரி மனிதனின் அளவுகளைவிட
      அனைத்தும் குறைந்துவிட்டன. இனி, திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நேரலாம்.
      நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து
      திலீபனைப் பார்த்துச் சென்றார்கள். பதினோராம் நாள்: கோமாவுக்கு முந்தைய
      நிலையில் உடல் அங்குமிங்கும் அசைவது போல திலீபனின் உடல் அவரையறியாமலே புரளத்
      தொடங்கியது. யாழ் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் உண்ணாவிரதத்தில்
      பங்கேற்கப் போவதாக அறிவித்தன. "நிதர்சனம் டிவி' கடந்த பத்து நாட்களாக
      உண்ணாவிரதச் செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது.
      பன்னிரண்டாம் நாளில், திலீபனின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்ற செய்தி யாழ்
      பகுதி முழுவதும் பரவியது.
      265 மணி நேரம், நீரின்றி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி, தனது சுயநினைவு
      தப்பினாலும் குளுக்கோஸ், நீர் தந்துவிடாதீர்கள் என்று கூடியிருந்தோரிடம்
      சத்தியவாக்கு வாங்கிக்கொண்டு புழுவாய்த் துடித்த திலீபனின் உயிர் 26-09-1987
      காலை 10.48 மணிக்குப் பிரிந்தது.
      எங்கும் அழுகை... விம்மல்... இலங்கை இந்தியா எதிர்ப்புக் குரல் எழுந்தது.
      எம்பார்ம் செய்ய மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட உடல், பிற்பகல் 4.15
      மணியளவில் மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
      ஈரோஸ் தலைவர் பாலகுமார், பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி
      அழுதனர். பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
      மனிதநேயம் தழைக்கும் இடத்தில்தான் அகிம்சை வெல்லும் என்பது திலீபன் மரணம்
      மூலம் உலகுக்கு உணர்த்தப்பட்டது. (ஆதாரம்: தியாகப் பயணத்தில் திலீபனுடன் 12
      நாட்கள்: மு.வே.யோ.வாஞ்சிநாதன்).

No comments:

Post a Comment