Sunday, November 7, 2010

160: பிரேமதாசா மரணமும் சந்திரிகாவின் அணுகுமுறையும்!,161: மாத்தையாவுக்கு மரண தண்டனை!!

 160: பிரேமதாசா மரணமும் சந்திரிகாவின் அணுகுமுறையும்!
      20-ம் தேதி வரை, மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்டன.
      கிட்டு கப்பலில் வருவது மாத்தையாவால்தான் இந்திய உளவுப் பிரிவுக்குத்
      தெரியவந்தது என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. எனவே யாழ்ப்பாணத்தில்
      அனுசரிக்கப்பட்ட அஞ்சலிக் கூட்டத்தில் மாத்தையா கலந்துகொள்ளவில்லை.
      இதுகுறித்து அடேல் பாலசிங்கம் எழுதிய நூலில், 1993 ஆம் ஆண்டு மார்ச்
      மாதத்தில் ஒரு நாள், கொக்குவில் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த
      மகேந்திரராசா உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், ஓர் அறையை ஒதுக்கித் தர
      வேண்டும் என்று கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாலசிங்கம் உண்ணாவிரதம்
      இருப்பதன் அவசியம் என்ன என்று கேட்டபோது, அவர், புலிகள் இயக்கத்தின் உப
      தலைவர் பதவியிலிருந்தும் அரசியல் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும் தாம்
      விலக்கப்பட்டது காரணமாக இயக்கத்தின் தலைமைப் பீடத்தின் மீது ஏமாற்றம்
      கொண்டிருப்பதாகத் தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சியான
      விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணியில் மாத்தையா மீது, தனக்கென ஒரு குழுவை
      உருவாக்கி, செயல்படுவதாகவும் தனக்கு விசுவாசமான ஒரு சிலரின் விருப்பத்தை
      மட்டுமே நிறைவேற்றி வருவதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
      இதனையொட்டி, அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்திய உளவுத்
      துறையின் வலையில் சிக்கி, பிரபாகரனை அகற்றும் திட்டத்துக்கு உடன்பட்டு,
      பெரும் சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரியவந்து, அவரும் அவரது சகாக்களும்
      கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி
      கலைக்கப்பட்டு, அதற்குப் பதில் அரசியல் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு, அதில்
      யாழ்த் தளபதியாக இருந்து வந்த சுப. தமிழ்ச்செல்வன் நியமனம் ஆனார்.
      பிரேமதாசாவால் ஒதுக்கப்பட்டிருந்த அதுலத் முதலியும், காமினி திசநாயக்காவும்
      தங்கள் பகையை மறந்து, புதிய கட்சி ஒன்றைத் தொடங்கி மேற்கு மாகாண இடைத்
      தேர்தலில் தீவிரம் காட்டினர். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசிக்
      கொண்டிருந்தபோது, முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரால் லலித் அதுலத் முதலி
      சுட்டுக் கொல்லப்பட்டார் (ஏப்ரல் 23, 1993).
      அதற்கடுத்த பத்து தினத்துக்குள் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட அதிபர்
      பிரேமதாசா, ஆர்மர் வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை தானே
      சரிசெய்கிறேன் என்று இறங்கினார். அந்த ஊர்வல நெருக்கடியிலும் கூட்டத்தில்
      ஊடுருவிய சைக்கிளைத் தடுத்து நிறுத்த காவலர்கள் முயன்றபோது, அந்த சைக்கிள்
      வெடித்து, பிரேமதாசா உள்ளிட்டோர் இறந்தனர். இந்தக் கொலைக்கும் தங்களுக்கும்
      எந்தத் தொடர்பும் இல்லை என்று புலிகள் அறிக்கை வெளியிட்டனர். ஒருவாரத்
      துக்கத்திற்குப் பிறகு மே 7-ல் பிரதமராக இருந்த திங்கரி விஜேதுங்க, தற்காலிக
      அதிபராக ஆறு மாதங்கள் பதவி வகித்தார். கணவர் விஜயகுமாரதுங்க கொலையுண்ட
      பின்னர், லண்டனில் வசித்து வந்த சந்திரிகாவை உடனே நாடு திரும்பும்படி, தாயார்
      ஸ்ரீமாவோ உத்தரவிட்டார். நாடு திரும்பிய சந்திரிகா குமாரதுங்க நாட்டில்
      அமைதியை நிலைநாட்டப் பாடுபடப் போவதாக அறிவித்தார். மக்களும் அதையே
      விரும்பியதால், வலுவான கூட்டணியும் அமைத்து 19.8.1994-ல் பிரதமரானார். பதவி
      பொறுப்பை ஏற்றதும், தமிழர் பகுதிகளில் பிரேமதாசா விதித்த பொருளாதாரத் தடைகளை
      சிறிதளவு தளர்த்தினார். சந்திரிகாவின் இந்த நடவடிக்கையை வரவேற்று, விடுதலைப்
      புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், செப்டம்பர் 2, 1994 அன்று, கையெழுத்திட்ட
      அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் ஒரு பிரதியை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
      மூலம் சந்திரிகாவுக்கும் அனுப்பி வைத்தார். அவ்வறிக்கையில், ""முந்தைய அரசின்
      பொருளாதாரத் தடையை சிறிதளவு நீக்கிக் கொண்டதற்கு எங்களது வரவேற்பைத்
      தெரிவித்துக் கொள்வதுடன், அந்தத் தடையை முழுவதுமாக நீக்குவதற்கும் உத்தரவிட
      வேண்டும். இவ்வகையாக எமது பகுதியில் முற்றிலுமாக அமைதி நிலவ ஏற்படுத்தும்
      முயற்சிகளுக்கு புலிகள் இயக்கம் முழு ஒத்துழைப்பத் தரும். இதன் நல்லெண்ண
      வெளிப்பாடாக போர்க் கைதிகளாக எம்மிடம் உள்ள பத்துப் போலீஸôரை விடுதலை
      செய்யவும் தயாராக இருக்கிறோம். நான்காண்டு பொருளாதாரத் தடையால் அவதியுறும்
      மக்கள் சிங்களர்களைப் போன்று அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும்
      பெறுவதற்குண்டான வழிவகைகளைச் செய்வது, எம்மை மகிழ்ச்சி அடையச் செய்யும்.
      மேலும், நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தால்,
      நாங்கள் போர் நிறுத்தம் செய்யவும் தயாராக இருக்கிறோம்'' என்றும் அதில்
      உறுதியளித்திருந்தார்.
      இந்த அறிக்கை தனக்கு கிடைக்கப் பெற்றதும் மகிழ்ந்த சந்திரிகா குமாரதுங்க,
      செப்டம்பர் 9, 1994 அன்று வே. பிரபாகரனுக்கு பதில் கடிதம் எழுதியதன் மூலம்,
      விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு கடிதம் எழுதிய முதலாவது பிரதமர் என்ற
      பெயரையும் பெற்றார். அந்தக் கடிதத்தில், ""முந்தைய அரசு ஏற்படுத்திய
      பொருளாதாரத் தடையை நீக்கியதை வரவேற்று புலிகள் வெளியிட்ட அறிக்கையைக் கண்டு
      மகிழ்கிறேன். நல்லெண்ணம் மற்றும் நல்லுறவு மேம்பட வேண்டும் என்ற அவாவில்
      பொருளாதாரத் தடையின் சில அம்சங்களை விலக்கி இருக்கிறேன். அதேபோன்று பல
      ஆண்டுகளாக புலிகளின் சிறையில் இருந்த பத்து போலீஸôரை விடுவிக்கும் முடிவும்
      வடக்கு-கிழக்குப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும். யாழ்ப்பாண மக்களுக்கு
      அனைத்துப் பொருள்களும் கிடைக்க வேண்டுமானால், அங்கே பொருள்களைக் கொண்டு வந்து
      இறக்குவதே முக்கியப் பிரச்னையாகும். அதற்கான வழிகளை உடனடியாகக் கண்டறிவோம்.
      மின்சாரம், சாலைகள் மேம்பாடு, விவசாயத்துக்கான நீர்ப்பாசன வசதிகள் போன்றவை
      கிடைக்க உடனே முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு தங்களின் ஒத்துழைப்பும்
      தேவை. பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கும் பிரதிநிதிகள் பெயரை அறிவித்தால்,
      அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபடலாம்'' என்றும் சந்திரிகா
      குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தில் பிரபாகரன் எழுப்பியிருந்த
      முற்றிலுமான பொருளாதாரத் தடையை நீக்குதல் மற்றும் போர்நிறுத்தம் குறித்து
      சந்திரிகா எதுவும் குறிப்பிடாத நிலையிலும், புலிகள் சார்பில்
      பேச்சுவார்த்தையில் ஈடுபட அரசியல் பிரிவுத் துணைத் தலைவர் கரிகாலன், எஸ்.
      இளம்பரிதி, ஏ. ரவி, எஸ். டொமினிக் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். பொருள்கள்
      நடமாட்டத்துக்குண்டான தடையை நீக்குவது பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக
      இருந்தது. (12.9.1994 பிரபாகரனின் கடிதம்).
      இவ்வாறு கடிதப் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலும், கடற்படைத்
      தாக்குதலும், புலிகளின் எதிர்த்தாக்குதலும் மன்னார் பகுதியில் நடந்து
      கொண்டுதான் இருந்தது. செப்டம்பர் 19-ல் நடைபெற்ற தீவிரமான தாக்குதலில்,
      சிங்களக் கடற்படையின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் 24 வீரர்கள்
      கொல்லப்பட்டனர். கடலில் மூழ்க இருந்த கப்பலின் காப்டனும் இதர அதிகாரிகளும்
      காப்பாற்றப்பட்டு, போர்க் கைதிகளாக்கப்பட்டனர். இவ்வகையான தாக்குதலில்
      புலிகள் மகிழ்ச்சி அடையாத நிலையிலும், செப்டம்பர் 21-ம் தேதி சந்திரிகா
      பிரபாகரனுக்கும் மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில்,
      பேச்சுவார்த்தைக்கான அரசுப் பிரதிநிதிகள் பட்டியல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
      பிரதமரின் செயலாளர் பாலபட்டபெந்தி, சுற்றுலாச் செயலாளர் லயனல் ஃபெர்னாண்டோ,
      பேங்க் ஆப் சிலோன் தலைவர் ஆர். ஆசிர்வாதம், கட்டட நிர்மாணப் பிரிவு தலைவர்
      என்.எல். குணரத்னே ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என்றும், அக்டோபர்
      மாதத்தில் 30-ம் தேதியிலிருந்து 6-ம் தேதிக்குள் ஒரு நாளும், 12-ம்
      தேதியிலிருந்து 15-ம் தேதிக்குள் ஒரு நாளும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும்
      கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். சந்திரிகாவின் பிரதிநிதிகளின் யாழ்ப்பாணம்
      வருகை அக்டோபர் 13, 14-ல், இருந்தால் வசதியாக இருக்கும் என்று பிரபாகரன்
      குறிப்பிட்டதுடன், பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கும் உறுதி அளித்திருந்தார்.
      இதன்படி பலாலி விமான தளத்தில் அவர்கள் வந்து இறங்குவார்கள் என்று சந்திரிகா
      குறிப்பிட்டதையொட்டி, பிரபாகரன் பலாலி என்பதைவிட யாழ். பல்கலைக்கழக
      திறந்தவெளி சரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
      விமானப் பயணம் சரியாக வராது என்று பிரதமர் கருதினால் காங்கேசன் துறைக்கு
      செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் வந்து சேர்ந்தால், அங்கிருந்து எமது ஆட்கள்,
      அந்தப் பிரதிநிதிகளை அழைத்து வந்து சுபாஷ் ஓட்டலில் தங்க வைப்பார்கள். அந்த
      ஓட்டல் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ளதால் அவர்களின் பாதுகாப்புக்கும்
      பிரச்னை இல்லை என்றும் பிரபாகரன் (8.10.1994) தெரிவித்திருந்தார். இதற்கு
      பதிலளித்த பாலபட்டபெந்தி யாழ்ப் பல்கலை திறந்தவெளியில் வந்து பிரதிநிதிகள்
      இறங்குவர் என்றும், அதற்கான "எச்' என்கிற பெரிய அடையாளத்தை வெள்ளை நிறத்தில்
      திடலில் பொறிக்கும்படியும், அதுவே தரையிறங்க வசதியாக இருக்கும் என்றும்
      தெரிவித்திருந்தார். உடன், எதுகுறித்துப் பேசப் போகிறோம் என்ற குறிப்புகளும்
      அதில் இடம்பெற்றிருந்தன.
      1. பொருள்களைக் கொண்டு செல்ல போக்குவரத்து வசதி.
      2. மின் விநியோகம், சாலை மேம்பாடு, நீர்ப்பாசன வசதிகளை உறுதி செய்தல்.
      3. யாழ்ப் பல்கலை. நூலகம் மீள உருவாக்கம்.
      4. போர் நிறுத்தத்துக்கான வழிவகை காணுதல்.
      ஈழத் தமிழர் பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் இந்தப் புதிய
      முயற்சிக்கு அனைத்துத் தரப்பினர் மத்தியிலிருந்தும் வரவேற்பும்
      எதிர்பார்ப்பும் குவிந்தன.
      161: மாத்தையாவுக்கு மரண தண்டனை!!          புலிகளுக்கும், சந்திரிகா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்
      அடிப்படையிலேயே சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. சந்திரிகா அரசு, பொருள்
      போக்குவரத்தை மட்டுமே முக்கிய அமசமாகக் கருதியது. புலிகளோ, பொருளாதாரத் தடையை
      முற்றிலுமாக நீக்குவதை பிரதானமாக்க முடிவு செய்திருந்தனர். அரசு பொருள்
      போக்குவரத்தை சரிசெய்ய முயன்றாலும், தாண்டிக்குளம் பகுதியில் உள்ள ராணுவச்
      சோதனைச்சாவடி அப்பொருள்களைத் தமிழர் பகுதிக்கும் கொண்டு செல்ல தடை விதிக்க,
      அதிகாரம் பெற்றிருந்ததுதான் புலிகளின் அதிருப்திக்குக் காரணம். ""தினசரி
      உபயோகமான தீப்பெட்டியும், சோப்பும், எண்ணெய் வகைகளும் கூட இவ்வாறு சோதனைச்
      சாவடியில் தடுக்கப்படுகிற நிலை. பாதுகாப்பு என்கிற பெயரில் குடையையும், ஷு
      பாலிஷையும் கூட தடுக்கிறார்கள். கடற்புலிகளின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகக்
      கூறி, கடலில் மீன்பிடித் தொழில் செய்வதைத் தடுக்கிறார்கள். இதன் காரணமாக
      நூற்றுக்கணக்கான மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் வறுமையில் உழல்கிறார்கள்.
      இவ்வாறான தடைகள் மூலம், மக்களை கூட்டுத் தண்டனைக்கு உள்படுத்துவது,
      மனிதநேயத்துக்கு எதிரானது'' என்பது புலிகளின் கருத்தாக இருந்தது.
      ""பொருளாதாரத் தடையை நீக்குவதையே பேச்சுவார்த்தையின் அடிப்படையாகக்
      கொண்டிருக்க வேண்டும். சந்திரிகா தமிழர்களின்பால் அக்கறை கொண்டிருப்பதாகப்
      பேசுவது உண்மையென்றால், முந்தைய அரசு விதித்த அனைத்து தடைகளையும் நீக்குவதே
      சரியானதாகும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்'' என்று பிரபாகரன் பேச்சுவார்த்தை
      குழுவினருக்கு உத்தரவிட்டார். இதன்படி பாலசிங்கம், சுப.தமிழ்ச்செல்வன்
      உள்ளிட்டோர் யாழ்ப் பல்கலைக்கழகத் திறந்தவெளித் திடலில், அரசுப் பிரதிநிதிகளை
      வரவேற்று சுண்டிக்குளத்திலுள்ள தலைமையகத்துக்கு அழைத்து வந்தார்கள்.
      புலிகளின் பிரதிநிதிகள், பொருளாதாரத் தடையை நீக்குவது, போர் நிறுத்தம், குடா
      நாட்டில் இருந்து சுலபமாக வன்னிப் பகுதி சென்று வர சங்குப்பிட்டி-கீரைத் தீவு
      சாலைப் போக்குவரத்தைத் திறந்து விடுவது, இதுதொடர்பாக பூநகரி முகாமை அகற்றுவது
      உள்ளிட்டவற்றை வலியுறுத்திப் பேசினார். முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை
      என்றாலும், அடுத்த கட்ட பேச்சுக்கான திட்டத்தில் அது சேர்க்கப்பட்டது.
      கரிகாலனும், பாலபட்டபெந்தியும் கையெழுத்திட்ட அறிக்கையும் அவற்றை
      உறுதிப்படுத்தியது. அறிக்கையில், கரிகாலன், சந்திரிகா அரசிடம் சுமுகமான நல்ல
      சூழலை நாடு எதிர்பார்ப்பதாகக் கூறியதுடன், வடக்கு - கிழக்கில் மக்கள் படும்
      துன்பங்களையும் எடுத்துரைத்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. பிரதமரின்
      செயலாளர் பாலபட்டபெந்தி, சந்திரிகாவின் நல்லெண்ணத் தூதுவர்களாக வந்துள்ள
      தாங்கள், நல்லது செய்ய முயல்வோம் என்றும் உறுதி கூறியிருந்ததாகவும்
      தெரிவிக்கப்பட்டிருந்தது. புலிகளின் பல்வேறு கோரிக்கைகள் உடனடியாகப்
      பரிசீலிக்கப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். அடுத்த கட்ட
      பேச்சுவார்த்தை அக்டோபர் 24, 1994 என்று முடிவானது. அடுத்த கட்டப்
      பேச்சுவார்த்தை, குறிப்பிட்ட தேதியில் நடைபெறாமல் தள்ளிப் போனதற்கு காமினி
      திஸ்ஸநாயக்காவின் கொலை காரணமாக அமைந்தது. அதிபர் தேர்தல் நவம்பரில்
      நடைபெறுவதையொட்டி, காமினி திஸ்ஸநாயக்கா மீண்டும் யுஎன்பி கட்சியில்
      இணைக்கப்பட்டு, அதிபர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். பிரதமராக இருந்த
      சந்திரிகா சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளரானார். அக்டோபர் 23-ஆம் தேதி
      நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காமினி திஸ்ஸநாயக்கா மனித வெடிகுண்டு
      மூலம் கொல்லப்பட்டார். யுஎன்பி என்கிற ஐக்கிய தேசியக் கட்சி, இக்கொலைக்கு
      புலிகளும் சந்திரிகா அரசுமே காரணம் என குற்றம் சாட்டியது. சந்திரிகா இக் கொலை
      குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காது இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகளின்
      விமர்சனத்துக்குப் பயந்து, 24-ஆம் தேதி நடைபெற இருந்த புலிகளுடனான பேச்சு
      வார்த்தையைத் தள்ளி வைத்தார். காமினி திஸ்ஸநாயக்காவின் மரணத்தைத் தொடர்ந்து,
      அவரது மனைவி ஸ்ரீமா திஸ்ஸநாயக்கா அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
      தேர்தல் அட்டவணைப்படி நவம்பர் 9-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.
      யாழ்ப்பாணம் தவிர்த்து நடைபெற்ற தேர்தலில் 62 சத வாக்குகளைப் பெற்று
      சந்திரிகா இலங்கையின் அதிபரானார். (நவம்பர் 12). மக்களுக்கு சந்திரிகா
      விடுத்த செய்தியில், ""அமைதியை விரும்பும் பெரும்பான்மையான மக்களின்
      விருப்பங்களை நிறைவேற்ற உழைப்பேன்'' என்று அறிவித்தார். சந்திரிகா அதிபரான
      நிலையில், அதனை வரவேற்கும் விதமாக புலிகள் இயக்கம் நவம்பர் 12 முதல் 19-ஆம்
      தேதி வரை போர் நிறுத்தம் அறிவித்தனர். ஆனால் இந்தப் போர் நிறுத்தத்தை
      சந்திரிகா கண்டுகொள்ளவில்லை. மாறாக ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாயிற்று.
      வன்னிப் பகுதியில் உள்ள நெடுங்கேணியில் நடைபெற்ற தாக்குதலில் லெப்டினன்ட்
      கர்னல் அமுதன் கொல்லப்பட்டு, அவரது தலையைத் துண்டித்து, ராணுவத்தினர்
      எடுத்துச் சென்றனர். செஞ்சிலுவைச் சங்கம் மூலம், சுப.தமிழ்ச்செல்வன் அமுதனின்
      (மல்லி) துண்டிக்கப்பட்ட தலையை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியிருந்தார்.
      "அதுமட்டுமன்றி சந்திரிகா அதிபரானதையொட்டி, நல்லெண்ண நடவடிக்கையாக ஒருவார
      போர் நிறுத்தம் அறிவித்தப் புலிகளுக்கு சிங்கள ராணுவம் அளித்த பரிசு
      இதுதானா?' என்றும் கேட்டிருந்தார். இதற்குப் பதலிளித்த துணைப் பாதுகாப்பு
      அமைச்சர் கர்னல் அனுருத்த ரத்தவத்தே, போர் நிறுத்தம் குறித்து தங்களுக்குத்
      தெரியாது என்றும் சிதைந்த நிலையில் இருந்த அமுதனின் தலை எரியூட்டப்பட்டது
      என்றும், அதன் சாம்பலை அனுப்பியுள்ளதாகவும் கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்.
      இந்தக் கடிதத்துக்கு வே.பிரபாகரனே பதில் எழுதினார். அந்தப் பதிலில்,
      ""எங்களது ஒருவார போர் நிறுத்தம் குறித்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம்
      அதிபருக்குத் தெரிவித்துவிட்டு, பத்திரிகைகளுக்கு செய்தி அளித்து, அவை
      உள்ளூர் மற்றும் உலகப் பத்திரிகைகளிலும், ஊடகத்திலும் வெளிவந்துள்ளதை
      நினைவூட்டுகிறேன். அரசின் புதிய நிலை எங்களுக்கு அதிர்ச்சியூட்டுகிறது.
      அமுதன் தலை துண்டிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட செய்தி எங்களை கோபமூட்டச்
      செய்யப்பட்ட ஒன்றாகும். இது அமைதியை விரும்பும் அதிபரின் நிலைக்கு
      எதிரானதாகும். எனவே நடந்த சம்பவத்துக்கு உரிய விசாரணையை உடனே மேற்கொண்டு,
      எமக்குத் தெரிவிக்க வேண்டும்'' என்றும் அமைச்சர் அனுருத்த ரத்தவத்தேயிடம்
      வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த துணை பாதுகாப்பு அமைச்சர் கர்னல்
      அனுருத்த ரத்தவத்தே சிங்களத் தலைவர்களின் கொலைகளுக்குப் புலிகளே காரணம் என
      குற்றம்சாட்டினார். இதனால் வெகுண்ட பிரபாகரன், சிங்களத் தலைவர்களின் ஒப்பந்த
      மீறல், 60 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது, பொருளாதாரத் தடை விதித்ததன் மூலம்
      அன்றாடம் பல சாவுகளுக்குக் காரணமானது எல்லாமே சிங்களத் தலைவர்கள்தான் என்று
      குறிப்பிட்டு, கடுமையான வார்த்தைகளில் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று
      பாலசிங்கத்திடம் வலியுறுத்தினார். பிரபாகரனை சமாதானம் செய்த பாலசிங்கம்,
      ""அரசியல் ரீதியாக அவர்களை வெற்றி கொள்ள நிரந்தரத் தீர்வுக்கு
      வழிவகுக்கும்படிதான் அவர்களுக்குக் கடிதம் எழுத வேண்டும்'' என்று கூறினார்.
      அதன்படி எழுதப்பட்ட கடிதத்திற்கு, ""1995 ஜனவரி முதல் இரு வாரங்களுக்குப்
      போர் நிறுத்தம் கடைப்பிடிக்கலாம்'' என்று அனுரத்த ரத்தவத்தே பதில் எழுதினார்.
      அக்கடிதத்தில், ஜனவரி 2-ஆம் நாள், அரசுப் பிரதிநிதிகள் வந்து பேசி ஓர்
      ஒப்பந்தத்திற்கு வருவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். மாத்தையா
      (மகேந்திரராசா) மீது பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில், வேலூர்
      சிறையிலிருந்து தப்பியப் பிரபாகரனின் முன்னாள் மெய்க்காவலர் மூலம்,
      பிரபாகரனைக் கொலை செய்யவும் திட்டம் இருந்தது என்றும், அதன் பிரகாரமே
      சிறையிலேயே தயாரிக்கப்பட்டு, அவர் ரகசியமாக விடுவிக்கப்பட்டார் என்றும், அவர்
      தப்பி வந்ததாகக் கூறியதை நம்பி அவர் மீண்டும் முக்கிய இடத்தைப் பிடித்தார்
      என்பதும்கூட விசாரணையில் தெரிய வந்தது. மாத்தையாவின் கொழும்புப் பயணங்கள்,
      இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் அவருக்குள்ள தொடர்பு எல்லாமே விசாரணையில்
      வெளிவந்தன. இறுதியில் மாத்தையாவுக்கு 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி
      மரண தண்டனை விதிக்கப்பட்டது. திட்டமிட்டபடி மீண்டும் பேச்சுவார்த்தை
      தொடங்கியது. 1995, ஐனவரி 2-ஆம் தேதி, சிங்களக் கடற்படையின் உயர் அதிகாரி
      பிரிகேடியர் ஏ.எஸ். பீரிஸ், காப்டன் பிரசன்னா ராஜரத்னே மற்றும் விடுதலைப்
      புலிகள் சார்பில் சுப. தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துபேசி, புலிகள், சிங்களப்
      படை இரண்டில் யார் யுத்தத்துக்கு முயன்றாலும் அதுகுறித்து 72 மணி நேரத்துக்கு
      முன்பே தெரிவித்து விட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு, அதுவே ஒப்பந்தமாக
      உருவாகி, யாழ்ப்பாணத்தில் இருந்தபடியே பிரபாகரனும், கொழும்பில் இருந்தபடியே
      சந்திரிகாவும் கையொப்பமிட்டனர். இதே ஒப்பந்தத்தில் போர் நிறுத்தத்தைக்
      கண்காணிக்க குழு அமைப்பது என்றும், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்
      தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 6 பகுதிகளில் குழு அமையும்
      என்றும், இதில் அரசுத் தரப்பில் இருவரும், புலிகள் தரப்பில் இருவரும், உலக
      நாடுகளின் பிரதிநிதி ஒருவர் குழுவின் தலைவராகவும் இருந்து கண்காணிப்பார்
      என்றும் முடிவாயிற்று. இந்த ஒப்பந்த நடவடிக்கைகளில் நடுவராகவும், கடிதப்
      பரிமாற்றத்துக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமே உதவி செய்தது
 கிட்டுவின் உயிர்த் தியாகத்தையொட்டி, 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல்

No comments:

Post a Comment