Sunday, November 7, 2010

166:நார்வேயின் சமாதான முயற்சி! !, 167:ரணில் பிரதமரானார்!

166:நார்வேயின் சமாதான முயற்சி! !
      தற்செயலாக ஏற்பட்ட ஒரு திருப்பம் என்றுதான் கூறவேண்டும். அமெரிக்கா-சோவியத்
      நாடுகளிடையே நிழல்யுத்தம் நிலவி வந்த நிலையிலும்கூட, மேற்கத்திய நாடுகளின்
      பக்கமே இருந்தபோதிலும், ரஷியாவுடன் நார்வேக்கு எந்தப் பிணக்கும் இல்லை.
      அதேபோன்று, ஸ்வீடன், பின்லாந்து போன்ற அண்டை நாடுகளுடனும் மோதல் கிடையாது.
      உலகின் எந்தப் பகுதியிலும் ராணுவத்துறையிலோ, அரசியல்துறையிலோ தந்திரோபாய
      அக்கறை கொண்டிராத சிறிய நாடு. மத்திய கிழக்குத் தகராறு, பாலஸ்தீன-இஸ்ரேல்
      முரண்பாடு, குவாட்டமாலா பிரச்னை போன்றவற்றில் ஈடுபட்டதால் நார்வே உலகெங்கும்
      பேசப்படும் நாடாக மாறியது' என்கிறார் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே
      பேச்சுவார்த்தைப் பணிகளில் ஈடுபட்ட எரிக் சோல்ஹைம் (இலங்கையில் சமாதானம்
      பேசுதல்-அடையாளம் வெளியீடு, பக்.436). அந்நூலில் எரிக் சோல்ஹைம் தனது
      நாட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில், "நார்வே ராணுவரீதியாக ஒரு வல்லரசாக
      இல்லாவிடினும், உலகில் சமாதானச் சூழலை ஏற்படுத்த முனைந்த, செல்வாக்கைக் கொண்ட
      ஒரு வளமான நாடு' என்கிறார். நார்வே நாட்டின் அரசியலில் இவர்
      முக்கியமானவராவார். வெளிவிவகார அமைச்சகத்தில் பங்குபெற்று, அதன் ஆலோசகராக
      இலங்கை அலுவலகத்தில் பணிபுரிந்தவர் எரிக் சோல்ஹைம். இவரை, நார்வே அரசு,
      புலிகள்-இலங்கை அரசுடன் பேச்சு நடத்தும் ஒரு சமரசப் பேச்சாளராக அறிவித்தது.
      இலங்கை இனப் பிரச்னையில் சுமுகத் தீர்வு காண்பதற்கான முயற்சியின் ஒரு
      வேலைத்திட்டமாக வன்னிப் பகுதியின் வடபகுதியிலுள்ள மல்லாவி என்கிற இடத்தில்,
      விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை 31-10-2000 அன்று சோல்ஹைம்
      சந்தித்தார். அவருடன் இலங்கைக்கான நார்வே தூதுவரான ஜான் வெஸ்ட்போர்க்,
      நார்வேயின் வெளியுறவுச் செயலக நிர்வாக அதிகாரியான செல்வி ஜெர்ஸ்தி
      ட்ரோம்ஸ்டல் ஆகியோரும் சென்றிருந்தனர். பிரபாகரனுக்கும் இவர்களுக்குமிடையே
      இரண்டு மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையின்போது, "சந்திரிகா, இனப்
      பிரச்னையைப் போரின் மூலமே தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளவர்.
      பொதுவாக சமாதானப் பேச்சு போர்ச்சூழலில் நடைபெற முடியாது. அங்கு அமைதி நிலவ
      வேண்டும். போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும். விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை
      நீக்கப்படவேண்டும். பொருள்கள் தாராளமாகக் கிடைக்கப் பெறவேண்டும். இதன்
      பின்னணியில் அமைகிற பேச்சே வெற்றி பெறும். இருந்தாலும் புலிகள் சமாதானப்
      பேச்சில் ஈடுபடத் தயாராக இருக்கிறார்கள்-நான் தயாராக இருக்கிறேன்' என்று
      பிரபாகரன் தெரிவித்தார். நன்றி கூறி விடைபெற்ற நார்வே குழு, நேரடியாகக்
      கொழும்பு சென்றது. அதிபர் சந்திரிகாவிடம் பிரபாகரன் கூறியதைத் தெரிவித்தனர்.
      அவரோ, பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்த நிலையிலும், போர் நிறுத்தம் அறிவிக்க
      முடியாது என்றும், போருக்கிடையே பேசலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
      இருப்பினும் நார்வே தூதர்கள் தங்களது முயற்சிகளில் இருந்து பின்வாங்காமல்,
      பிரபாகரனுக்கு அந்நாட்டின் வெளிவிவகாரத்துக்கான துணையமைச்சர் ரேமண்ட் ஜான்சன்
      புரிந்துணர்வு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.
      அக் கடிதத்தில், "18 மாதங்களாக ஸ்ரீலங்காவின் அதிபர் சந்திரிகா மற்றும்
      வெளியுறவுத்துறை அமைச்சரிடமும், புலிகளின் பேச்சாளரான அன்டன்
      பாலசிங்கத்திடமும் தொடர்புகொண்டு பேசியதில், பேச்சுவார்த்தைக்கு இணக்கம்
      காட்டப்பட்டதற்கு நன்றி தெரிவித்ததுடன், மிகுந்த கவனத்துடன் மனிதநேயத்துக்கான
      புரிந்துணர்வு திட்டம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக' குறிப்பிடப்பட்டிருந்தது.
      அத்துடன் சில திட்டங்களுக்கான குறிப்புகளும் இணைக்கப்பட்டிருந்தன. அதில்
      பேச்சுவார்த்தைக்கான இணக்கமான சூழலை உருவாக்கும் யோசனைகள் இருதரப்பும்
      ஏற்கும் விதமாக பொதுவாகக் கூறப்பட்டிருந்தன. அதில், வன்னிப் பகுதியில் ஆயுதக்
      குவிப்பு கூடாது என்றும், மக்களின் அன்றாடத் தேவைகளுக்குண்டான பொருள்கள்
      தாராளமாகக் கிடைக்க அரசு வழிசெய்ய வேண்டும் என்றும், ஏ-9 தேசிய
      நெடுஞ்சாலையில் மேலும் ஒரு செக் பாய்ண்டில் பொருள்கள் வந்து இறங்க வழி
      செய்யவேண்டும் என்றும், இவ்வாறு பொருள்கள் குவிக்கும்போதும்,
      விநியோகிக்கும்போதும் புலிகள் ஆயுதப் பிரயோகம் செய்யலாகாது என்றும் அதில்
      குறிப்பிடப்பட்டிருந்தது. புலிகள் தரப்பில் வே.பிரபாகரன் 27, நவம்பர் 2000
      அன்று தான் ஆற்றிய மாவீரர் தின உரையில், "நார்வே நாட்டின் புரிந்துணர்வை
      ஏற்பதாகவும், இந்த விஷயத்தில் ஸ்ரீலங்கா அரசின் எண்ணங்களுக்கேற்ப எங்களது
      செயலும் இருக்கும்' என்றும் கூறியிருந்தார். சந்திரிகா இதற்கு உடனடியாகப்
      பதில் சொல்லவில்லை. ஆனால், பிரதமரும் ராணுவத் தளபதியும் வெவ்வேறு குரல்களில்
      பேசி, பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்று கருத்து தெரிவித்தனர். ஆனால்,
      பிரபாகரன் சமாதானப் பேச்சில் ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறி, கிறிஸ்துமஸ்,
      ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு, ஒரு மாதம்
      போர்நிறுத்தம் செய்வதாகவும் டிசம்பர் 24-ஆம் தேதி அறிவித்தார். சந்திரிகா,
      அப்போதும் எதுவும் பேசவில்லை. மாறாக சிங்கள ராணுவம் வழக்கம்போல் ஆங்காங்கு
      சிறுசிறு தாக்குதல்களை நடத்திக்கொண்டே இருந்தது. இந்த வகையான எரிச்சல்
      மூட்டும் நடவடிக்கைகளை பிரபாகரன் சகித்துக்கொண்டதுடன், மேலும் 3 மாதம்
      போர்நிறுத்தம் என்றார் (வார் அண்ட் பீஸ்-அன்டன் பாலசிங்கம், பக்.344).
      பிரபாகரனின் போர்நிறுத்த அறிவிப்புகளை அதிபரின் செயலகம் முற்றிலுமாக
      நிராகரித்து, போருக்கு இடையேதான் பேச்சு என்பதைத் தெரிவித்தது. போர்நிறுத்தம்
      முடிந்ததும் பிரபாகரன் 24, ஏப்ரல் 2001 அன்று ஓர் அறிக்கையினை வெளியிட்டார்.
      அந்த அறிக்கையில், "போர்நிறுத்தம் அறிவித்த நான்கு மாதங்களில் 160 போராளிகள்
      கொல்லப்பட்டிருக்கிறார்கள். 400 பேருக்கு மேற்பட்டவர்கள் படுகாயத்துக்கு
      ஆளாகியிருக்கிறார்கள். முல்லைத்தீவு, திருகோணமலையில் மக்கள் வாழும்
      பகுதிகளில், தொடர்ந்து வான்வழியாக குண்டுவீச்சு நடத்தப்படுகிறது. இதன்
      காரணமாக மக்கள் பெருமளவில் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களது உடைமைகள்
      அழிக்கப்பட்டிருக்கின்றன. சிங்கள ராணுவத்தின் இந்தச் செயல் எங்களை, எங்களது
      போராளிகளை உசுப்பிவிடத் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்தக் காலத்தில்
      சிங்களக் கடற்படை, வான்படைகளுக்கு ஏராளமான அளவில் ஆயுதங்கள் வாங்கிக்
      குவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையிலும் நார்வே நாட்டின் சமாதான
      முயற்சிகளை மதிக்கும் வகையில் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு கொடுத்து
      வருகிறோம். ஒத்துழைப்பு கொடுப்போம். அதே வேளையில், எங்களது போர்நிறுத்தத்தை
      இதற்கு மேலும் நீட்டிப்பது எவ்வாறு?' என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதே
      நாளில் (ஏப்ரல் 24) சிங்கள ராணுவம் "அக்னி ஜ்வாலா' என்ற பெயரில் ஆனையிறவுப்
      பகுதியில் முப்படைகளைக் கொண்டும் தாக்குதலைத் தொடுத்தது. ஆனையிறவுத் தளத்தை
      மீண்டும் கைப்பற்றுவது இத் தாக்குதலின் நோக்கமாக இருந்தது. சிங்கள
      ராணுவத்தின் 52, 53 மற்றும் 55-வது படைப் பிரிவுகளில் உள்ள 12 ஆயிரம்
      துருப்புகள் ஒருசேரத் தாக்கின. இந்த நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குபவராக
      பாதுகாப்புத்துறை அமைச்சர் அநுருத்த ரத்தவத்தே பலாலி விமானதளத்தில் வந்து
      தங்கியிருந்தார். எதிர்பார்த்த எதிர்த் தாக்குதல் இல்லை. ராணுவத்தினர்
      புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தனர். ராணுவத்தினரை
      முன்னேறவிட்டு, திடும்மென புலிகள் ராணுவத்தினரைத் தாக்கினர். எதிர்பாராத
      இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் திகைப்புற்று, சிதைந்து ஓடினர். புலிகளின்
      கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திறங்கிய கடற்படையினர் மீதும் சரமாரித்
      தாக்குதல் நடத்தப்பட்டது. "அக்னி ஜ்வாலை' அணைந்து போனது என்று குறிப்பிட்ட
      பாலசிங்கம், 600 வீரர்களை இழந்து, 2 ஆயிரம் பேர் படுகாயமுற்று ஓடியதாகவும்
      தனது நூலான வார் அண்ட் பீஸில் (பக்.349) குறிப்பிட்டுள்ளார்.
      167:ரணில் பிரதமரானார்!        புலிகளிடம் இழந்த ஆனையிறவை மீண்டும் கைப்பற்றி விடுவோம் என்ற நினைப்பில்,
      பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்தவத்தே கொழும்பிலிருந்து ஏராளமான உள்ளூர்
      மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை விமானத்தில் கூட்டி வந்திருந்தார்.
      அவர்களனைவரும் பலாலி விமானதளத்தில் உள்ள ஓய்வறைகளில் தங்க
      வைக்கப்பட்டிருந்தார்கள்.உயிரிழந்த, காயம்பட்ட, கண்ணிவெடியில் கால்களை
      இழந்தவர்களை நூற்றுக்கணக்கில் கொண்டு செல்ல, பயணிகள் விமானங்கள் ரத்து
      செய்யப்பட்டு அவை பயன்படுத்தப்பட்டன. போதாக்குறைக்கு கொழும்பிலிருந்து மேலும்
      விமானங்கள் வரவழைக்கப்பட்டு வீரர்களை ஏற்றி அனுப்புவதைப் பத்திரிகையாளர்கள்
      நேரில் கண்டு திகைத்தனர். அவர்களில் பலரும் தாங்கள் எழுதிய கட்டுரைகளுக்கு
      இட்டிருந்த தலைப்பு: "அக்னி ஜ்வாலை நெருப்பை கக்காதது ஏன்?' என்பதாகும்.
      இலங்கை ராணுவத்துக்குக் கடுமையான இழப்பு ஏற்பட்டபிறகும் சந்திரிகா, நார்வே
      சமரசத்தை ஏற்கவில்லை. நார்வே நாட்டுக்கு முன்பாக, வாஜ்பாய் அரசு
      பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்று, ஜஸ்வந்த் சிங்கை கொழும்புக்கு அனுப்பி
      வைத்தது. இக்காலத்தில், விடுதலைப் புலிகளின் தலைவருடனான சந்திப்புக்கு
      இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்குத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ்
      மிஸ்ரா முயன்றார். சந்திக்கலாம், என்ன தகவல் வேண்டுமோ அதைப் பெற்றுத்தர
      முடியும்; ஆனால் பிரபாகரனிடம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடச் சொல்லக்கூடாது
      என்று பிரஜேஷ் மிஸ்ராவிடம் சொல்லி, அதற்கு அவர் உறுதிகொடுத்த பின்பு, அவ்வாறு
      கேட்கமாட்டோம் என்று பிரஜேஷ் சொன்னபிறகு பிரபாகரனிடம் இந்தத் தகவல்
      தெரிவிக்கப்பட்டது. இந்தியா விதித்த தடையை நீக்கினால் நல்லது என்கிற
      பிரபாகரனின் விருப்பத்திற்கு, தடைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லை என்று
      பிர்ஜேஷ் மிஸ்ரா விளக்கமளித்தார். இந்திய சமரச முயற்சிக்கு ஒத்துக்கொண்டதைப்
      பிரபாகரன் 2, ஜூன் 2000-இல் பிரஜேஷ் மிஸ்ராவுக்கு தெரிவித்தபின்னர்தான்
      இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் கொழும்பு சென்றார்.
      சந்திரிகாவிடம் பேசினார். இந்தியாவின் சமரச முயற்சிக்கு சந்திரிகா
      ஒத்துக்கொள்ளாததால், அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது. இந்த முயற்சிகளில்
      இந்திய சட்ட அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, மறவன்புலவு க.சச்சிதானந்தம்,
      காசி.ஆனந்தன், பழ.நெடுமாறன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
      அதேபோன்று இங்கிலாந்தும் சமரச முயற்சியில் ஈடுபட முயன்று, எதிர் எதிரான
      சிங்களக் கட்சிகளிடையே இனப் பிரச்னையில் ஒத்த கருத்தை உருவாக்க முயன்றது.
      இந்தத் திட்டத்துக்கும் சந்திரிகா முன்வரவில்லை. இவ்வாறே நார்வேயின் சமரச
      முயற்சியையும் அவர் புறந்தள்ளிவிட முயல்வது வெளிப்படையாகத் தெரிந்தது.
      விடுதலைப் புலிகள் சந்திரிகாவுக்கு ஒரு பாடத்தைச் சொல்ல விரும்பினார்கள்.
      "1983-ஜூலை படுகொலை நினவுநாளி'ல், ஜூலை 24, 2001 அன்று அதிகாலை, விடுதலைப்
      புலிகளின் அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த 14 பேர் கொழும்புக்கு வடக்கே உள்ள
      கட்டுநாயக்கா விமானப்படை தளத்தை முற்றுகையிட்டனர். புலிகளின் உளவுப் பிரிவு
      பல மாதங்களாக திரட்டிய தகவல்களின் அடிப்படையில், போராளிகள் ராணுவ வீரர்களின்
      சீருடையில் உள்ளே நுழைந்தனர். அடுத்த சில நிமிடங்களில், 8 விமானப்படை
      விமானங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. அதிர்ந்த விமானப்படை வீரர்களுக்கும்
      போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. விமானப்படைத் தளத்தையொட்டிதான்
      பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையமும் இருந்தது. போராளிகள் அங்கும் நுழைந்து
      3 பயணிகள் விமானங்களைத் தாக்கி அழித்தனர். அதுதவிர இரு இடங்களிலும் சேர்த்து
      16 சிறு போர்விமானங்களும், ஹெலிகாப்டர்களும் குண்டு வீசித் தகர்க்கப்பட்டன.
      விமானங்கள் தாக்குதலுக்குள்ளானதும், அடுத்த சில நிமிடங்களிலேயே
      ஆயிரக்கணக்கில் வீரர்கள் அங்கே குவிந்தனர். அவர்கள், 14 புலிகளையும்
      சுற்றிவளைத்து தாக்கிய நிலையிலும், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானங்களை
      அழித்த அவர்களில் சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிலர் சயனைட் குப்பி கடித்து
      உயிர்துறந்தனர்.
      இந்தச் சம்பவம் இலங்கை மட்டுமன்றி உலகம் முழுவதும் பரவி,
      பரபரப்புக்குள்ளானது. இதன் உடனடித் தாக்கமாக சுற்றுலாப் பயணிகள் அச்சம்
      கொண்டு, இலங்கைப் பயணத்தை ரத்து செய்ததில் முடிந்தது. இன்னொரு விளைவாக,
      வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தன. இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில்,
      "தொடர் யுத்தம் காரணமாக, பொருளாதாரம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது
      சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. வளர்ச்சித் திட்டங்களுக்குப் போகவேண்டிய நிதி,
      யுத்தச் செலவுகளுக்கும், ஆயுதங்களுக்குமே திருப்பிவிடப்படுகிறது' என்றும்
      குறிப்பிடப்பட்டிருந்தது (வார் அண்ட் பீஸ்-அன்டன் பாலசிங்கம், பக்.352).
      ஆனையிறவு மீட்பில் பலத்த அடிவாங்கிய சந்திரிகா, அரசியல்ரீதியாகவும்,
      பொருளாதாரரீதியாகவும், ராணுவரீதியாகவும் கடும் நெருக்கடிக்கும், தொடர்
      விமர்சனங்களுக்கும் ஆளானார். இதற்கு மேலும் அழிவைச் சந்திக்க முடியாது என்று
      முடிவெடுத்த சந்திரிகா, லட்சுமண் கதிர்காமரை அழைத்து, நார்வே நாட்டின் சமாதான
      முயற்சிகளைப் புதுப்பிக்கும்படி உத்தரவிட்டார். லட்சுமண் கதிர்காமர்,
      நார்வேயின் இலங்கைக்கான தூதுவர் ஜான் வெஸ்ட்போர்க்கைத் தொடர்பு கொண்டார்.
      அவர் முந்தைய முயற்சிகளில் காயமடைந்த விடுதலைப் புலிகளிடம் தொடர்பு கொள்வதில்
      உள்ள சிரமங்களை விளக்கினார். இருப்பினும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக
      ஜான் வெஸ்ட்போர்க் தெரிவித்து, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்
      வே.பிரபாகரனைத் தொடர்பு கொண்டபோது, அவர், விடுதலைப் புலிகள் மீதான தடையையும்,
      பொருளாதாரத் தடையையும் விலக்குவதுடன் இருதரப்பு போர்நிறுத்தத்துக்கான
      அறிவிப்பை வெளியிடுவதும் அவசியம் என வலியுறுத்தினார். ஆனால், சந்திரிகா இந்த
      நிபந்தனைகளுக்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.
      இதே வேளையில், நார்வே நாட்டிலும் ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருந்தது. தொழில்கட்சி
      அரசு பதவி விலகி, கன்சர்வேடிவ் கட்சியும், கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியும்
      இணைந்த அரசு பதவியேற்று, அதன் பிரதமராக கே.எம்.பாண்டெவிக் மற்றும் புதிய
      வெளியுறத்துறை அமைச்சராக ஜான் பீட்டர்சன் பொறுப்பேற்றதும், இலங்கை சமாதான
      முயற்சிகளின் தூதுவராக எரிக் சோல்ஹைம் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
      இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ரணில் விக்ரமசிங்கே இருக்கும்போது,
      தனது தேர்தல் அறிக்கையில் "அமைதி, அமைதி மட்டுமே தனது கட்சியின் முக்கிய
      அம்சமாக இருக்கும். முந்தைய அரசின் தவறான அணுகுமுறைகளால் ஏற்பட்ட போரின்
      விளைவாக அல்லலுற்ற நாம், ஒன்றிணைந்த இலங்கையில் அனைவரும் ஏற்கும் வகையிலான
      சமரசத் திட்டத்தை முன்வைத்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம். சமாதானப்
      பேச்சைத் தொடர்வோம். விடுதலைப் புலிகளை அரவணைத்துச் செல்வோம். அனைவரும்
      ஏற்றால் நாட்டின் அரசியலமைப்பில் தேவைப்படும் மாற்றங்களை ஏற்படுத்தி,
      ஒருங்கிணைந்த புதிய இலங்கையைப் படைப்போம். வடக்கு-கிழக்கில் இடைக்கால அரசு
      ஒன்றை அமைக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களை
      அவர்களது பகுதியிலேயே மீண்டும் குடியமர்த்தவும், "கமிஷன்' ஒன்றையும்
      அமைப்போம். முதற்கட்டமாக அங்குள்ள மக்களின் அன்றாடத் தேவைக்குண்டான அனைத்துப்
      பொருள்களும் தினசரி கிடைக்கும் வகையான சூழலை உருவாக்கித் தருவோம்'
      என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.
      இதேபோன்று, வே.பிரபாகரன் 27, நவம்பர் 2001 மாவீரர் நாள் உரையில், "ராணுவமயம்
      என்றும் அதன் மூலமே தீர்வு என்றும் நம்பிக்கை கொண்ட அடக்குமுறையாளர்களை
      சிங்கள மக்கள் அடையாளம் கண்டு இத் தேர்தலில் ஒதுக்கவேண்டும்' என்று
      குறிப்பிட்டிருந்தார். அவ்வுரையில் அவர் மேலும் கூறுகையில், "நாங்கள்
      சிங்களவர்களின் எதிரிகளல்ல. அவர்களுக்கெதிராகவும் நாங்கள் போராடவில்லை.
      சிங்களப் பேரினவாதிகளையும், பேரினவாத அரசியலாளர்களையும் மட்டுமே
      எதிர்க்கிறோம். இவர்களால்தான் தமிழ்-சிங்கள மோதல்கள் உருவாகின்றன. எங்களுக்கு
      நன்றாகத் தெரியும், போர் என்பது தமிழர்களை மட்டுமல்ல, அது சிங்களவர்களையும்
      பாதிக்கிறது என்று. போர் வெறியால், அடக்குமுறையால், அப்பாவி சிங்கள இளைஞர்கள்
      பெருமளவில் உயிரிழந்திருக்கின்றனர். எனவே இத் தீவில் நிரந்தரமான அமைதியை
      ஏற்படுத்தவல்ல, தமிழர்களுக்குரிய நல்ல தீர்வைத் தரக்கூடியவர்களையே அவர்கள்
      தேர்ந்தெடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தார். இலங்கையின்
      நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் அணி பெரும்பான்மை பலம் பெற்றது. 5, டிசம்பர்
      2001-இல் ரணில் பிரதமரானார். புலிகள் வழக்கம்போல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு,
      பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு ஒரு மாதம் போர்நிறுத்தம் அறிவித்தார்கள்.
      புதிய பிரதமரான ரணிலும் பதிலுக்கு போர்நிறுத்தம் அறிவித்தார்.
      செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2010 21:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 "ஈழ வரலாற்றில், சமாதானப் பேச்சுவார்த்தையில் நார்வே நாடு கலந்துகொண்டது

No comments:

Post a Comment