Sunday, November 7, 2010

136:இந்தியா - இலங்கை மோதல் முற்றுகிறது!, 137: பிரபாகரன் கொலையுண்டதாகப் புரளி!

136:இந்தியா - இலங்கை மோதல் முற்றுகிறது!  அமைதிப் படையைத் திரும்பப் பெறுவது குறித்து பிரேமதாசா எழுதிய
      கடிதத்துக்கு ஜூன் மத்தியில் பிரதமர் ராஜீவ் காந்தி பதில் எழுதினார். அந்தக்
      கடிதத்தில், ""இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெறுவது, ஒப்பந்தத்தை
      முழுமையாகச் செயல்படுத்துவது ஆக இரு விஷயங்கள் குறித்து, இரு தரப்பாரும் பேசி
      முடிவுக்கு வரவேண்டிய விஷயமாகும். மேலும், ஒப்பந்தம்
      நடைமுறைப்படுத்தப்படுவதும், அமைதிப் படையைத் திரும்பப் பெறுவதும் ஒரே
      நேரத்தில் நடைபெற வேண்டும்'' என்றும் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம்
      பிரேமதாசாவின் விருப்பப்படி, ஜூலை இறுதியில் அமைதிப்படை இந்தியா திரும்ப
      வாய்ப்பில்லை என்று கண்டதும் அவர் எரிச்சலுற்றார். அதுவும் தவிர, வடக்கு -
      கிழக்கு மாகாண சபைக்கு பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய
      வலியுறுத்துவதன் மூலம் அதற்கான முயற்சியிலும் இந்தியா தீவிரம் காட்டியது.
      இதன் வெளிப்பாடுதான் தமிழ் தேசிய ராணுவத்திற்குக் கட்டாய ஆள் சேர்ப்பு. அதே
      நேரத்தில், இந்திய அமைதிப் படை இலங்கை மண்ணைவிட்டு அகலக்கூடாது என கையெழுத்து
      இயக்கம் நடத்தப்பட்டது. இந்தப் பணியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான
      குழுக்கள் தீவிரம் காட்டின. இது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம்
      வெளியிட்ட (5 ஜூன் 1989) அறிக்கையில், "நாம் முன்பு இந்திய அரசிடம் (அ)
      தமிழ், முஸ்லிம் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்றும் (ஆ)
      இந்திய அமைதிப்படை வெளியேற வேண்டும் என்றும் (இ) சர்வதேச அமைதிப்படை ஒன்று
      இலங்கை வரவேண்டும் - என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்பு
      ஒன்று நடத்த கோரிக்கை வைத்தோம். அன்று அதை ஏற்காமல், இன்று கையெழுத்து
      இயக்கம் நடத்துவது ஏன்? என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே
      நிலையில்தான், இலங்கையின் வடக்குப் பகுதி மக்களின் நிலையும் இருந்தது. கட்டாய
      ஆள்சேர்ப்பு என்பது இளைஞர்களை வீட்டிலேயே முடக்கிப் போட்டது. வடக்கு-கிழக்கு
      மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் அரசுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட
      வேண்டும், நிதி அளிக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்ட நிலையில்
      பிரேமதாசா அரசு இக்கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை.
      இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இணைந்து போர் நிறுத்தம் செய்வதாக
      அறிவித்தனர். இதனையொட்டி, விடுதலைப் புலிகள் இயக்கம் மீது போர் நடவடிக்கைக்
      கூடாது என்றும், போர் தொடர்ந்தால் அது, தங்களின் சமாதானப் பேச்சுக்கு ஊறு
      விளைவிப்பதாக அமையும் என்றும் தில்லிக்கு இலங்கை அரசு செய்தி
      அனுப்பியது.ஆனால் தில்லியோ, இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் அமைதிப்படை
      வந்த பின்னர் நேரடிப் போர் நடைபெறவில்லை என்றும், இந்திய-இலங்கை
      ஒப்பந்தத்தின் பின்னர் அந்தப் போர், அமைதிப்படை - விடுதலைப் புலிகள்
      இடையேதான் நடைபெற்று வருவதாகவும் பதில் அளித்தது.
      அதுமட்டுமன்றி, "இன்னும் கையளிக்கப்படாத ஆயுதங்களை ஸ்ரீலங்கா அரசிடம் புலிகள்
      ஒப்படைப்பதுடன், வன்செயல்களை முற்றாகக் கைவிட வேண்டும். அப்படியிருந்தால்தான்
      போர் நிறுத்தம் அர்த்தமுள்ளதாக இருக்கும்' என்றும் கூறியது. இதனைத் தொடர்ந்து
      விடுதலைப் புலிகள், அமைச்சர் ஹமீதைத் தொடர்புகொண்டு, "ஆயுதத்தைக் கீழே
      போடுவது என்ற பிரச்னையைத் தீர்ப்பது ஸ்ரீலங்கா அரசினுடையது என்றும், தமிழ்
      தேசிய ராணுவம் என்ற பெயரில் வலுவான ராணுவக் கட்டமைப்பை அமைதிப்படை
      ஏற்படுத்துவதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், புலிகள் ஆயுதக்
      கையளிப்புக்கு முன்னதாக அமைதிப்படையும், அதன் ஆதரவு பெற்ற குழுக்களும்
      புலிகளுக்கெதிரான வன்செயலைக் கைவிடுவார்கள் என இந்திய அரசு உத்தரவாதம் அளிக்க
      வேண்டும் என்றும் அரசுத் தரப்பு மூலம் இந்தியாவுக்கு தெரிவிக்க வேண்டும்
      எனவும் வலியுறுத்தினார்கள்.
      பிரமேதாசா விடுதலைப் புலிகளின் கருத்துகளை ஏற்று, தனது அடுத்த கடிதத்தில்
      அவற்றை எதிரொலித்தார். இதற்கு தில்லியில் இருந்து (ஜூலை 11, 1989) வந்த
      கடிதத்தில், பல்வேறு புகார்களைக் கூறியதுடன் "அமைதிப்படை வெளியேற்றம்
      குறித்து பேசுவதானால் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஒரு அட்டவணை
      தயாரிக்கலாம்' என்று தெரிவித்த அக்கடிதம், "அரசுத் தலைவர்களிடையே நம்பிக்கை
      அடிப்படையில் நடைபெறும் அதிகாரப்பூர்வ கடிதங்கள் ஒழுக்க நடைமுறை விதிகளை மீறி
      அவை பகிரங்கப்படுத்தும் செயலுக்கும்' பிரேமதாசா மீது நேரடிக் கண்டனம்
      தெரிவித்தது (சுதந்திர வேட்கை: அடேல் பாலசிங்கம்-பக்.321). இந்தப் பதிலால்
      கோபமுற்ற பிரேமதாசா, முப்படைகளின் தலைவர் மட்டுமன்றி, இலங்கையில் உள்ள
      அமைதிப் படைக்கும் தானே தலைவர் என்ற முறையில் இந்திய அமைதிப்படை ஜூலைக்குள்
      கட்டாயம் வெளியேற வேண்டும் அல்லது படை முகாமுக்குள் முடங்க வேண்டும் என்ற
      சட்டபூர்வ உத்தரவை அமைதிப்படைத் தளபதி லெப். ஜெனரல் அமர்ஜித் சிங்
      கல்கத்துக்கு அனுப்பினார். அவரோ, "ஸ்ரீலங்காப் படைகள் தங்களது பாசறையை விட்டு
      வெளியேறினால், அவர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட எங்களை
      நிர்ப்பந்திப்பவர்கள் ஆவார்கள்' என்று எச்சரித்தார் (மேற்கண்ட மேற்கோள்படி).
      அமிர்தலிங்கம் முளாயைச் சேர்ந்த இவர், எளிமையானவர். 21 ஆண்டுகள் நாடாளுமன்ற
      உறுப்பினராக இருந்த காலத்தில் ஆறு ஆண்டுகள் நாடாளுமன்ற எதிர்க்கட்சித்
      தலைவராகவும் இருந்தார்.
      கொழும்பில் அமிர்தலிங்கம், மாவை சேனாதிராஜா, யோகேஸ்வரன், சிவசிதம்பரம்
      ஆகியோர் ஒரே அடுக்குமாடி வீட்டில் கீழும் மேலுமான குடியிருப்புகளில் வசித்து
      வந்தனர். யோகேஸ்வரனிடமிருந்து அவரது பணியாள் மூலமாக வந்த துண்டுச் சீட்டைப்
      பார்த்து மேலே குடியிருந்த யோகேஸ்வரன் வீட்டுக்குப் போனார் அமிர்தலிங்கம்.
      அவர் மேலே சென்ற சிறிது நேரத்தில் வெடிச் சத்தம் கேட்டு அமிர்தலிங்கம் மனைவி
      மங்கையற்கரசி மேலே சென்று பார்க்க யோகேஸ்வரன் மார்பில் குண்டு துளைத்து, ரத்த
      வெள்ளத்தில் கிடந்தார்; அமிர்தலிங்கம் தான் அமர்ந்திருந்த இடத்திலேயே தலையைத்
      தொங்கவிட்டபடியே சாய்ந்து கிடந்தார். பயந்து போன மங்கையற்கரசி அவரது தலையைத்
      தூக்கவும் அவர் இறந்ததைக் கண்டார். சுவர் மூலையில் சிவசிதம்பரம் காயங்களுடன்
      கிடந்தார் (13 ஜூலை 1989) என்று "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூலில்
      தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் இறந்த விதம் குறித்து, சி.புஷ்பராஜா
      குறிப்பிட்டுள்ளார். இக்கொலை முயற்சியில் ஈடுபட்ட விசு, அலோசியஸ், சிவகுமார்
      மூவரும் அந்த வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் மெய்க்காவலர்களின் தாக்குதலில்
      இறந்து கிடந்தார்கள். இந்த மரணத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
      ஆனால் சுட வந்தவர்கள் புலிகள் இயக்கத்தில் முன்னாள் பொறுப்பாளர்களாக
      இருந்தவர்கள் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், இந்திய அரசின்
      ராஜதந்திரியான முக்த் துபேயை, அமிர்தலிங்கம் இந்தியத் தூதுவரகத்தில் ஜூலை
      12-இல் சந்தித்ததாகவும், அடுத்த நாள் பி.ஜி. தேஷ்முக்கை சந்திக்க
      இருந்ததாகவும் ஒருதலைப்பட்சமான தமிழீழப் பிரகடன அறிவிப்பு பற்றிய வதந்தி
      நிலவிய நேரம் அது என்றும், தமிழ் மக்களுக்கு விடிவு விடுதலைக் கூட்டணி மூலம்
      ஏற்படும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் கூறியதாகவும் மாவை.சேனாதி ராஜாவின்
      குறிப்பை வைத்தும் ஒரு தகவலை சி.புஷ்பராஜா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
      அதேநேரம் இன்னொரு வாதத்தையும், அவர் அந்நூலில் பதிவு செய்துள்ளார். அதாவது
      அதிபர் பிரேமதாசா இலங்கைக்கு இந்தியா மூலமான தீர்வு தேவையில்லை என்று முடிவு
      எடுத்த நிலையில், தாம் விடுதலைப் புலிகளுடன் நட்பு கொண்டு பேச்சுவார்த்தையில்
      ஈடுபட்டு வரும் வேளையில், இந்தியப் பிரதிநிதிகள் அமிர்தலிங்கத்தை அழைத்துப்
      பேசியதை விரும்பாமல் அவரே கூட இதுபோன்ற கொலைகளை ஆட்களை ஏவி
      செய்திருக்கலாமென்றும் கூறியிருக்கிறார்.
      இதற்கு மேலும் ஒரு தகவலைக் கூறியுள்ளார் சி.புஷ்பராஜா, "ஒருமுறை அடையாறில்
      இருந்த புலிகளின் அலுவலகம் சென்று, பிரபாகரனுடன் பேசிவிட்டு தனது காரில்
      அமிர்தலிங்கம் ஏறும்போது, கார்க் கதவைச் சாத்திவிட்ட பிரபாகரன், ""அண்ணா,
      நீங்கள் கவனம்; உங்களைக் கொல்ல மற்ற இயக்கத்தவர்கள் முனையலாம்'' என்று
      எச்சரிக்கை செய்தார் என 1993-ஆம் ஆண்டு என்னுடன் பேசியபோது மங்கையற்கரசி
      அமிர்தலிங்கம் சொன்னார் என்றும் (பக்.509-510) கூறியிருக்கிறார். இவ்வகையான
      வாதங்களுக்குக் காரணமே எந்த இயக்கமும் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைக்குப்
      பொறுப்பு ஏற்காததுதான்.
      137: பிரபாகரன் கொலையுண்டதாகப் புரளி!         அமிர்தலிங்கத்தின் கொலையை இந்திய அமைதிப் படை பிரசார நோக்கிற்காகப்
      பயன்படுத்திக் கொண்டது. அமைதிப் படை இருக்கும்போதே கொலை நிகழ்கிறது என்றால்,
      அமைதிப் படை இல்லாத நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று
      கூறியது.ஆனால் உண்மையில் இந்தக் கொலை என்பது கொழும்பு நகரில், இலங்கையின்
      தலைநகரில் நடந்திருக்கிறது. அமைதிப் படை இருப்பதோ வடக்கு-கிழக்கில்.
      இருந்தாலும் மேற்கண்ட வாதம் முன்னெடுக்கப்பட்டது. புலிகளை இந்தக் கொலையில்
      சம்பந்தப்படுத்தியதன் நோக்கம் என்னவென்றால், திம்பு பேச்சின் மீது வைத்த
      அடிப்படைக் கொள்கைகளைப் புறக்கணித்தது குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலில்
      பங்கு பெறுவது குறித்தும் புலிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியை
      விமர்சித்திருந்த காரணத்தால், கொலையில் தொடர்பிருக்கலாம் என்று
வாதிடப்பட்டது.
      ஆனால் லண்டனில் இருந்த புலிகளின் அலுவலகம், "அமிர்தலிங்கம் கொலையில்
      தங்களுக்குத் தொடர்பில்லை' என்று மறுத்தது. அமிர்தலிங்கம் கொலை நடந்த அதே
      வாரத்தில் "பிளாட்' இயக்கத் தலைவர் முகுந்தன் என்கிற உமா மகேசுவரனும்
      கொழும்பில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு கட்சியின் உட்பூசல்தான்
      காரணம் என்று சொல்லப்பட்டாலும், அவர் இந்திய உளவுப் பிரிவையும் அதன்
      செயல்பாட்டையும் "டைம்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் மூலம்
      அம்பலப்படுத்தியிருந்த நேரத்தில் அவரது கொலை நடந்ததால், பல்வேறு யூகச்
      செய்திகள் வெளியாயின. பிரேமதாசாவின் ஜூலை கெடுவைத் தொடர்ந்து, அமைதிப் படை
      முல்லைத் தீவுப் பகுதிகளில் ஏராளமான துருப்புகளை இறக்கி, கடுமையாகத்
      தாக்கியது. விடுதலைப் புலிகள் 1989 ஆகஸ்ட் மாதம் 9 மற்றும் 21 ஆகிய தேதிகளில்
      வெளியிட்ட மூன்று அறிக்கைகளின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிப்
      பொதுமக்கள் அமைதிப் படையினால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
      அமைதிப் படையினர் வைத்த கண்ணி வெடியால் மதியாமதி, ஆனந்தப் புளியங்குளம்
      வீதியில் உள்ள நொச்சிகுளத்தில் ஆறு பேர் இறந்தனர் என்றும்,
      கிழக்கு மாகாணத்தில் அகதிகள் முகாம்களிலிருந்து திரும்பவும் தத்தமது
      இடங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் மீன்பிடித் தடையாலும், விவசாயம் செய்ய
      ஏற்பட்ட தடையாலும் எதுவும் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர் என்றும்
      தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அகதிகளாக இருந்தபோது கொடுக்கப்பட்ட
      நிவாரணமும் நிறுத்தப்பட்டுவிட்டது. தவிர்க்கமுடியாமல் பயிர் செய்தால், தடையை
      மீறி செய்யப்பட்ட விவசாயம் என்று கூறி அவை எரிக்கப்படுகின்றன. திருகோணமலை
      மாவட்டம் கிண்ணியா, ஆத்தியடி, மணற்காடு, பச்சையடிக்கல், கல்லடைப்பு,
      சுங்கான்குழி, வல்வெட்டுவான், சின்னத்தீவு, பாலத்தடி, மதிரடியச்சேனை ஆகிய
      கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட விவசாயப் பயிர்கள் இவ்வாறு எரிக்கப்பட்டு
      அழிக்கப்பட்டன. உள்ளூர்க் கடைகளையும் மூடும்படி உத்தரவிடப்பட்டுவிட்டது.
      காரணம் குறிப்பிட்ட அளவுதான் பொருட்கள் வாங்க வேண்டும் என்று
      உத்தரவிடப்பட்டிருந்தது. அதிகப்படியான பொருட்கள் வாங்கினால், அவை
      மறைந்திருக்கும் கொரில்லாப் படையினருக்குச் செல்லும் என்று தவறாகக்
      கருதப்பட்டது. அதிகப்படியான பொருள்கள் தேவையென்றால் ஈபிஆர்எல்எஃப்,
      ஈஎன்டிஎல்எஃப், டெலோ இயக்க அலுவலகங்களில் அனுமதிச்சீட்டுப் பெற வேண்டும் என்ற
      நெருக்கடியும் கொடுக்கப்பட்டது. வடக்கு-கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர்
      வரதராஜ பெருமாள், இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி அரசு நடக்கத் தவறினால் தனி
      அரசான ஈழப் பிரகடனத்தைச் செய்யப் போவதாக அறிவித்தார். அறிக்கையில் அவர்
      மேலும் கூறுகையில், "அமைதிப் படையோடு, தமிழ் தேசிய ராணுவமும் விடுதலைப்
      புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும்' என்றும் கூறினார்.
      விடுதலைப் புலிகள் மரபு ரீதியான தாக்குதலின்றி கொரில்லாத் தாக்குதலில்
      ஈடுபட்ட போதிலும், அவர்களுக்கு உடனடியாக ஆயுதங்கள் தேவைப்பட்டன. இந்த ஆயுதத்
      தேவைக்காகவே அவர்கள் அமைதிப் படை இலக்குகளைத் தாக்கி அழித்து, ஆயுதங்களைக்
      கைப்பற்றிச் சென்றார்கள். ஆயுதமின்றி புலிகள் மறைவிடங்களில் பதுங்கினார்கள்.
      இந்த நிலையில் அதிரடிச் செய்தியாக விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்
      மாத்தையாவினால் கொலை செய்யப்பட்டார் என்று செய்திகள் வெளியாயின. இந்தத் தகவல்
      தமிழகத்தின் பாரம்பரியப் பத்திரிகையிலேயே முக்கியச் செய்தியாக வெளியாயிற்று.
      இந்தச் செய்தியை வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் உறுதி
      செய்ததாகவும் அப்பத்திரிகை மேற்கோள் காட்டியது. லெப். ஜெனரல் தீபிந்தர் சிங்
      ஓய்வு பெற்றதும் அமைதிப் படையின் பொறுப்பை ஏற்ற அமர்ஜித் சிங் கல்கத் என்கிற
      ஏ.எஸ். கல்கத் ஓர் அரசியல்வாதியைப் போன்று அறிக்கைகள் விடுபவர் என்று
      விமர்சிக்கப்பட்டவர். இவருக்குச் சரியான இணையாக பார்த்தசாரதி என்கிற மக்கள்
      தொடர்பு அதிகாரி. இவர், சென்னை நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களை அழைத்து
      விருந்தளித்துக் கொண்டே இருப்பார். இவ்வாறான சென்னைப் பத்திரிகையாளர்
      சந்திப்பு ஒன்றில், "கல்கத்- நீங்கள் இதுவரை சுட்டு வீழ்த்திய புலிகளின்
      எண்ணிக்கை பல ஆயிரம் வருகிறதே; புலிகளிடமிருந்து கைப்பற்றியதாக நீங்கள்
      கூறும் ஆயுதங்களைக் கணக்கிட்டால் அது சிங்களப் படையின் ஆயுதத்தைவிட அதிகம்
      இருக்கும் போலிருக்கிறதே' என்று செய்தியாளர்களில் ஒருவர் கேட்டதும், அவர்
      வாயடைத்துப் போனார். (பழ. நெடுமாறன் தனது நூலில்)
      அதேபோன்று "பிரபாகரனை வளைத்து விட்டோம் இனி தப்ப முடியாது' என்று
      பேட்டியளித்ததும், இந்தியப் பத்திரிகைகள் மட்டுமன்றி, உலகப் பத்திரிகைகளும்
      இந்தச் செய்தியை பெரிய அளவில் வெளியிட்டன. ஆனால், அப்படியொரு நிகழ்ச்சி
      நடைபெறவே இல்லை. இப்பொழுதும் கூட பிரபாகரன் கொல்லப்பட்டதான செய்தியும்,
      கல்கத் பரப்பிய செய்தியாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளே அதிகம் இருந்தன.
      ஆனால், இவ்வகைப் பிரசாரத்தைப் புறக்கணித்துவிடவும் முடியாது என்று அப்போது
      கூறப்பட்டது. காரணம், இதுபோன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதில்
      பிரபாகரன் தனக்கேயுரிய சாதுர்ய நடவடிக்கைகளால் தப்பியிருக்கலாம் என்பதும்,
      வரலாற்றைக் கூர்ந்து நோக்குகிறவர்களின் கருத்தாக இருந்தது. அமிர்தலிங்கம்,
      யோகேஸ்வரன் கொலைகள், முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரன் கொலை, மாத்தையாவினால்
      பிரபாகரன் கொலையானதாக வந்த பத்திரிகைச் செய்தி- ஆகிய இம் மூன்றும் ஒரே
      மூளையில் உதித்தவையாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் அப்போது
      முன்வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளினதும், பிரபாகரனினதுமான தேவை எவ்வாறு
      உணரப்பட்டது என்ற கேள்விக்கு "முறிந்தபனை' நூலின் 517 மற்றும் 518-ஆம்
      பக்கத்தில் விடை உள்ளது. அவை வருமாறு:
      ""கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் அரசியல் அரங்கில் புலிகளே பிரதான
      பாத்திரத்தை வகித்து வந்திருக்கிறார்கள். தமிழ் பிரதேசங்களில் இவர்கள்
      நடத்திய யுத்தம் உலகின் நாலாவது பெரிய ராணுவமும் அதன் உள்ளூர் சகபாடிகளும்
      சேர்ந்து நடத்திய கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கைகளும், ஈவிரக்கமற்ற
      படுகொலைகளும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் கசப்பையும், வேதனையையும்
      பெருகிடச் செய்து, அதுவே ஆட்கள் தொடர்ந்து போய் புலிகளிடம் சேர்வதற்கான
      மூலாதாரமாகத் திகழ்ந்தது. புலிகளின் யுத்த தந்திரோபாயங்களில் மக்கள் பிரமைகள்
      கலைந்தவர்களாய் இருந்தாலும் தமிழ் லட்சியத்தின் காவலர்களாகவே புலிகள்
      பெரிதும் இனங் காணப்பட்டிருந்தனர். இந்திய அமைதிப் படை குறித்து நடைமுறை
      சாத்தியமான சிறந்த நிலைப்பாட்டை புலிகள் கைக்கொண்டிருக்க வேண்டும் என்று
      மக்கள் கருதியிருந்ததோடு, ஒருங்கிணைந்த வட, கிழக்கு மாகாணங்களில்
      அமையவிருக்கும் மாகாண சபையிலும் புலிகளே தலைவர்களாக வருவதையும் கண்டு மகிழ
      மக்கள் விரும்பியிருந்தனர் என்று கூறுவதும் சரியானதேயாகும்'' என்று கூறுகிறது
      அந்த நூல். மேலும் அந்நூலில், "சமூகத்தின் ஒரு பகுதியினர் புலிகள் மீது
      நம்பிக்கை வைத்து, ஒத்துழைப்பும் நல்கிக் கொண்டிருந்தனர்' என்றும்
      குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புலிகளின் தலைவர் இறந்ததாக வந்த
      பத்திரிகைச் செய்தி, மக்களைத் திகைப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது

No comments:

Post a Comment