Sunday, November 7, 2010

116 - எழுதப்படாத ஒப்பந்தத்தின் விளைவுகள், 117: அமைதிப்படையின் ஷெல் தாக்குதல்

 116 - எழுதப்படாத ஒப்பந்தத்தின் விளைவுகள்இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாவதற்கு முந்தின நாள் (28.7.1987) நடைபெற்ற
      ராஜீவ்-பிரபாகரன் சந்திப்பில் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று உருவானதாக
      பின்னாளில் பேசப்பட்டது; எழுதப்பட்டது. அதுகுறித்து இங்கு அறிவது
      அவசியமாகிறது. வடக்கு, கிழக்கு இடைக்கால அரசொன்றை அமைப்பதுடன், அந்த அரசில்
      விடுதலைப் புலிகளே பெரும்பான்மை வகிப்பார்கள் என்று ராஜீவ் உறுதியளித்ததுடன்,
      அதில் பிற அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று அவர்
      கூறியபோது பிரபாகரன் மறுத்ததாகவும், பின்னர் ஈரோஸ், தமிழர் ஐக்கிய விடுதலைக்
      கூட்டணி ஆகியவற்றிற்கு பிரதிநிதித்துவம் அளிக்க சம்மதித்தார் என்றும்
      பாலசிங்கம் தனது "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால ஆட்சி, அதன்
      நிர்வாக அமைப்பு, அதன் அதிகாரம், செயல்பாடு, நிதி ஆதாரம் ஆகியவை தொடர்பாக
      ஜெயவர்த்தனாவுடன் பேசித் தீர்ப்பது என்றும் அப்போது உறுதியளிக்கப்பட்டதாகவும்
      பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். அதுவரை தமிழர் பகுதியில் சிங்களக்
      குடியேற்றமோ புதிதாகக் காவல் நிலையமோ அமையக் கூடாது என்றும் பிரபாகரன்
      வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் அதுநாள் வரை
      வரிவசூலிப்பில் ஈடுபட்டதாகவும், ஒப்பந்தத்திற்குப் பிறகு அந்தச் செயல் தடை
      செய்யப்படும் என்று கூறியதுடன், ஆயுதம் கையளிப்பு உள்ளிட்ட இறுதிக்கட்ட
      பிரச்னைக்கு ராஜீவ் வந்தார். அதன் விவரம் பாலசிங்கம் எழுதிய "விடுதலை' நூலில்
      வெளிவந்தபடி இங்கே தரப்படுகிறது:
      ""யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடமிருந்து கட்டாய வரி வசூலிப்பு செய்வதாக
      ஜெயவர்த்தனா அரசு புலிகள் மீது குற்றம் சுமத்துகிறது. வரி வசூலிப்பை நிறுத்த
      முடியாதா எனக் கேட்டார் ராஜீவ் காந்தி. அந்த வரிப்பணம் எமது இயக்கத்தின்
      நிர்வாகச் செலவுக்கே பயன்படுத்தப்படுகின்றது. அந்தத் தொகையை இந்திய அரசு
      எமக்குத் தருவதானால் வரி அறவிடுவதை நிறுத்தலாம் என்றார் பிரபாகரன். ""மாதம்
      எவ்வளவு பணத்தை வரியாகப் பெறுகின்றீர்கள்'' என ராஜீவ் கேட்க, ""இலங்கை
      நாணயப்படி ஒரு கோடி ரூபாய் வரை திரட்டுகிறோம்'' என்றார் பிரபாகரன்.
      ""அப்படியென்றால் இந்திய நாணயப்படி ஐம்பது லட்சம் ரூபாய் வரை வரும். அந்தப்
      பணத்தை நான் கொடுக்கிறேன்'' என்றார் ராஜீவ். இறுதியாக ஆயுதக் கையளிப்பு
      விவகாரம் எழுந்தது. ""ஆயுதங்கள் முழுவதையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை.
      நல்லெண்ண சமிக்ஞையாக சிறு தொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும்.
      பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பாக இந்திய அமைதிப் படை
      வடகிழக்கில் செயல்படும். சிங்கள ஆயுதப் படைகளுடன் போர் நிறுத்தம் தொடர்ந்து
      இருக்கும். இந்தச் சூழ்நிலையில் உங்களுக்குப் போராயுதங்கள் தேவைப்படாது
      அல்லவா?'' என்றார் இந்தியப் பிரதமர்.
      பிரபாகரன் பதிலளிக்கவில்லை. ஆழமாக சிந்தித்தபடி இருந்தார். திடீரெனக்
      குறுக்கிட்டார் பண்ருட்டியார். ""எதற்காக யோசிக்க வேண்டும்? இந்தியா கொடுத்த
      ஆயுதங்களில் பழைய, பாவிக்க முடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை
      கொடுத்தால் போச்சு'' என்றார். ""இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எல்லாமே
      அப்படித்தான்'' என்று கிண்டலாக பதிலளித்தார் பிரபாகரன்.
      ""பரவாயில்லையே, அதில் சிலவற்றைக் கொடுங்கள். தேவை ஏற்படும்பொழுது இந்திய
      அரசு புதிய ஆயுதங்களை தரும் அல்லவா?'' என்றார் அமைச்சர் பண்ருட்டியார். தான்
      கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராஜீவிடம் சொன்னார். அதை ஆமோதிப்பது
      போலப் பிரதமரும் தலையசைத்தார். அப்பொழுது அதிகாலை (28.7.1987) இரண்டு மணி
      இருக்கும். அன்று (29.7.1987) காலை ஒன்பது மணியளவில் புது தில்லியிலிருந்து
      கொழும்பு புறப்பட இருந்தார் ராஜீவ் காந்தி. பிற்பகல் மூன்று மணிக்கு
      இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாக இருந்தது. புலிகளின் தலைவர் பிரபாகருடன்
      ஏதோ ஒரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்
      ராஜீவ். பிரபாகரனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. அவரது முகத்தில் அது
      தெளிவாகத் தெரிந்தது. தூக்கமின்மையால் எல்லோருமே சோர்ந்து போய் இருந்தோம்.
      கூட்டம் முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டது.
      அப்பொழுது நான் அமைச்சர் பண்ருட்டியிடம் கேட்டேன். ""ராஜீவ்-பிரபா ரகசிய
      ஒப்பந்தம் எனப் பல விஷயங்களை கதைத்தோம். பிரதம மந்திரியும் பல
      வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார். இதை எல்லாம் சுருக்கமாக எழுத்தில் இட்டு,
      அவரிடமிருந்து கைச்சாத்துப் பெற்றால் என்ன?'' என்றேன். பண்ருட்டியார் சிறிது
      நேரம் யோசித்தார். ""இந்த ரகசிய உடன்பாட்டில் சர்ச்சைக்குரிய பல விஷயங்கள்
      இருக்கின்றன அல்லவா? பண விவகாரங்கள் இருக்கின்றன. ஆயுதக் கையளிப்புப் பிரச்னை
      இருக்கிறது. இதெல்லாம் அம்பலத்திற்கு வந்தால் இந்தியாவிலும் இலங்கையிலும்
      பெரும் அரசியல் சூறாவளியே ஏற்படும். உங்களுக்கு பிரதமரிடம்
      நம்பிக்கையில்லையா? இது ஒரு எங்ய்ற்ப்ங்ம்ங்ய் அஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற் இரு பெரும்
      மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே?'' என்றார் அமைச்சர். ராஜீவ்
      காந்திக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.
      ""நீங்கள் எதற்கும் கவலை கொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான்
      நிறைவேற்றுவேன். அமைச்சர் சொல்வது போன்று இது ஒரு எழுதப்படாத ஒப்பந்தமாக
      இருக்கட்டும்'' என்றார் ராஜீவ் காந்தி. இறுதிக் கட்டத்தில் நான் (பாலசிங்கம்)
      அவருடன் முரண்பட விரும்பவில்லை. முடிவாக எமது தடுப்புக் காவல் பற்றி
      முறையிட்டோம். பிரபாகரன் மீதான தடுப்புக் காவலை அகற்றி, அவரைத் தமிழீழம்
      அனுப்புவதற்கு உடனே ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்தார் ராஜீவ். ராஜீவ்
      காந்தியின் இல்லத்திலிருந்து அசோகா விடுதிக்கு நாம் போய்ச் சேர அதிகாலை
      மூன்று மணியாகிவிட்டது. ""அண்ணா, இருந்து பாருங்கோ, இந்த ரகசிய ஒப்பந்தமும்
      வாக்குறுதிகளும் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஒரு ஏமாற்று
      வித்தை'' என்று விரக்தியோடு கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தார் பிரபாகரன்.
      எனது அறைக்குள் சென்றபோது, விழித்தபடி காத்திருந்த திலீபன் விடியும் வரை
      என்னைத் தூங்கவிடவில்லை. ராஜீவ்-பிரபா சந்திப்பு பற்றியும், இருவருக்கும்
      மத்தியில் செய்து கொள்ளப்பட்ட ரகசிய ஒப்பந்தம் பற்றியும் விவரமாக
      திலீபனுக்குச் சொன்னேன். மிகவும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான். ""அண்ணன்
      என்ன சொல்கிறார்'' என்று கேட்டான். ""பிரபாவுக்கு திருப்தி இல்லை.
      நம்பிக்கையுமில்லை. இந்த வாக்குறுதிகள் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை என்று
      உறுதியாகச் சொல்கிறார்'' என்றேன். ஆழமாக சிந்தித்தபடியிருந்த திலீபன்,
      ""அண்ணன் சொல்வதுதான் நடக்கும்'' என்றான். உண்மையில் அப்படியேதான் நடந்தது.
      ராஜீவ்-பிரபா ரகசிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால நிர்வாக அரசும்
      உருவாக்கப்படவில்லை'' இவ்வாறு அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். இந்நூல்
      2000-ஆம் ஆண்டில் நூலாகும் வரை விடுதலைப் புலிகள் தரப்பில் வெளியிடப்படாத
      ரகசியமாகவே இது இருந்தது.
      இதற்கு முன்பாக லண்டனில் இருந்து வெளிவரும் லண்டன் அப்சர்வர் ஏப்ரல். 30,
      1989ல் எழுதப்படாத ஒப்பந்தம் குறித்து வெளியிட்டுள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
      இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராஜா- தனது, ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்
      என்ற நூலில் தெரிவித்திருக்கிறார். பின்நாளில் லெப். ஜெனரல் தீபிந்தர் சிங்
      ஈழ மண்ணில் அமைதிப் படைப் பணிக்காக சென்று திரும்பியது குறித்த தனது
      அனுபவங்களை ‘பட்ங் ஐடஓஊ ஐச நதஐ கஅசஓஅ’ எனும் தலைப்பில் திரிசூல் பப்ளிகேஷன்ஸ்
      மூலமாக வெளியிட்டார். அந்த நூலின் பக். 66-67-இல் இப்படியொரு எழுதப்படாத
      ஒப்பந்தம் இருப்பதாக புலிகள் தெரிவித்து அதனை எழுத்துமூலமாக கேட்கிறார்கள்
      என்றும் மேலிடத்துக்குத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். "முறிந்த பனை'
      என்னும் நூலில் ராஜீவ் காந்தியும், பண்ருட்டி ராமச்சந்திரனும் தங்களது
      எல்லைகளை மீறி இவ்வாறான வாக்குறுதியை அளித்திருக்கமுடியாது என்று வாதிட்ட
      நிலையில் அடுத்த பத்தியிலேயே அந்நூலின் வாசகம் முரண்பாட்டைக்
      கொண்டிருக்கிறது. எழுதப்படாத ஒப்பந்தம் குறித்த செய்திகள் அடங்கிய அறிக்கை
      முதன்முதலாக சண்டே லண்டன் அப்சர்வரில் (1988, ஏப்ரல் 3-ஆம் தேதி) வெளிவந்தது.
      கொழும்பிலிருந்து அதன் சிறப்புச் செய்தியாளரால் எழுதப்பட்ட அக்கட்டுரை,
      தீட்சித்தையே மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருந்ததாகவும் கூறுகிறது. இந்தச்
      செய்திக் கட்டுரையில், பாலசிங்கம் சொன்னதைவிடவும் கூடுதலான தகவல்கள் உண்டு.
      இடைக்கால நிர்வாக சபையின் நிதியாதாரத்துக்கு இந்தியா பெருமதிப்பிலான தொகையை
      வழங்க இருந்ததாகவும் கூட அது கூறியது. இந்தத் தொகை வடக்கு கிழக்குப்
      பகுதிகளின் மறு சீரமைப்புக்காகப் பயன்படுத்தப்பட இருந்தது என்றும்
      கூறப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் போராளிகளைப் பயன்படுத்தி, ஒரு தமிழ்
      போலீஸ் படை உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்ததாகவும் அதில் தகவகள் உண்டு.
      இவைகளையெல்லாம் கூறிவிட்டு, "முறிந்த பனை' மேலும் சில கேள்விகளையும்
      எழுப்பியுள்ளது. அந்தக் கேள்விகளுக்கான விடைகளை விடுதலைப் புலிகள் தரப்பில்
      அளிக்கத் தேவையில்லாத அளவுக்கு, இந்திய அமைதிப் படையின் தளபதிகளாக இருந்த
      தீபிந்தர் சிங் மற்றும் ஹர்கிரத் சிங் எழுதிய நூல்களில் ஏராளமாக உள்ளன. இந்த
      எழுதப்படாத ஒப்பந்தத்தில் கண்டுள்ளவாறு விடுதலைப் புலிகள் விஷயத்தில் எதுவும்
      நடக்காத காரணத்தால்தான் திலீபன் உண்ணாவிரதமும் அதனைத் தொடர்ந்து அவரது
      மரணமும் நடைபெற்றது. திலீபனின் 5 அம்சக் கோரிக்கைகளில் கூட இந்த விஷயம்
      வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
      117: அமைதிப்படையின் ஷெல் தாக்குதல்         என்ன பிழை நடந்தது? எல்லாரது வாழ்வின் பெறுமதியை மதிப்பிழக்கச்
      செய்வதற்கு' - என்று முறிந்தபனையில் ஒரு வாசகம் உள்ளது. வேதனையின் விளிம்பில்
      எழுந்த வாசகம் இது. இன முரண்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள் தோன்றும்போது
      உலகெங்கும் இவ்வாறு, குரல் எழுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
      இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்திய
      அமைதிப் படையின் செயல்பாடுகள் இரண்டே மாதங்களில், அதாவது, அக்டோபர் இரண்டாவது
      வாரத்தில் எல்லாமே தலைகீழாகி விட்டது. காரணம் என்ன? "பெüத்த சிங்களரும்
      சிறுபான்மையினரும்' என்னும் ஆய்வு நூலில் சந்தியா பிள்ளை கீதபொன்கலன் இச்
      சூழ்நிலை குறித்து எழுதியுள்ளார். அவை வருமாறு: ""புனர்வாழ்வுக்கென
      திட்டமிட்டு செயலாற்ற முற்படும்போது இவ்விதப் போக்குகளின் தன்மைகளை உணர்ந்த
      நிலையிலேயே நாம் இயங்கத் தயாராக இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமாக
      இயங்குவதற்கு முன்பாக துன்பத்தின் எல்லைக்கு எம்மைக் கொண்டு சேர்த்த
      காரணங்களை ஆராய்ந்து அவற்றுக்கு உறுதுணையாக நின்ற அமைப்பு முறைகளை நீக்கிக்
      கொள்ள வேண்டும்.
      இதனை மறந்த நிலையில் எவ்வித நல்ல நோக்கத்துடனும் ஆரம்பிக்கும் புனர்வாழ்வு
      செயல்திட்டமும் நன்மைகளை விளைவிக்க மாட்டாது. உறுதியற்ற நிலை மட்டுமே
      நிலவும். பெறும் நன்மைகளும் தற்காலிகத் தன்மையுடையனவாக மட்டுமே இருக்கும்.
      பூகம்பத்தின் அடிமட்டத்தை ஒத்ததாக இருக்கும். விரைவில் பொங்கியெழுந்து,
      திட்டமிட்டிருந்தவை எல்லாம் அதன் கொதிப்பிழம்பில் அழிந்து போய்விடும்.
      இயற்கையில் நாம் காணும் அழிவல்ல; மனிதரால் கடைப்பிடித்த கொள்கைகளின்
      விளைவாகவே அவை ஏற்படுகின்றன'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான்
      யதார்த்தம்.
      விடுதலைப் புலிகள் ஆதரவுப் பத்திரிகைகளான ஈழமுரசு, முரசொலி ஆகியவற்றின்
      அலுவலகங்களைத் தாக்கி, அதன் செய்தியாளர்களை, அச்சக ஊழியர்களைக் கைது செய்தது,
      அவ்வியக்கத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கை. எனவே, விடுதலைப் புலிகளின் எதிர்
      நடவடிக்கையை எதிர்நோக்கி, அமைதிப் படை காத்திருந்தது போன்று இருந்தது.
      மழைக்காலம் தொடங்கும் நேரம், நவராத்திரி கொண்டாடும் நேரம். இந்திய
      அமைதிப்படைத் திடீர் தாக்குதலைத் தொடுத்ததற்கு ஜெயவர்த்தனா கொடுத்த
      நெருக்கடியே முதல் காரணமாகிறது. இத் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதா,
      இல்லை... ஆயுதங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டு நிபந்தனையற்ற சரணாகதியடைவதா
      என இவ்விரு கேள்விகளே போராளிகளிடையே இருந்தது. இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது
      நூலில் கூறுகையில், ""இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குழம்பினார்கள். மாபெரும்
      இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிடுவதா? நம்மால் தாக்குப்பிடிக்க முடியுமா
      என்றும், இப்போது ஆயுதங்களை கொடுத்துவிட்டு, சமரசம் செய்துகொள்வது என்றும்,
      பின்னர் தகுந்த நேரத்தில் போராட்டத்தைத் தொடங்குவது என்றும் சிலர் ஆலோசனை
      கூறியதுண்டு. ஆனால் போராடுவது என்று "தம்பி' முடிவெடுத்தார். இதற்கான
      காரணத்தையும் பிரபாகரன் பின்நாளில் பேசும்போது தெரிவித்ததான தகவல் ஒன்றையும்
      கூறியுள்ளார். அதில், "இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க எவ்வளவோ முயன்றேன்.
      ஆனால் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய அரசு உதறித் தள்ளியது. இடைக்கால
      அரசமைப்பதில் விட்டுக்கொடுத்தேன். ஆனால் ஜெயவர்த்தனாவுடன் சேர்ந்து கொண்டு
      எங்களை ஏமாற்றவே இந்திய அரசு முயன்றது. இதன் விளைவாக திலீபன், புலேந்திரன்,
      குமரப்பா உள்ளிட்டோரைப் பறிகொடுத்தோம். அவர்கள் நினைத்திருந்தால் இவர்களைக்
      காப்பாற்றியிருக்கலாம்.
      காலத்திற்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் நான் செயல்படுகிறேன். எந்தப்
      பிரச்னையிலும் அர்த்தமற்ற பிடிவாதத்தை ஒருபோதும் கடைபிடித்ததில்லை' என்று
      பிரபாகரன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், விடுதலைப்
      போராளிகள் ஆயுதம் தரித்த நிலையில், அமைதிப் படை முகாம்கள் எதிரே திரண்டனர்.
      என்ன நடக்குமோ என்று மக்கள் அஞ்சினர்; பதை பதைத்தனர். யாழ் கோட்டையின்
      பக்கத்தில் முதல் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. தொடர்ந்து யாழ் நகரின் பல
      பகுதிகளில் "ஷெல்' தாக்குதல்கள் ஆரம்பமாயின. அப்போதும் கூட ஒரு பகுதி மக்கள்
      இந்த "ஷெல்லை' இந்தியப் படை வீசி இருக்காது என்றும், இலங்கைப் படையே
      போட்டிருக்கும் என்றும், ஏனென்றால் புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின்
      மரணத்துக்குப் பதிலடியாக 8 சிங்கள வீரர்களும் கொல்லப்பட்டு, காவல் நிலையம்
      அருகே வீசப்பட்டிருந்ததால், இந்த "ஷெல்' தாக்குதல் நடைபெற்றிருக்கலாம்
      என்றும் மக்கள் எண்ணினர். 1987-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பொதுமக்கள் நிறைந்த
      பகுதிகளில் இலங்கை ராணுவம் குண்டு வீசி தாக்குவதை அப்போது, இந்தியத் தூதரகம்
      கடுமையாகக் கண்டித்தது. இப்போது, அதே வேலையை இந்திய அமைதிப் படை செய்தபோது,
      தூதரகம் ஒரு பார்வையாளரைப் போன்றே நடந்து கொண்டது. அமைதிப் படையையும் அது
      ஆற்றப்போகிற பணியையும் குறித்து, இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு
      எட்டப்படும் என்றே உலக நாடுகள் நினைத்தன. ஆனால் நடந்ததோ வேறு. மக்கள் நிறைந்த
      பகுதியில் "ஷெல்' தாக்குதல் குறித்து கண்டனம் எழுந்தபோது, "நகரத்தை - அது
      எந்த நகரமானாலும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றால்
      "ஷெல்' தாக்குதல் என்பது நடைபெற்றே ஆக வேண்டும் என்று ராணுவத் தரப்பில்
      கூறப்பட்டது.
      யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி விமானத் தாக்குதலை இலங்கை
      நடத்தியபோது, அதைக் கண்டித்த ராஜீவ் காந்தியை, "பஞ்சாபில் என்ன நடந்தது;
      நடக்கிறது என்று இந்தியா திரும்பிப் பார்க்கட்டும்' என்று இலங்கைப்
      பத்திரிகைகள் சுட்டிக்காட்டி, கண்டனம் தெரிவித்தன. அப்போது ராஜீவ் காந்தி,
      "இலங்கை அரசைப் போன்று இந்திய அரசு தன் சொந்த மக்களின் மீது குண்டுமழை
      பொழிந்ததில்லை' என்று கூறியிருந்தார். ஆனால் இன்று என்ன நிலை என்று சர்வதேச
      சமூகம் கேள்வி எழுப்பிற்று. இவ்வகையான தாக்குதல் செய்தியை ரூபவாகினியை
      விடவும், இந்தியத் தொலைக்காட்சி மற்றும் சென்னை வானொலி முந்திக் கொண்டு
      அறிவித்தன. யாழ் கோட்டையிலும், தெல்லிப்பளையிலும் அமைதிப் படையினர் மீது
      புலிகள் தாக்குதல் தொடுத்ததாகவும், தெல்லிப்பளை தாக்குதலில் தாக்குண்டது
      மெட்றாஸ் ரெஜிமெண்ட் என்றும், இதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்தி
      வெளியிடப்பட்டது. ஆனால், ஈழமுரசு, முரசொலி அலுவலகங்கள் குண்டு வைத்து
      தகர்க்கப்பட்டது குறித்தோ, அதன் செய்தியாளர்கள், அச்சக ஊழியர்கள் கைது
      செய்யப்பட்டது குறித்தோ, நிதர்சனம் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையம்
      தாக்கப்பட்டது குறித்தோ, பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்தோ எந்த
      செய்தியும், இந் நிறுவனச் செய்திகளில் இடம்பெறவில்லை.

No comments:

Post a Comment