Sunday, November 7, 2010

122: ராஜீவுக்கு பிரபாகரன் எழுதிய கடிதங்கள்!,123: கிட்டு அளித்த பேட்டி!

122: ராஜீவுக்கு பிரபாகரன் எழுதிய கடிதங்கள்! இந்திய அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடிப் போர் ஏற்பட்ட
      இரண்டாவது நாளில் பிரபாகரன், பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதம்
      எழுதினார். அந்தக் கடிதத்தில் உள்ள விவரம் வருமாறு: ""மிகவும் அபாயகரமான
      சூழ்நிலையில் இந்த அவசரக் கடிதத்தை அனுப்புகிறேன். அமைதிப்படை விடுதலைப்
      புலிகளுடன் போர் தொடுப்பது என்ற நிலை எடுத்த பிறகு இதன்மூலம் எதிர்த்
      தாக்குதல் நடத்தும்படி நாங்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறோம். விடுதலைப்
      புலிகளின் இந்த எதிர்த்தாக்குதல் என்பது எங்களையும், எங்களது மக்களையும்
      தற்காத்துக் கொள்ளவே மேற்கொள்ளப்படுகின்றது. அமைதிப்படை எங்கள் மீது போர்
      தொடுப்பது என்பதைக் கண்ட எங்களது மக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். எங்கள்
      மீது தொடுக்கப்பட்ட போரானது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஷரத்துகளுக்கு
      முரணானதும், ஓர் அத்துமீறலுமாகும். இது எங்களது கருத்து மட்டுமல்ல; தமிழீழ
      மக்களின் ஒட்டுமொத்த கருத்துமாகும். இந்த யுத்தத்தில் அமைதிப் படையுடன்
      சிங்களப் படையும் சேர்ந்துகொண்டதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
      இதனால் மனித இழப்பு என்பது பெருமளவில் இருக்கும். இத்தகைய அழிவுகளுக்கும்,
      விளைவுகளுக்கும் இந்தியாவே பொறுப்பு ஏற்க வேண்டும். இந்நிலையில் எமது
      தாழ்மையான விண்ணப்பம் என்னவென்றால், அமைதியை நிலைநாட்டவும், நன்நம்பிக்கையை
      வளர்க்கவும், இந்தியாவுடன் எங்களது உறவுகள் மேம்பாடடையவும், உடனடியாகப் போர்
      நிறுத்தம் அறிவிக்கும்படி வலியுறுத்துகிறோம்'' என்று 1987, அக்டோபர் 12-ஆம்
      தேதி, எழுதப்பட்ட கடிதத்தில் வேண்டியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு
      எந்தவிதமான பதிலோ, அதன் பேரிலான நடவடிக்கைகளோ இல்லாத நிலையில் மீண்டும் ஒரு
      கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதம் 14-10-1987 அன்று எழுதப்பட்டது. அந்தக்
      கடிதத்தில்,
      ""நாளுக்கு நாள் தமிழீழத்தில் மக்கள் கொல்லப்படுவதுடன், அழிவுகளும்
      அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுவதாக'' என்று
      குறிப்பிட்டுள்ள பிரபாகரன் மேலும் குறிப்பிடுவதாவது: ""இதுநாள்வரை நடந்த
      போரில் 150 பேருக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 500
      பேருக்கும் மேல் காயமடைந்திருக்கிறார்கள். எந்திரத் துப்பாக்கி மூலம்
      சுடுதல், ராக்கெட் குண்டுவீச்சு, வான் மூலமான குண்டுவீச்சுகளில் இந்த
      இழப்புகளும் விளைவுகளும் ஏற்பட்டுள்ளன. எங்களது இயக்கத்தின் போராளிகள்,
      தேடுதல் மற்றும் அழித்தல் நடவடிக்கையால் நூற்றுக்கணக்கில்
      கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்சமயம் எங்களால் 18 அமைதிப்படை வீரர்கள் கைது
      செய்யப்பட்டு எங்களது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
      இந்தத் திடீர்ப் போர் காரணமாக, ஏராளமான மக்கள், அமைதிப்படைக் காலத்தில்,
      முதன்முதலாகத் தங்கள் வாழ்விடத்திலேயே, அகதிகளாக்கப்பட்டுள்ளனர். தொடர்
      ஊரடங்கு அமலினால் உணவுக்கும் குடிநீருக்கும் மற்றும் தங்கள் தேவைகளுக்கும்
      அவர்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள். இந்திய அமைதிப்படை எங்களது தாயகத்துக்கு
      அமைதியையும்-சுமுகச்சூழலையும் ஏற்படுத்துவதற்காக வந்திறங்கி, எங்கள் மக்கள்
      மீது கொடுமைகளை இழைத்து வருகிறது. இது முற்றிலும் மனிதநேயத்துக்கு
      அப்பாற்பட்ட செயலாகும். அக்டோபர் 11-ஆம் தேதி காலையில், யாழ் பல்கலைக்கழக
      எல்லைக்குள் 40 பொதுமக்கள் இந்திய அதிரடிப்படை வீரர்களால் இறக்க நேர்ந்தது
      எதனால்? அந்தப் பகுதி கல்விக்கூடங்கள் நிறைந்த பகுதி. அங்கு அதிரடி நடவடிக்கை
      ஏன் நடத்தப்பட்டது? ஈழமுரசு, முரசொலி பத்திரிகை அலுவலகங்கள் குண்டுவீசித்
      தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன் அங்கிருந்த செய்தியாளர்கள், ஊழியர்கள் கைது
      செய்யப்பட்டிருக்கிறார்கள். யாழ் பொது மருத்துவமனை குண்டுவீச்சுக்கு
      ஆளாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள்
      இறந்திருக்கிறார்கள். யாழ் பல்கலை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு
      அங்கிருந்த பெரும்பாலான கட்டடங்கள் நாசமாக்கப்பட்டு விட்டன.
      அமைதிப்படை கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பிரசாரம்
      செய்யப்படுகிறது. ஆனால் வான்வீதியிலான தாக்குதல் எவ்வாறு நடைபெறுகிறது?
      உண்மையில் இந்திய, இலங்கைப் படைகள் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களைப்
      பயன்படுத்தி பெரும் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அமைதிப் படையின்
      வருகையும் அதன் நோக்கமும் மக்களுக்கு இயல்பு வாழ்வைத் தருவது என்பது; ஆனால்
      நடப்பதோ வேறு. அமைதிப்படையின் அத்துமீறல்களுக்கு சட்டபூர்வ உதவி கோர முடியாத
      நிலையுள்ளது. எனவே இதுவரை நடைபெற்றுள்ள அத்துமீறலுக்கும், அழிவுகளுக்குமான
      உண்மை விவரம் அறிய, உண்மை அறியும் குழுவொன்றுக்கு உடனடியாக ஏற்பாடு
      செய்யுங்கள். இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நாங்கள்
      அழைக்கப்பட்டோம். அதில் பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் எங்களது
      இயக்கத்தின் வலு உணர்ந்தே அழைக்கப்பட்டோம். இந்தியாவும் இலங்கையும்
      எங்களுக்கு வாக்களித்தபடி, இடைக்கால அரசமைக்க வேண்டி, ஆயுதங்களைக்
      கையளிக்கவும் உறுதியளிக்கிறேன். ஆனால் துரதிருஷ்டவசமாக எங்கள் மீது யுத்தம்
      தொடுக்கப்பட்டுவிட்டது; அதுவும் கிழக்கு மாகாணத்தில் ராணுவ வீரர்கள் மீது ஒரு
      தாக்குதலை நடத்தி, அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்தி
      இருக்கிறார்கள்! கிழக்கில் நடைபெறும் இன மோதல்களில் எங்களது இயக்கத்துக்கு
      எந்தப் பங்கும் இல்லை. ஆனால், பழி எங்கள் மீது சுமத்தப்படுகிறது. தற்சமயம்
      புலேந்திரன், குமரப்பா மரணத்தினாலும் அங்கு வன்முறைகள் வெடித்துள்ளதற்கு
      சிங்களப் படையே காரணம். இவ்விரு போராளிகளும் திருகோணமலை மற்றும்
      மட்டக்களப்பைச் சேர்ந்த எங்கள் இயக்கத்தின் தளபதிகள் ஆவர். அவர்களது கைதால்,
      பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென நாங்கள், தூதுவர் ஜே.என். தீட்சித்தை
      எச்சரித்தோம். அவரும் ஜெயவர்த்தனாவைச் சந்தித்தார். ஆனால் தீர்வு
      காணப்படவில்லை..
      எங்களுக்கென்று சில கோட்பாடுகளை நாங்கள் வைத்திருந்தும், அந்தக்
      கோட்பாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு ஆதரவு
      தெரிவித்தோம். ஒத்துழைப்பு கொடுத்தோம். ஆனால் இந்தியா எங்களை ஒதுக்கியது.
      தனிமைப்படுத்த முயன்றது. நான் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், போர்
      நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தையில் இறங்குவோம் என்பதுதான்'' என்று
      அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்துக்கும் உரிய
      நடவடிக்கைகள் இல்லை. எனவே 1988 ஜனவரி 13-இல் இறுதியாக ஒரு கடிதம் எழுதினார்.
      அதில் ஆயுதக் கையளிப்பு மற்றும் ஏற்றுக்கொண்ட இடைக்கால அரசை, எழுதப்படாத
      ஒப்பந்தப்படி நடைமுறைப்படுத்த முன்வருமாறும் குறிப்பிட்டு எழுதினார்.
      அக்கடிதத்தின் விவரம் வருமாறு:
      ""நல்லெண்ண நடவடிக்கையாக அமைதிப்படையின் முகாமில் அடைபட்டிருக்கும் எங்களது
      போராளிகளையும் ஆதரவாளர்களையும் விடுவிக்கும்படி கோருகிறோம். எங்களது
      போராளிகளுக்கு உண்மையான பொது மன்னிப்பை வழங்கும்படி ஜெயவர்த்தனாவை
      வலியுறுத்துவதுடன், அதனை அமல்படுத்தவும் தாங்கள் வலியுறுத்த வேண்டுமாயும்
      கோருகிறோம். தாங்கள் தில்லியில் ஒப்பந்தத்துக்கு முன்பாகக் குறிப்பிட்டபடி,
      இடைக்கால அரசை அமைத்து, அதனை விடுதலைப் புலிகள் கோரியபடி அளிக்க
      வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். இதற்குத் தடையாக இருக்கும் என்று
      கருதும்பட்சத்தில் எங்களது ஆயுதங்களைக் கீழே போடவும் தயார் என மீண்டும் -
      உறுதியளிக்கிறோம். மக்கள் அமைதியுடன் வாழ, எங்களது இயக்கத்தின் ஒத்துழைப்பை
      நல்கவும் தயாராக இருக்கிறோம்.
      இடைக்கால அரசு என்கிற திட்டம் தற்போது பாதியில் உள்ளது. விடுதலைப் புலிகள்
      அமைப்புக்கு தாங்கள் அளித்த வாக்குப்படி, இவ்வாய்ப்பு வழங்கப்படும்
      பட்சத்தில், மாநில அளவிலான உரிமைகளுக்கும் சுயநிர்ணய ஆட்சிக்கும்
      உரியவற்றையும் திட்டமிட முடியும். தமிழீழ மக்களின் துயர்போக்க, அவர்கள்
      தங்களது வாழ்விடத்தில் வசிக்க, போர் நிறுத்தம் அறிவித்து, பேச்சுவார்த்தை
      தொடங்க வேண்டுமாயும், இதற்கான அமைதிச் சூழலை உருவாக்கும்படி மீண்டும்
      கேட்டுக் கொள்கிறேன்'' என்றும் கூறியுள்ளார் (கடிதங்கள் ஆதாரம்: அன்டன்
      பாலசிங்கம் எழுதிய வார் அண்ட் பீஸ்). இந்தக் கடிதங்களுக்கு எந்த பதிலும்
      பிரதமர் தரப்பில் இல்லை. அவர் உளவு அமைப்பின் தகவல்களுக்கே முக்கியத்துவம்
      அளித்தார் என்றே அப்போதைய அமைதிப் படை தளபதிகள் தங்கள் நூல்களில்
      கூறியுள்ளனர்.மாறாக விடுதலைப் புலிகளை இயக்கங்களுக்கிடையே தனிமைப்படுத்தவும்,
      மக்களுக்கிடையே அந்நியப்படுத்தும் முயற்சியிலும் இறங்க அமைதிப்படைக்கு
      உத்தரவிடப்பட்டது  
      123: கிட்டு அளித்த பேட்டி!         பிரபாகரன் எழுதிய கடிதங்களின் தொடர்ச்சியாக சென்னையில் தங்கியிருந்த
      கிட்டு பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது விடுதலைப் புலிகளின் நிலை குறித்து
      பேட்டியளித்தார்~ "டைம்ஸ் ஆப் இந்தியா'வின் துணை பத்திரிகைகளில் ஒன்றான
      "இல்லஸ்ட்ரேடட் வீக்லி' என்ற வார இதழின் செய்தியாளர் கே.பி.சுனிலுக்கு அளித்த
      பேட்டி சில உண்மைகளையும், இந்திய அரசுக்கு நல்லிணக்கச் செய்திகளையும்
      அளித்தது. பிரபாகரனிடம் பேட்டியொன்றுக்கு ஏற்பாடு செய்யும்படிதான்
      கிட்டுவிடம் கூறப்பட்டது. அதன்பேரில் கேள்விகளைக் கேட்டு வாங்கிய கிட்டு, சில
      நாள்கள் கழித்து பிரபாகரன் பேட்டியாக இல்லாமல் பொதுவான விடுதலைப் புலிகளின்
      அமைப்பு தருவதான பேட்டியாகப் பதில் அளிக்கப்பட்டிருந்தது. எனவே அந்தப்
      பதில்களுக்கு கிட்டு பதில் என்றே வெளியிடப்பட்டது. நீண்ட பேட்டியில் ஒரு சில
      கேள்விகளும் அதற்குப் பெறப்பட்ட பதிலும் வருமாறு:
      கேள்வி: ஜூலை 29 மற்றும் செப்டம்பர் 28 பேச்சுவார்த்தைகளின்போது விடுதலைப்
      புலிகளுக்கும், இந்திய அரசுப் பிரதிநிதிகளுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின்
      விவரங்கள்? கிட்டு பதில்: ஜூலை 29-இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய
      அரசுக்கும் இடையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. சிறீலங்கா - இந்திய
      அரசுகளுக்கிடையே உடன்பாடு கையெழுத்தானது. பிரதமர் ராஜீவ் சந்திக்க
      விரும்பியதாலேயே எமது தலைவர் பிரபாகரன் தில்லி சென்றார். ஒப்பந்தத்தின்
      சாராம்சம் அவசர அவசரமாகக் காட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்கவில்லை.
      ஆனால் இந்த ஒப்பந்தத்தின் இணைப்பில் அடங்கிய இந்தியாவின் பாதுகாப்பு
      வெளிநாட்டுக் கொள்கைகள் அடங்கிய விஷயங்களை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.
      இலங்கையின் இனப்பிரச்னை குறித்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள விஷயங்கள் எங்கள்மீது
      திணிக்கப்பட்ட ஒன்றாகும்.
      நீண்டகால நோக்கில் தந்திரோபாய ரீதியாக இந்தியா தமிழீழத்தின் நண்பன் என்னும்
      நோக்கிலும், எமக்கு அப்பாற்பட்ட சக்தியாக நிலைமை எம் மீது
      திணிக்கப்பட்டதாலும் நாம் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படுகிறோம். இது இந்த
      ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாகப் பொருள்படாது. இந்த ஒப்பந்தம் திம்புப்
      பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட எங்களின் உயிர்க் கொள்கையான நான்கு அம்ச
      அடிப்படைக் கொள்கைகளை உள்ளடக்கவில்லை. இதனாலேயே இந்த ஒப்பந்தத்தை எம்மால்
      ஏற்க முடியாதிருக்கிறது. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ராஜீவ் காந்தியும்
      ஜெயவர்த்தனாவும் அளித்த பேட்டி, சுதுமலையில் எமது தலைவர் அளித்த உரை,
      15-8-87-இல் "இந்தியா டூடே' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி அனைத்தும்
      சான்று பகர்கின்றன. ஒப்பந்தத்தின் முழுமையான அமலாக்கத்திற்கு ஆதரவு
      தருகின்றோம் எனும் நிலையில் பாரதப் பிரதமர் எமக்குச் சில உறுதிமொழிகளை
      அளித்தார்:
      1. தமிழ் மக்கள், போராளிகளின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்துதல். 2.
      தமிழீழ விடுதலைப் புலிகளைப் பெரும்பான்மையாக உள்ளடக்கிய இடைக்கால அரசை
      ஏற்படுத்துதல். 3. இடைக்கால அரசு
      (1) அகதிகளை மீளக் குடியேற்றுதல், (2) யுத்த அழிவுகளினால் பாதிக்கப்பட்ட
      சகலருக்கும் புனர்வாழ்வு அளித்தல், (3) தமிழ் போலீஸ் படையை நிர்மாணித்தல்
      போன்ற பணிகளுக்குப் பொறுப்பாக இருக்கும் என்பனவே அவ்வுறுதிமொழிகளாகும். ஆனால்
      நாம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தொடங்கியவுடன் நடந்ததோ வேறு. பாரதப் பிரதமர்
      எமக்கு வாக்குறுதி தந்ததற்கு எதிர்மாறாக விளைவுகள் இடம்பெற்றன. (அ) வடக்கு,
      கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நான்கு மடங்கு வேகத்தில் நடைபெற்றன. (ஆ)
      அரசியல் கைதிகள் பெருந்தொகையானோர் விடுவிக்கப்படாதது. (இ) சிறீலங்கா ராணுவம்
      தனியார் வீடுகள், பொதுக் கட்டடங்கள், பாடசாலைகள் போன்றவைகளில் இருந்து
      வெளியேறாதது. (ஈ) இடைக்கால அரசு உருவாக்கப்படாமல் காலந்தாழ்த்தப்பட்டது. (உ)
      அதேவேளை சிங்கள போலீஸ் நிலையங்கள் அவசர அவசரமாக வடக்கு, கிழக்கில்
      ஸ்தாபிக்கப்பட்டது. (ஊ) புனர்வாழ்வும், யுத்த அழிவு நிவாரணங்களும் சிங்கள
      மக்களுக்கே திட்டமிட்டு வழங்கப்பட்டது போன்ற அபாயகரமான சூழ்நிலைகளை
      உடனடியாகத் தடுக்க வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டது. இந்திய அரசுக்கு 24
      மணிநேர முன்னறிவித்தல் அவகாசத்துடன் 5 அம்சக் கோரிக்கைகளைக் கொண்ட திலீபனின்
      சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டது.
      இறுதியில் தமிழ் மக்களின் எழுச்சிக்கும், திலீபனின் உயிர்த் தியாகத்திற்கும்
      அடிபணிந்து செப்டம்பர் 28, 1987-இல் எம்முடன் உடன்பாட்டிற்கு வந்தது.
      1) தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்
      ஒப்பந்தத்தின் அமலாக்கத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குதல் வேண்டும். 2)
      எஞ்சியிருக்கும் ஆயுதங்களைக் கையளித்தல். (இடைக்கால அரசு ஏற்பட்டவுடன்) 3)
      இந்திய அரசுக்கு எதிரான எமது பிரசாரத்தை நிறுத்துதல்.
      என்ற முன்நிபந்தனைகளோடு திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகளை இந்திய அரசு
      ஏற்று, விடுதலைப் புலிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட இடைக்கால அரசு ஒன்றை
      நிறுவ எம்முடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. இவ் ஒப்பந்தத்தில்
      இந்தியத் தரப்பில் தூதுவர் ஜே.என். தீட்சித்தும், எமது தரப்பில் பிரதித்
      தலைவர் மாத்தையாவும் கையெழுத்திட்டனர். கேள்வி: கடந்த ஐந்து மாதங்களில்
      நடந்துள்ள விஷயங்களை, நிகழ்ச்சிகளை நீங்கள் கணிப்பது எப்படி? இந்திய
      ராணுவத்தின் தொகையும், தளவாடங்களும் அங்கு குவிக்கப்பட்டிருப்பது; இந்தியத்
      தொடர்பு சாதனங்களின் செயற்பாடுகள்? கிட்டு: கடந்த 5 மாதங்களில் தமிழ் மக்கள்
      பட்ட துயரம் வேறு எந்தக் காலத்திலும் காணாத ஒன்றாகும்.
      ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் கொடுக்கப்பட்டதாக
      பொய்யைக் கூறி ஏமாற்ற இரு அரசுகளுக்கும் நாம் இடைஞ்சலாக இருக்கிறோம். தமிழ்
      மக்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் எமக்கு அவர்கள் அளிக்கும்
      ஆதரவும் எம்மை ஜனநாயகப் பாதையால் ஒடுக்க முடியாது என்பதை இந்தியாவின்
      தலைவிதியை நிர்ணயிக்கும் சில ராஜதந்திரிகளும், ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசும்
      உணர்ந்து கொண்டன. யுத்தம் ஒன்றின் மூலமே எம்மை அழிக்கலாம் என்றும் அதுவும்
      ஒரு சில நாட்களில் காரியத்தை முடித்து நியாயப்படுத்தலாம் என்றும் நம்பினர்.
      எம்மை வலுவில் ஒரு சண்டைக்கு இழுப்பதற்காகவே பதினேழு பேரைக் கைது செய்து
      கொழும்புக்கு அனுப்பும் நாடகத்தை ஆடினர். எமது தன்னுரிமைக்காகவும்
      பாதுகாப்பிற்காகவும் நாம் சண்டையிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம்.
      உண்மையில் நாம் இந்தியாவிற்கு எதிரான யுத்தத்திற்கு என்றுமே தயாராக
      இருக்காதது மாத்திரமின்றி அதை விரும்பவுமில்லை.
      கனரக பீரங்கிகள், டாங்கிகளை ஏற்கெனவே திட்டமிட்டு குவித்து வைத்திருந்த
      அமைதிப் படை யாழ்ப்பாணக் குடா நாட்டைக் கைப்பற்ற ஒரு எதிரி நாட்டின் மீது
      படையெடுப்பதுபோல் முழுப் பலத்துடன் இறங்கினார்கள். தமது ஒரு கை கட்டப்பட்ட
      நிலையில் தாம் சண்டையிட்டதாக இந்தியத் தளபதிகள் கூறுவது தவறு. போராளிகளின்
      வீரமும், தியாகமும், எமது யுத்த தந்திரமும், எம் ராணுவ வேவுத் திறனும்,
      மக்களின் எல்லையில்லாத ஆதரவும், ஒடுக்குமுறைக்கு எதிரான உண்மையான
      எழுச்சியும்தான் போர்முனைகளில் எமக்கு வெற்றியைக் குவித்தன.
      பெருந்தொகையான ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததனால்தான் நாம் இந்திய
      ராணுவத்தை திணறடித்தோம் என்பதை மறுக்கின்றோம். யாழ்குடா நாட்டின்
      கட்டுப்பாட்டை ஒரு மாதத்தின் பின் நாம் இழந்தாலும் ராணுவ ரீதியில் எமக்கு
      வெற்றியான சண்டையாகவே நாம் கருதுகின்றோம். தொடர்ந்து எமது பாதுகாப்பிற்காக
      கொரில்லாப் போராட்டதை தொடரக்கூடிய நிலையிலும் இருக்கின்றோம்.
      முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தமிழ் மக்கள் எம்மீது அனுதாபமும், ஆதரவும்
      கொண்டிருக்கின்றார்கள். அதேநேரம் இந்திய ராணுவம் தமிழ் மக்களைத்
      தொல்லைப்படுத்தி, பயமுறுத்தி, நிம்மதியற்ற வாழ்க்கையின் எல்லைக்குத்
      தள்ளிக்கொண்டு போகின்றது. இந்திய ராணுவத்தின் பெருந்தொகையான எண்ணிக்கை எமது
      நாட்டு மக்களின் அன்றாடக் கலாசார வாழ்க்கையைப் பாதிக்கும் அபாயத்தை
      ஏற்படுத்தியுள்ளது. ஒரு ராணுவச் சூழ்நிலைக்குள் வாழாத, வாழ்க்கைப்பட
      விரும்பாத எமது மக்கள் இந்திய ராணுவத்தை ஓர் ஆக்கிரமிப்பாளனாக உணரத்
      தலைப்பட்டுள்ளனர். தமது உள்ளக்குமுறல்களை அடக்கி வைத்திருக்கும் எம் மக்கள்
      வியட்னாமின் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியப்
      படைகள் தமது எண்ணிக்கைகளைக் குறைத்து பழைய நிலைக்குத் திரும்பும்
      நடவடிக்கைதான் எதிர்காலத்தில் தமிழ் மக்களுடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்தும்
      வாய்ப்பாகும். இந்தியாவின் மக்கள் தொடர்பு சாதனங்களில் இந்திய அரசுக்கும்
      ஆளும் கட்சிக்கும் கட்டுப்பட்டவை மிகவும் பாரதூரமாக எம்மீது அபாண்டங்களை
      அள்ளித் தெளிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் எமது நிலைப்பாடு பற்றிய விஷயத்தைக்
      கொச்சைப்படுத்துகிறார்கள். தமிழ் மக்கள் கேட்ட உரிமைகளைவிட அதிகப்படியான
      உரிமைகளை இவ் ஒப்பந்தம் கொடுத்துள்ளதாகக் கூறுவது தவறு. எமது நாட்டில் இரண்டு
      தினசரிப் பத்திரிகை அலுவலகங்களை பட்டப் பகலில் வெடி வைத்துத் தகர்க்க இந்திய
      ராணுவத்திற்கு உத்தரவிட்ட இந்திய அரசின் தொடர்பு சாதனங்களிடமிருந்து நாம்
      எதனை எதிர்பார்க்க முடியும்? ஆனால் இந்தியாவின் பெரும்பாலான சுதந்திரமான
      பத்திரிகைகளுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். நாட்டுப்பற்று எனக் கூறி உண்மையை
      மறைக்காமல் நேர்மையாக உள்ளதை உள்ளபடி கூற இப்பத்திரிகைகள் முயன்றுள்ளன. இது
      இந்தியப் பத்திரிகைகளின் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த
      வெற்றியாகும்.

No comments:

Post a Comment